எட்டுத்தொகை

எட்டுத்தொகை என்பது எட்டு நூல்களின் தொகுப்பு. இது சங்க இலக்கியம். இதில் அடங்கிய ஒவ்வொரு நூலும், பலரால் பல காலகட்டங்களில் எழுதப்பட்டு பின்னர் ஒருசேரத் தொகுக்கப்பட்டது.

பத்துப்பாட்டு

பத்துப்பாட்டு என்பது சங்க இலக்கியங்கள் என்று குறிப்பிடப்படும் பழந்தமிழ் நூல்களின் தொகுப்புகளுள் ஒன்றாகும். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை இவை இரண்டும் பதினெண் மேல்கணக்கு நூல்களாகும்.

பதினெண் கீழ்க்கணக்கு

சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய நூல்கள் பதினெண் கீழ்கணக்கு என்னும் பெயர் பெற்றன. இவை மொத்தம் பதினெட்டு நூல்களாகும்.

எட்டுத்தொகை

கி.மு. 3 ஆம் நூற்றாண்டு தொடக்கம் கி.பி. 3 ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தினைச் சங்க காலம் என்பர். இக்காலத்தில் வாழ்ந்த புலவர்களே சங்கப் புலவர்கள். இவர்களால் இயற்றப்பெற்றவை சங்கப் பாடல்கள் எனப்படும். இப்பாடல்களை தமிழ் அறிஞர்கள் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என்று இரு பெரும் பிரிவாகப் பிரித்துள்ளனர்.

எட்டுத்தொகை என்பது எட்டு நூல்களின் தொகுப்பு. இது சங்க இலக்கியம். இதில் அடங்கிய ஒவ்வொரு நூலும், பலரால் பல காலகட்டங்களில் எழுதப்பட்டு பின்னர் ஒருசேரத் தொகுக்கப்பட்டது. இவற்றில், பல பாடல்களில் அவற்றை எழுதியவரது பெயர் காணப்படவில்லை. அகத்தையும் புறத்தையும் பற்றிய பாடல்களாக இந்நூல்களைப் பகுக்கின்றனர். தொழில், அளவு, பாட்டு, பொருள் ஆகியவற்றால் தொகுக்கப்பட்டமையால், தொகை எனப் பெயர் பெற்றது. இத்தொகையுள், ஏறத்தாழ 2352 பாடல்களை 700 புலவர்கள் பாடியுள்ளனர். இவர்களில் 25 அரசர்களும், 30 பெண்பாற்புலவர்களும் உண்டு. ஆசிரியர் பெயர் தெரியாப் பாடல்கள் 102.

எட்டுத்தொகை நூல்களுள், பரிபாடலும், கலித்தொகையும் தவிர்த்து, மற்றவை ஆசிரியப்பாவால் அமைந்து, சில சமயம் வஞ்சிப்பாவால் வரப்பெற்று அமைந்துள்ளன. 3 அடிகள் சிற்றெல்லையாகவும் 140 அடிகள் பேரெல்லையாகவும் பெற்றுள்ளன. இந்நூல்கள், கடைச் சங்க காலத்தில் இயற்றப்பட்டன என்பர். தொகுக்கப்பட்ட காலம் கி.பி. 3 அல்லது 4 ஆம் நூற்றாண்டு என்று கருதுவர்.

வெண்பா

எட்டுத்தொகை நூல்களை கீழ்வரும் பாடல் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று
இத்திறத்த எட்டுத் தொகை

இவ்வெட்டுத் தொகை நூல்களை மூன்று வகையாகப் பிரித்துக்கொள்ளலாம்.

1. அகப்பொருள் பற்றிய நூல்கள்:

நற்றிணை
குறுந்தொகை
ஐங்குறுநூறு
கலித்தொகை
அகநானூறு ஆகிய ஐந்து நூல்களும்,

2. புறப்பொருள் பற்றிய நூல்கள்:

பதிற்றுப்பத்து
புறநானூறு ஆகிய இரண்டும்,

3. அகம் மற்றும் புறப்பொருள் பற்றிய நூல்:

பரிபாடல் ஆகிய ஒன்றும் அடங்கும்.