நெடுநல்வாடை

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

மதுரைக்காஞ்சி

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

மலைபடுகடாம்

சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.

திருமுருகாற்றுப்படை

பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்

பொருநராற்றுப்படை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

சிறுபாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

பெரும்பாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

முல்லைப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

குறிஞ்சிப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

பட்டினப்பாலை

பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

நெடுநல்வாடை


கடவுளை வழிபடும் பெண்கள்

பாடல் வரிகள்:- 036 - 044

வெள்ளி வள்ளி வீங்கு இறைப் பணைத்தோள்,
மெத்தென் சாயல் முத்து உறழ் முறுவல்,
பூங்குழைக்கு அமர்ந்த ஏந்து எழில் மழைக்கண்
மடவரல் மகளிர் பிடகைப் பெய்த
செவ்வி அரும்பின் பைங்கால் பித்திகத்து . . . .[40]

அவ்விதழ் அவிழ் பதம் கமழப் பொழுது அறிந்து
இரும்பு செய் விளக்கின் ஈர்ந்திரி கொளீஇ,
நெல்லும் மலரும் தூஉய், கைதொழுது,
மல்லல் ஆவணம் மாலை அயர . . . .[36 - 44]

பொருளுரை:

வெள்ளைச் சங்கு வளையல்களையும், இறுகின முன்கையையும், மூங்கில் போலும் தோளையும், மென்மையான சாயலையும், முத்தைப் போன்ற பற்களையும், அழகிய காதணிக்கு ஒப்ப உயர்ந்த அழகிய ஈரக்கண்களையும் மடப்பத்தையும் உடைய பெண்கள், பூந்தட்டிலே இட்டு வைத்த மலரும் பருவம் அமைந்த பச்சைக் காம்பைக் கொண்ட பிச்சி மலர்களின் அழகிய இதழ்கள் மலர்ந்து நறுமணம் கமழ, நேரத்தை அறிந்து, இரும்பினால் செய்த விளக்கின் எண்ணையைக் கொண்ட திரியைக் கொளுத்தி, நெல்லும் மலரும் தூவி, கையால் தொழுது, வளப்பமான கடைவீதியில், மாலை நேரத்தில் கொண்டாட,

குறிப்பு:

நெல்லும் மலரும்: நெடுநல்வாடை 43 - நெல்லும் மலரும் தூஉய்க்கை தொழுது, முல்லைப்பாட்டு 8-10 - நெல்லொடு நாழி கொண்ட நறு வீ முல்லை அரும்பு அவிழ் அலரி தூஉய்க் கைதொழுது, புறநானூறு 280 - நெல் நீர் எறிந்து விரிச்சி ஓர்க்கும் செம்முது பெண்டின் சொல்லும். முத்தைப் போன்ற பற்கள்: அகநானூறு 27 - முத்தின் அன்ன நகைப் பொலிந்து இலங்கும் எயிறு, ஐங்குறுநூறு 185 - இலங்கு முத்து உறைக்கும் எயிறு, ஐங்குறுநூறு 380 - முத்து ஏர் வெண் பல், கலித்தொகை 64 - முத்து ஏர் முறுவலாய், கலித்தொகை 93 - முத்து ஏர் முறுவலாய், கலித்தொகை 97 - முத்து ஏர் முறுவலாய், கலித்தொகை 97 - முத்து ஏய்க்கும் வெண் பல், கலித்தொகை 131 - முத்தின் தகை ஏய்க்கும் முறுவலாய், பரிபாடல் 8 - எழில் முத்து ஏய்க்கும் வெண்பல், பரிபாடல் திரட்டு 2 - முத்த முறுவல், பொருநராற்றுப்படை 27 - துவர் வாய்ப் பல உறு முத்தின் பழி தீர் வெண்பல், சிறுபாணாற்றுப்படை 57 - நகாஅர் அன்ன நளி நீர் முத்தம், நெடுநல்வாடை 37 - முத்து உறழ் முறுவல்.

சொற்பொருள்:

வெள்ளி வள்ளி - வெள்ளை வளையல்கள், வீங்கு இறை - இறுகின முன்கை, பணைத்தோள் - மூங்கில் போலும் தோள், மெத்தென் சாயல் - மென்மையான சாயல், முத்து உறழ் முறுவல் - முத்தைப் போன்ற பற்கள் (உறழ் - உவம உருபு), பூங்குழைக்கு அமர்ந்த - சிறப்பான காதணிக்கு ஒப்ப, ஏந்து எழில் மழைக்கண் - உயர்ந்த அழகிய ஈரக்கண்கள், மடவரல் மகளிர் - மடப்பத்தை உடைய பெண்கள், பிடகைப் பெய்த - பூந்தட்டிலே இட்டு வைத்த, செவ்வி அரும்பின் பைங்கால் பித்திகத்து - மலரும் பருவம் அமைந்த பச்சைக் காம்பைக் கொண்ட பிச்சி மலர்களின், அவ்விதழ் அவிழ் பதம் - அழகிய இதழ்கள் மலரும் பதம், கமழ - நறுமணம் கமழ, பொழுது அறிந்து - நேரத்தை அறிந்து, இரும்பு செய் விளக்கின் ஈந்திரி கொளீஇ - இரும்பினால் செய்த விளக்கின் எண்ணையைக் கொண்ட திரியைக் கொளுத்தி (கொளீஇ - சொல்லிசை அளபெடை), நெல்லும் மலரும் தூஉய் - நெல்லும் மலரும் தூவி (தூஉய் - இன்னிசை அளபெடை), கைதொழுது - கையால் தொழுது, மல்லல் ஆவணம் - வளப்பமான கடைவீதி, மாலை - மாலை நேரம், அயர - கொண்டாட