நெடுநல்வாடை
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
மதுரைக்காஞ்சி
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
மலைபடுகடாம்
சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.
திருமுருகாற்றுப்படை
பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்
பொருநராற்றுப்படை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
சிறுபாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
பெரும்பாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
முல்லைப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
குறிஞ்சிப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
பட்டினப்பாலை
பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
நெடுநல்வாடை

மழைக்காலச் செழிப்பு
பாடல் வரிகள்:- 013 - 028
பொன் போல் பீரமொடு புதல் புதல் மலரப்
பைங்கால் கொக்கின் மென்பறைத் தொழுதி . . . .[15]
இருங்களி பரந்த ஈர வெண்மணல்
செவ்வரி நாரையொடு எவ்வாயும் கவரக்
கயல் அறல் எதிரக் கடும் புனல் சாஅய்ப்
பெயல் உலந்து எழுந்த பொங்கல் வெண் மழை
அகல் இரு விசும்பில் துவலை கற்ப, . . . .[20]
அங்கண் அகல் வயல் ஆர் பெயல் கலித்த
வண் தோட்டு நெல்லின் வரு கதிர் வணங்க,
முழு முதல் கமுகின் மணி உறழ் எருத்தின்
கொழு மடல் அவிழ்ந்த குழூஉக்கொள் பெருங்குலை
நுண் நீர் தெவிள வீங்கிப் புடை திரண்டு . . . .[25]
தெண் நீர் பசுங்காய் சேறு கொள முற்ற,
நளி கொள் சிமைய விரவு மலர் வியன் காக்
குளிர் கொள் சினைய குரூஉத் துளி தூங்க . . . .[13 - 28]
பொன்போற் பீரமொடு புதற்புதன் மலரப்
பைங்காற் கொக்கின் மென்பறைத் தொழுதி . . . .[15]
யிருங்களி பரந்த வீர வெண்மணற்
செவ்வரி நாரையோ டெவ்வாயுங் கவரக்
கயலற லெதிரக் கடும்புனற் சாஅய்ப
பெயலுழந் தெழுந்த பொங்கல் வெண்மழை
யகலிரு விசும்பிற் றுவலை கற்ப . . . .[20]
வங்க ணகல்வய லார்பெயற் கலித்த
வண்டோட்டு நெல்லின் வருகதிர் வணங்க
முழுமுதற் கமுகின் மணியுற ழெருத்திற்
கொழுமட லவிழ்ந்த குழூஉக்கொள் பெருங்கலை
நுண்ணீர் தெவிள வீங்கிப் புடைதிரண்டு . . . .[25]
தெண்ணீர்ப் பசுங்காய் சேறுகொள முற்ற
நனிகொள் சிமைய விரவுமலர் வியன்காக்
குளிர்கொள் சினைய குரூஉத்துளி தூங்க
பொருளுரை:
மென்மையான கொடியையுடைய முசுண்டையின் திரண்ட புறத்தையுடைய வெள்ளை மலர்கள் பொன்னைப் போன்ற பீர்க்கை மலர்களுடன் புதர்கள்தோறும் மலர, பச்சைக் கால்களையுடைய கொக்கின் மென்மையான இறகுகளையுடைய கூட்டம் கரிய சேறு பரந்த ஈர வெள்ளை மணலில் சிகப்பு வரியினையுடைய நாரையுடன் எவ்விடத்திலும் நீரின் ஓட்டத்திற்கு எதிராக நீந்தும் கயல் மீன்களைப் பிடித்துத் தின்பதற்காகக் காத்து நிற்க, மிக்க நீரைப் பொழிந்து தங்களுடைய மழை பெய்யும் தன்மை கெட்டதால் எழுந்து பொங்கும் வெள்ளை மேகங்கள் அகன்ற பெரிய வானில் துளிகள் தூவுதற்குப் புதிதாக கற்க, அங்கே அகன்ற வயலில் மிகுந்த மழையினால் வளப்பமான இலைகளையுடைய நெல்லின் முதிர்ந்த கதிர் முற்றி வளைய, பெரிய அடியையுடைய கமுக மரங்களின் நீலமணியை ஒத்தக் கழுத்தில் பருத்த பாளை விரிந்து திரட்சியைக் கொண்ட பெரிய குலைகள் நுண் நீருடன் திரண்டு விளங்கி பக்கங்கள் திரண்டு தெளிந்த நீரினைக் கொண்ட பசுமையான காய்கள் இனிமை கொள்ளும்படி முற்ற, அடர்ந்த மலை உச்சியில் கலந்த மலர்களையுடைய பெரிய சோலையின் குளிர்ந்த மரக்கிளைகளில் நிறத்தையுடைய நீர்த் துளிகள் தொங்க,
குறிப்பு:
துவலை கற்ப (20) - பொ. வே. சோமசுந்தரனார் உரை - முகில்கள் தம்பால் மிக்குள்ள நீரைப் போற்றாமல் மிக்குப் பெய்து விட்டுப் பின்னர் பின்னர் நீர் வறண்ட வெண் மேகமாகி இன்னும் மிக்குப் பெய்தல் தவறு என்று அறிந்தனவாய் இனியேனும் சிறிதாகப் பெய்து பழகுவோம் எனக் கருதி அங்ஙனம் பெய்ததற்குப் பயிலுமாறுப் போலத் தூவ என்று ஒரு பொருள் தோன்றக் கற்ப என்றார். ஐங்குறுநூறு 461 - வான் பிசிர்க் கருவியின் பிடவு முகை தகையக் கான் பிசிர் கற்பக் கார் தொடங்கின்றே. மதுரைக்காஞ்சி 400 - தகை செய் தீம் சேற்று இன் நீர்ப் பசுங்காய். நாரை, குரூஉ (28) - நிறம், ‘குருவும் கெழுவும் நிறமாகும்மே’ (தொல்காப்பியம், உரியியல் 5).
சொற்பொருள்:
புன் கொடி முசுண்டை - மென்மையான கொடியையுடைய முசுண்டை, பொதிப்புற வான் பூ - திரண்ட புறத்தையுடைய வெள்ளை மலர்கள், பொன் போல் பீரமொடு - பொன்னைப் போன்ற பீர்க்கை மலர்களுடன், புதல் புதல் மலர - புதர்கள்தோறும் மலர, பைங்கால் கொக்கின் - பச்சைக் கால்களையுடைய கொக்கின், மென் பறைத் தொழுதி - மென்மையான இறகுகளையுடைய கூட்டம், இருங்களி - கரிய சேறு, பரந்த - பரந்த, ஈர வெண்மணல் - ஈர வெள்ளை மணல், செவ்வரி நாரையொடு - சிகப்பு வரியினையுடைய நாரையுடன், எவ்வாயும் கவர - எவ்விடத்திலும் கவர, கயல் அறல் எதிர - கயல் மீன்கள் நீரோட்டத்திற்கு எதிராக நீந்த, கடும் புனல் சாஅய் - மிக்க நீரைப் பொழிந்து குறைய (சாஅய் - இசை நிறை அளபெடை), பெயல் உலர்ந்து - மழை பெய்யும் தன்மைக் கெட்டு, எழுந்த - எழுந்த, பொங்கல் வெண் மழை - பொங்கும் வெள்ளை மேகங்கள், அகல் இரு விசும்பில் - அகன்ற பெரிய வானில், துவலை - துளிகள், கற்ப - கற்க, அங்கண் - அங்கே, அகன் வயல் - அகன்ற வயல், ஆர் பெயல் - மிகுந்த மழை, கலித்து - மிகுந்து, தழைத்து, எழுந்து, வண் தோட்டு நெல்லின் - வளப்பமான இலைகளையுடைய நெல்லின், வரு கதிர் வணங்க - வளர்ந்த கதிர் முற்றி வளைய, முழு முதற் கமுகின் - பெரிய அடியையுடைய கமுக மரங்களின், மணி உறழ் - நீலமணியை ஒத்த, எருத்தின் - கழுத்தில், கொழு மடல் - பருத்த இலைகள், அவிழ்ந்த - பாளை அவிழ்ந்த, குழூஉக் கொள் பெருங்குலை - திரட்சியைக் கொண்ட பெரிய குலைகள், நுண் நீர் - நுண் நீர், தெவிள வீங்கி - திரண்டு விளங்கி, புடை திரண்டு - பக்கங்கள் திரண்டு, தெண் நீர் - தெளிந்த நீர், பசுங்காய் - பசுமையான காய்கள், சேறு கொள முற்ற - இனிமைக் கொள்ளும்படி முற்ற, நளி கொள் - அடர்ந்த, சிமைய - மலை உச்சியில், விரவு மலர் - கலந்த மலர்கள், வியன் கா- பெரிய சோலை, குளிர் கொள் சினைய - குளிர்ந்த மரக்கிளைகளில், குரூஉத் துளி - நிறத்தையுடைய துளிகள், தூங்க - தொங்க