நெடுநல்வாடை

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

மதுரைக்காஞ்சி

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

மலைபடுகடாம்

சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.

திருமுருகாற்றுப்படை

பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்

பொருநராற்றுப்படை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

சிறுபாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

பெரும்பாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

முல்லைப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

குறிஞ்சிப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

பட்டினப்பாலை

பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

நெடுநல்வாடை


இடையர் நிலை

பாடல் வரிகள்:- 003 - 008

ஆர்கலி முனைஇய கொடுங்கோல் கோவலர்,
ஏறுடை இன நிரை வேறு புலம் பரப்பிப்
புலம் பெயர் புலம்பொடு கலங்கிக் கோடல் . . . .[5]

நீடு இதழ்க் கண்ணி நீர் அலைக் கலாவ,
மெய்க்கொள் பெரும் பனி நலியப் பலருடன்
கைக்கொள் கொள்ளியர் கவுள் புடையூஉ நடுங்க . . . .[3 - 8]

பொருளுரை:

வெள்ளத்தை வெறுத்த கொடிய கோலையுடைய இடையர்கள் ஏற்றையுடைய நிரைகளை (பசு, எருமை, ஆடு) வேறு நிலங்களில் மேய விட்டு, நிலத்தைவிட்டு நீங்கிய தனிமையால் கலங்கி, நீண்ட இதழ்களையுடைய வெண்காந்தள் மலர்க் கண்ணிகளிலிருந்து நீர் அலைத்ததால் உடம்பில் கொண்ட பெரும் குளிர்ச்சிக்கு வருந்தி, பலருடன் சேர்ந்து கையை நெருப்பிலே காய்த்தவர்கள் தங்கள் கையால் தங்களுடைய கன்னத்தைத் தட்டி நடுங்க,

குறிப்பு:

கொடுங்கோல் - பொ. வே. சோமசுந்தரனார் உரை - அகநானூறு 17, அகநானூறு 74, அகநானூறு 195 - வளைந்த கோல், நெடுநல்வாடை 3, முல்லைப்பாட்டு 15 - கொடிய கோல், வேங்கடசாமி நாட்டார் உரை - அகநானூறு 74, அகநானூறு 195 - வளைந்த கோல், அகநானூறு 17 - கொடிய கோல், நச்சினார்க்கினியர் உரை - முல்லைப்பாட்டு 15 - கொடிய கோல். கொடுங்கோல் (3) - பொ. வே. சோமசுந்தரனார் உரை- ஆ முதலியவற்றை அலைந்து அச்சுறுத்தும் கோலாகலான் கொடுங்கோல். இனி வளைந்த கோல் எனினுமாம். கோவன் நிரைகட்கு உணவாகிய தழைகளை வளைத்து முறித்தல் பொருட்டு தலை வளைந்த கோல். கைக்கொள் கொள்ளியர் கவுள் புடையூஉ நடுங்க (8) - நச்சினார்க்கினியர் உரை - கையை நெருப்பிலே காய்த்து அதிற்கொண்ட வெம்மையை கவுளிலே அடுத்தலிற் கைக்கொள் கொள்ளியர் என்றார், கையிடத்தே கொண்ட நெருப்பினை உடையவராய் பற்பறை கொட்டி நடுங்கி நிற்ப.

சொற்பொருள்:

ஆர்கலி முனைஇய - வெள்ளத்தை வெறுத்த (முனைஇய - சொல்லிசை அளபெடை), கொடுங்கோல் கோவலர் - கொடிய கோலையுடைய கோவலர், வளைந்த கோலையுடைய இடையர்கள், ஏறுடை (ஏறு = ஆண்) இன நிரை வேறு புலம் பரப்பி - ஏற்றையுடைய நிரைகளை (பசு, எருமை, ஆடு) வேறு நிலங்களில் பரப்பி, புலம் பெயர் புலம்பொடு - நிலத்தைவிட்டு நீங்கிய தனிமையால், நிலத்தைவிட்டு நீங்கிய வருத்தத்தால், கலங்கி - கலங்கி, கோடல் நீடு இதழ்க் கண்ணி - நீண்ட இதழ்களையுடைய வெண்காந்தள் மலர்க் கண்ணி, நீரலைக் கலாவ - நீர் அலைத்ததால், மெய்க்கொள் பெரும் பனி நலிய - உடம்பில் கொண்ட பெரும் குளிர்ச்சிக்கு வருந்தி, பலருடன் - பலருடன், கைக்கொள் கொள்ளியர் - கையை நெருப்பிலே காய்த்தவர்கள், கவுள் புடையூஉ நடுங்க - கன்னம் புடைத்து நடுங்க (புடையூஉ - இன்னிசை அளபெடை), பற்பறை கொட்டி நடுங்க