ஐந்திணை ஐம்பது

'ஐந்திணை ஐம்பது' முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்ற ஐந்திணைக்கும் பத்துப் பாடல்களைப் பெற்றுள்ளமையால் 'ஐந்திணை ஐம்பது' எனப் பெயர் பெற்றது.

நாலடியார்

நாலடியார் பதினெண் கீழ்க்கணக்கு நூல் தொகுப்பைச் சேர்ந்த ஒரு தமிழ் நீதி நூல். இது நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாக்களால் ஆனது.

நான்மணிக்கடிகை

நான்மணிக்கடிகை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள், ஒன்று. இது ஒரு நீதி நூல். விளம்பி நாகனார் என்னும்

இனியவை நாற்பது

பூதஞ்சேந்தனார் இயற்றியது இனியவை நாற்பது. 40 வெண்பாக்களைக் கொண்டது. நான்கு பாடல்களில் இன்பம் தருவன

இன்னா நாற்பது

இன்னா நாற்பதில் கடவுள் வாழ்த்து நீங்கலாக நாற்பது பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலிலும் நான்கு கருத்துக்களைக் கொண்டு

திரிகடுகம்

திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். திரிகடுகம் என்பது

ஆசாரக் கோவை

மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஆசாரங்களை அதாவது ஒழுக்கங்களை எடுத்துக்கூறும் ஒரு நூல் ஆசாரக்கோவை. பண்டைக்காலத்

சிறுபஞ்சமூலம்

சிறுபஞ்சமூலம் என்பது ஐந்து சிறிய வேர்கள் என்று பொருள்படும். அவையாவன சிறுவழுதுணை வேர், நெருஞ்சி வேர், சிறுமல்லி வேர், பெருமல்லி வேர்

முதுமொழிக்காஞ்சி

முதுமொழி என்பது பழமொழி என்னும் சொற்பொருளோடு தொடர்புடையது. காஞ்சி என்பது மகளிர் இடையில் அணியும் ஒருவகை அணிகலக் கோவையையும்

பழமொழி நானூறு

பழமொழி நானூறு சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள்

ஏலாதி

'ஏலாதி' என மருத்துவ நூல்களில் கூறப்படுவது ஏலம் ஆதியான ஆறு பொருள்கள் சேர்ந்த ஒரு வகைச் சூர்ணம். ஏலம் ஒரு பங்கு, இலவங்கப்பட்டை இரண்டு பங்கு,

திருக்குறள்

திருக்குறள் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் வரிசையில் "முப்பால்" என்னும் பெயரோடு விளங்குகின்றது. அறம், பொருள், இன்பம்

கார் நாற்பது

கார் நாற்பது அகப்பொருள் பற்றிய கீழ்க்கணக்கு நூல்களில் சிறியது. கார் காலத்தின் தோற்றம் ஒவ்வொரு செய்யுளிலும் கூறப்படுகின்றமையாலும்,

திணைமொழி ஐம்பது

திணைமொழி ஐம்பது குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் ஐந்திணைகளுக்கும் பத்துப் பாடல்கள் வீதம் உள்ளன. அதனால் இந்நூல்

ஐந்திணை எழுபது

ஐந்திணை எழுபது ஐந்திணைகளில் ஒவ்வொன்றிற்கும் பதினான்கு பாடல்களைக் கொண்டு, எழுபது பாடல்களில் இந்நூல் அமைந்துள்ளது. இந் நூலின் முதலில் விநாயகரைக்

திணைமாலை நூற்றைம்பது

திணைமாலை நூற்றைம்பது பண்டைத் தமிழ் நூற் தொகுப்பான பதினெண்கீழ்க்கணக்கில் அடங்கியது. 153 பாடல்களைக் கொண்ட இது ஒரு அகப்பொருள் சார்ந்த நூல்.

கைந்நிலை

'கை' என்பது ஒழுக்கம் என்றும் பொருள்படும். ஐந்திணை ஒழுக்கம் பற்றியதே இந்நூலாகும். ஒவ்வொரு திணைக்கும் பன்னிரண்டு பாடலாக அறுபது பாடல்கள் இந் நூலில் உள்ளன.

களவழி நாற்பது

களவழி நாற்பது போர்க்களம் பற்றிய பாடல்களின் தொகுதியாகும். இந் நூலில் உள்ள பாடல்கள் எல்லாம் களத்து என்ற சொல்லை இறுதியில் கொண்டு முடிதல் கவனிக்கத் தக்கது.

ஐந்திணை ஐம்பது
பதினெண் கீழ்க்கணக்கு

'ஐந்திணை ஐம்பது' முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்ற ஐந்திணைக்கும் பத்துப் பாடல்களைப் பெற்றுள்ளமையால் 'ஐந்திணை ஐம்பது' எனப் பெயர் பெற்றது.

ஐந்திணை ஐம்பது - பதினெண் கீழ்க்கணக்கு

'ஐந்திணை ஐம்பது' முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்ற ஐந்திணைக்கும் பத்துப் பாடல்களைப் பெற்றுள்ளமையால் 'ஐந்திணை ஐம்பது' எனப் பெயர் பெற்றது. பாயிரச் செய்யுள் ஒன்று நூலின் இறுதியில் அமைக்கப் பெற்றுள்ளது. இந் நூலின் ஆசிரியர் மாறன் பொறையனார். இப் பெயரில் மாறன் என்பது பாண்டியனைக் குறிப்பதாயும், பொறையன் என்பது சேரனைக் குறிப்பதாயும் உள்ளன. எனவே, இவர் இந்த இரு பேரரசரோடும் தொடர்புடையவராய், இவர்களுக்கு நட்பினராய் இருத்தல் கூடும். பொறையனார் என்பது இவரது இயற்பெயர் என்றும், மாறன் என்பது இவர் தந்தையார் பெயர் என்றும் கொள்ள இடமுண்டு. இந் நூலின் முதற் செய்யுளில் உவமையாக மாயோன், முருகன், சிவன் மூவரையும் குறித்துள்ளார். இதனால் இவரை வைதிக சமயத்தவர் என்று கருதலாம். பாயிரப் பாடலில் வரும் 'வண் புள்ளி மாறன் பொறையன்' என்ற தொடரைக் கொண்டு, இவர் அரசாங்க வரவு செலவுத் தொடர்புடைய ஓர் அதிகாரியாயிருக்கலாம் என்பர் சிலர். 'வண் புள்ளி' என்பதை வளப்பமான புள்ளி என்னும் ஊர் என்றும் கொள்ள இடமுண்டு.

பாயிரம்
பண்புள்ளி நின்ற பெரியார் பயன்தெரிய
வண்புள்ளி மாறன் பொறையன் புணர்த்தியாத்த
ஐந்திணை ஐம்பதும் ஆர்வத்தின் ஓதாதார்
செந்தமிழ் சேரா தவர்.

மெய்யம்மையான இலக்கப் புள்ளி யிடுவதாகிய கணக்கிற் றேர்ச்சியுள்ள மாறன் பொறையன் என்ற சிறப்புப்பெயர் பெற்ற புலவர் பெருமான், மக்கட் பண்புகளை, ஆராய்ந்தறிய அவாவிக் கொண்டிருக்கும் படியான, உயர்ந்தோராகிய உலகமக்கள், நூற்பயனாகிய அகப் பொருள்களின் நுட்பங்களை, நன்குணரும்படியாக, அகப்பொருட்டுறைகள் பலவற்றை சேர்த்து, செய்யுள் வடிவமாக இயற்றிய, முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்ற ஐந்தொழுக்கங்களினையும் தம்முள் அமைத்துக் கொண்டுள்ள ஐம்பது செய்யுட்களையும், விருப்பத்துடன், படித்து அறியாத மக்கள், செவ்வையான தமிழ் மொழியின் பெரும் பயனை, அடையப்பெறாதவர்களாவார்கள்.

1. முல்லை

நிலம் :- காடும் காடு சேர்ந்த இடமும்.
ஒழுக்கம் :- ஆற்றி இருத்தலும் இருத்தல் நிமித்தமும்.

பாடல் - 01
மல்லர்க் கடந்தான் நிறம்போல் திரண்டெழுந்து
செல்வக் கடம்பமார்ந்தான் வேல்மின்னி - நல்லாய்
இயங்கெயில் எய்தவன தார்பூப்ப ஈதோ
மயங்கி வலனேருங் கார். . . . . [01]

விளக்கம்:

"(தலைவியே!) மல்லர்களை அழித்த திருமாலின் கரிய நிறம் போன்று கருத்து எழுந்து சிறப்புப் பொருந்திய கடம்ப மரத்தில் அமர்ந்திருக்கக் கூடிய முருகப் பெருமானுடைய வேலாயுதத்தைப் போல் மின்னி விளங்குகின்ற மூன்று கோட்டைகளாய் நின்ற அரக்கர்களை அழித்த சிவபெருமானுடைய மாலைபோல் பூத்து இப்பொழுது மயங்கி வெற்றியைத் தரும் கார்காலம் வந்துவிட்டது. ஆதலின் நம் தலைவர் இன்றே வந்துவிடுவார். நீ வருந்த வேண்டாம்" என்று தலைமகளுக்குத் தோழி கூறினாள்.

பாடல் - 02
அணிநிற மஞ்ஞை அகவ இரங்கி
மணிநிற மாமலைமேல் தாழ்ந்து - பணிமொழி!
கார்நீர்மை கொண்ட கலிவானம் காண்தொறும்
பீர்நீர்மை கொண்டன தோள். . . . . [02]

விளக்கம்:

"மென்மையான சொற்களைப் பேசும் தோழியே! அழகிய மயில்கள் கூவியழைக்கும்படி இடித்து முழங்கிப் பெரிய மலைகளில் படிந்து மழைபெய்யும் போல் காணப்பட்ட கார்மேகத்தை நான் காணும்போது ஆற்றாமை மிகுந்து என் தோள்கள் பீர்க்கம்பூ நிறத்தில் பசலை பெற்று விளங்கின" என்று தலைவி தோழியிடம் கூறினாள்.

பாடல் - 03
மின்னும் முழக்கும் இடியும்மற் றின்ன
கொலைப்படை சாலப் பரப்பிய முல்லை
முகைவென்ற பல்லினாய்! இல்லையோ? மற்று
நமர்சென்ற நாட்டுள்இக் கார். . . . . [03]

விளக்கம்:

"தலைவியே! மின்னலும், இடியும், இடியின் முழக்கமும் இவைபோன்ற இன்ன பிறவுமாகிய பிரிந்தாரைக் கொல்லும் படைக்கலங்கள் மிகுதியாகப் பரப்புவதற்கு இல்லாமல் போய்விட்டதோ? முல்லைப் பூவினை வென்ற பற்களை உடைய பெண்ணே! நம்முடைய தலைவன் சென்ற நாட்டில் இக்கார்காலம் இல்லையோ?" என்று குறிப்பாகக் கேட்கிறாள்.

பாடல் - 04
உள்ளார்கொல் காதலர் ஒண்டொடி நம்திறம்
வள்வார் முரசின் குரல்போல் இடித்துரறி
நல்லார் மனங்கவரத் தோன்றிப் பணிமொழியைக்
கொல்வாங்குக் கூர்ந்த(து)இக் கார். . . . . [04]

விளக்கம்:

"ஒளிமிக்க அழகிய வளையல் அணிந்த தலைவியே! இந்த மேகக் கூட்டமானது தோல்வாரினால் கட்டப்பட்ட முரசின் ஒலியைப் போன்று இடியினை வீழ்த்தி முழங்கித் தலைவரைப் பிரிந்த நங்கையரின் உள்ளம் வேறுபடுமாறு தோன்றித் தலைவரால் நமக்குக் கூறப்பட்ட இன்சொற்களைச் சிதைப்பது போன்று மிகுந்து காணப்படுகின்றது. நம் காதலர் நம்மியல்பை நினைத்துப் பார்க்க மாட்டாரோ? நிச்சயம் நினைப்பர். ஆதலின் இன்றே வருவார்" என்று கார்ப்பருவம் கண்டு வருந்திய தலைவியைத் தோழி தேற்றினாள்.

பாடல் - 05
கோடுயர் தோற்றம் மலைமேல் இருங்கொண்மூக்
கூடி நிரந்து தலைபிணங்கி - ஓடி
வளிகலந்து வந்துறைக்கும் வானம்காண் தோறும்
துளிகலந்து வீழ்தருங் கண். . . . . [05]

விளக்கம்:

என் இனிய தோழியே! உயர்ந்த சிகரங்களோடு கூடிய மலைகளின் மீது பெரிய மேகக் கூட்டங்கள் திரண்டு ஒன்று கூடி, ஒன்றோடொன்று மோதி, காற்றோடு கலந்து மழைபொழியத் துடிக்கும்படியான, வானத்தைக் காணும் பொழுதெல்லாம் என் கண்கள் கண்ணீர்த் துளிகளைப் துளிர்விக்கும்.

பாடல் - 06
முல்லை நறுமலர் ஊதி இருந்தும்பி
செல்சார் வுடையார்க் கினியவாய் - நல்லாய்மற்(று)
யாரும்இல் நெஞ்சினேம் ஆகி யுறைவேமை
ஈரும் இருள்மாலை வந்து. . . . . [06]

விளக்கம்:

மாலைக் காலமாகிய வாள் தோன்றி, கரியவண்டுகள் முல்லை மலர்களில் படிந்து ரீங்காரம் செய்து, தலைவரைச் சார்ந்திருக்கின்ற மகளிர்க்கு இன்பத்தைச் செய்கின்றது. ஆனால் பிரிவினால் தனித்துத் துணையில்லாது தவிக்கின்ற உள்ளத்தோடு வாழ்கின்ற எம்முயிரைப் பிளக்கின்றது. யான் எவ்வாறு பொறுத்துக்கொள்வேன்.

பாடல் - 07
தேரோன் மலைமறைந்த செக்கர்கொள் புன்மாலை
ஆர்ஆனபின் ஆயன் உவந்தூதும் - சீர்சால்
சிறுகுழல ஓசை செறிதொடி! வேல்கொண்(டு)
எறிவது போலும் எனக்கு. . . . . [07]

விளக்கம்:

கைகளில் நிறைந்த வளையல்களைக் கொண்டுள்ள தோழியே, ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் வந்த கதிரவன் மாலையில் மேற்குத் திசையில் மறைந்த காலத்து சிவந்ததாய்க் காணப்படும் மாலைப்பொழுதில் அருமையான பசுக்கூட்டங்களின் பின்னால் வரும் இடையன் மகிழ்ச்சியோடு ஊதுகின்ற சிறு குழலின் இனிய ஓசையானது எனக்கு வேல் கொண்டு தாக்குவதுபோல் மிகுந்த துன்பத்தைத் தருகின்றது.

பாடல் - 08
பிரிந்தவர் மேனிபோல் புல்லென்ற வள்ளி
பொருந்தினர் மேனிபோல் பொற்பத் - திருந்திழாய
வானம் பொழியவும் வாரார்கொல் இன்னா
கானம் கடந்துசென் றார். . . . . [08]

விளக்கம்:

வள்ளி - கொடி, பொற்ப - பொலிய, கானம் - காடு.

"அழகிய அணிகலன்களை அணிந்துள்ள தலைவியே! காதலரைப் பிரிந்த காதலியரின் வடிவம் போலப் பொலிவின்றிக் காணப்பட்ட கொடிகள் மீண்டும் காதலரோடு கூடிவாழும் காதலியரின் வடிவம் போலப் பொலிவு பெறும்படி மழை பொழிதலைக் கண்டும் துன்பத்தைத் தருகின்ற காடுகளையெல்லாம் கடந்து பிரிந்து சென்ற நம் காதலர் வரமாட்டாரா? விரைவில் வருவார் வருந்தாதே" என்று தோழி தலைவியைத் தேற்றினாள்.

பாடல் - 09
வருவர் வயங்கிழாய் வாள்ஒண்கண் நீர்கொண்(டு)
உருகி யுடன்றழிய வேண்டா - தெரிதியேல்
பைங்கொடி முல்லை அவிழ்அரும்(பு) ஈன்றன
வம்ப மறையுறக் கேட்டு. . . . . [09]

விளக்கம்:

"அழகிய அணிகலன்களை அணிந்துள்ள தலைவியே! ஆராய்ந்து பார்ப்பின் காலமல்லாத காலத்தில் புதிதாகத் தோன்றிய மேகங்கள் கூடி முழங்கக் கேட்ட முல்லைக் கொடிகள் அரும்புகளைத் தோற்றுவித்தன என்பது தெரியவரும். ஆகவே நம் தலைவர் கார்ப்பருவம் வரும்போது தவறாது வந்து சேர்வர். ஆதலின் கண்களில் நீர் பெருகத் துன்புற்று அழிய வேண்டா" என்று தோழி தலைவிக்கு ஆறுதல் கூறினாள்.

பாடல் - 10
நூல்நின்ற பாக! தேர் நொவ்விதாச் சென்றீக
தேன்நவின்ற கானத்து எழில்நோக்கித் - தான்நவின்ற
கற்புத்தாழ் வீழ்த்துக் கவுண்மிசைக் கையூன்றி
நிற்பாள் நிலையுணர்கம் யாம். . . . . [10]

விளக்கம்:

"கலை நூல்களை நன்றாகக் கற்றறிந்த தேர்ப்பாகனே! வண்டுகள் இசைபாடும் காட்டின் அழகினைப் பார்த்து, தான் நாள்தோறும் போற்றி வந்த கற்பு நெறியினைக் காப்பாற்றி, கன்னத்தின் மீது இடக்கையினை ஊன்றி, வழிமேல் விழி வைத்துக் காத்து நிற்பவளாகிய என் தலைவியின் நிலையை நாம் சென்று காண்போம். அதற்குத் தகுதியாக நமது தேர் விரைவாகச் செல்லட்டும்" என்று தலைமகன் தேர்ப்பாகனை நோக்கிக் கூறினான்.

2. குறிஞ்சி

நிலம் :- மலையும் மலை சார்ந்த இடமும்.
ஒழுக்கம் :- புணர்தலும் புணர்தல் நிமித்தமும்.

பாடல் - 11
பொன்னிணர் வேங்கை சவினிய பூம்பொழிலுள்
நன்மலை நாடன் நலம்புனைய -மென்முலையாய்
போயின சின்னாள் புனத்து மறையினால்
ஏயினார் இன்றி இனிது. . . . . [11]

விளக்கம்:

"மென்மையான மார்பகங்களையுடைய தலைவியே! நல்ல மலை வளமிக்க நாட்டுத்தலைவன் தினைப்புனத்திற்குப் பக்கத்திலுள்ள வேங்கை மரங்கள் நிறைந்துள்ள அழகுடைய சோலையின்கண் நின்னோடு கலந்தபின் எவருடைய குறுக்கீடும் இல்லாமல் இன்பமாய்ச் சில நாட்கள் கழிந்தன. இனி என்ன ஆகுமோ, அறியேன்" என்று தலைவிக்குத் தோழி கூறினாள்.

பாடல் - 12
மாலவரை வெற்ப! வணங்கு குரல்ஏனல்
காவல் இயற்கை ஒழிந்தேம்எம் - தூஅருவி
பூக்கண் கழூஉம் புறவிற்றாய்ப் பொன்விளையும்
பாக்கம் இதுஎம் இடம். . . . . [12]

விளக்கம்:

"பெரிய சிகரங்களையுடைய மலைநாட்டுத் தலைவனே! முற்றியதன் காரணமாக வளைந்த கதிர்களையுடைய தினைப்புனத்தைக் காவல் செய்கின்ற இயல்பான வாழ்க்கையை நாங்கள் கைவிட்டோம்; தூய்மையான அருவிகள் பூக்களைக் கழுவிக் கொண்டு செல்லும்படியான காட்டினால் சூழப்பெற்றதாய், பொருட்செல்வத்தால் மிகுந்த இவ்வூரே எனது இல்லம் அமைந்த இடமாகும்" என்று தோழி தலைவியின் இருப்பிடத்தை அறிவுறுத்தித் தலைவனிடம் கூறுகிறாள்.

பாடல் - 13
கானக நாடன் கலவான்என் தோளென்று
மானமர் கண்ணாய்! மயங்கல்நீ - நானம்
கலந்திழியும் நன்மலைமேல் வாலருவி யாடப்
புலம்பும் அகன்றுநில் லா. . . . . [13]

விளக்கம்:

"மான் போன்று மருளும் கண்களையுடைய தோழியே! காடுகள் சூழ்ந்த மலைநாட்டுத் தலைவன், இற்செறிப்பில் இருக்கும் என் தோள்களில் தழுவான் என்று நினைத்து நீ வருந்த வேண்டா! நம் தலைவனது நாட்டைச் சேர்ந்த நன்மலையிலிருந்து வீழ்கின்ற அருவியில் நாம் நீராடினால் தலைவனைச் சேராமையால் உண்டாகும் துன்பங்கள் எல்லாம் நில்லாது நீங்கும்" என்று இற்செறிப்புற்ற தலைவி தோழியிடம் கூறினாள்.

பாடல் - 14
புனைபூந் தழையல்குல் பொன்னன்னாய்! சாரல்
தினைகாத் திரும்தேம்யாம் ஆக - வினைவாய்த்து
மாவினவு வார்போல வந்தவர் நம்மாட்டுத்
தாம்வினவ லுற்றதொன் றுண்டு. . . . . [14]

விளக்கம்:

"தொடுக்கப்பட்ட மலர்களுடன் கூடிய தழைகளால் அணியப்பட்ட அல்குலினையுடைய திருமகளைப் போன்ற எம் தலைவியே! இம்மலையின் பக்கத்தில் உள்ள நம் தினைப் புனத்தை நாம் காத்திருந்தோம். அப்பொழுது வேட்டையாடுவதை மேற்கொண்டு, தாம் தப்ப விட்ட விலங்கு ஒன்றைத் தேடி வருவதைப் போன்று வந்தவர் நம்மிடம் வினவத் தொடங்கியது, விலங்கன்று வேறு ஒன்று உண்டு" என்று தலைவியின் கருத்தை அறிவதற்காகத் தோழி இவ்வாறு கூறினாள்.

பாடல் - 15
வேங்கை நறுமலர் வெற்பிடை யாங்கொய்து
மாந்தளிர் மேனி வியர்ப்பமற்(று) - ஆங்(கு) எனைத்தும்
பாய்ந்தருவி ஆடினே மாகப் பணிமொழிக்குச்
சேந்தனவாம் சேயரிக்கண் தாம். . . . . [15]

விளக்கம்:

"நாங்கள் மலையிடத்துள்ள வேங்கை மரத்தில் மலர்ந்துள்ள நறுமணமிக்க மலர்களைக் கொய்தலால் மாந்தளிர் போன்ற எம் உடல் வியர்த்தது. அதனால் அம்மலையிடத்தேயுள்ள எல்லா அருவிகளிலும் புகுந்து நீராடினோம். ஆகவே மென்மையான சொற்களையுடைய தலைவிக்குச் செவ்வரி படர்ந்த கண்கள் சிவப்பாயின" என்று தோழி செவிலித் தாய்க்குக் கூறுவாள் போன்று சிறைப்புறத்திலுள்ள தலைவன் கேட்பக் கூறுகின்றாள்.

பாடல் - 16
கொடுவரி வேங்கை பிழைத்துக் கோட் பட்டு
மடிசெவி வேழம் இரீஇ - அடியோசை
அஞ்சி ஒதுங்கும் அதருள்ளி ஆரிருள்
துஞ்சா சுடர்த்தொடி கண். . . . . [16]

விளக்கம்:

"வளைந்த வரிகளையுடைய பெரும்புலியினால் தாக்கப்பட்டுத் தப்பியோடிய மடிந்த காதுகளையுடைய யானையானது பின்வாங்கித் தன் நடையால் எழும் ஓசையானது புலிக்குக் கேட்குமோ என்று அஞ்சி, மெல்ல நடக்கக்கூடிய வழியில் நீ திரும்பிப் போக வேண்டும் என எண்ணியதால், ஒளிமிக்க வளையல் அணிந்த தலைவியின் கண்கள் நேற்று இரவு முழுவதும் தூக்கம் கொள்ளவில்லை. எனவே நீ விரைவில் தலைவியை மணம் செய்து காப்பாயாக" என்று தோழி தலைவனிடத்தில் கூறினாள்.

பாடல் - 17
மஞ்சிவர் சோலை வளமலை நன்னாட !
எஞ்சாது நீவருதி யென்றெண்ணி - அஞ்சித்
திருஒடுங்கும் மென்சாயல் தேங்கோதை மாதர்
உருஒடுங்கும் உள்ளுருகி நின்று. . . . . [17]

விளக்கம்:

"மேகங்கள் படர்ந்து செல்லுகின்ற பூஞ்சோலைகளையுடைய வளம்மிக்க மலைகளையுடைய நல்நாட்டுத் தலைவனே! இலக்குமியும் தோற்கும்படியான நல் அழகினையுடைய தேன்பொருந்திய மலர் மாலையை அணிந்த தலைவியானவள், இரவின் கண் தவறாமல் இவ்வழியின்கண் வருகின்றாய் என்று எண்ணி உனக்கு என்ன தீங்கு நேருமோ என அஞ்சி மனத்துன்பம் மிக்கு தன் அழகிய மேனி வாட்டம் அடைய மெலிந்து நிற்கின்றாள்" என்று தோழி தலைவனுக்குக் கூறினாள். எனவே விரைவில் மணம் செய்ய வேண்டும் என்று தூண்டுகிறாள்.

பாடல் - 18
எறிந்தெமர் தாம்உழுத ஈர்ங்குரல் ஏனல்
மறந்தும் கிளியனமும் வாரா - கறங்கருவி
மாமலை நாட! மடமொழி தன்கேண்மை
நீமறவல் நெஞ்சத்துக் கொண்டு. . . . . [18]

விளக்கம்:

"ஒலிக்கின்ற அருவிகளையுடைய பெரிய மலை நாட்டுத்தலைவனே! எம்மவர்களாகிய குறவர்கள் மரஞ்செடி கொடிகளை வெட்டி ஒழுங்குபடுத்திப் பயிரிட்ட குளிர்ந்த கதிர்களையுடைய தினைப்புனத்துக்கு இனி நாங்களும் கிளிக்கூட்டங்களும் மறந்தும் வரமாட்டோம். ஆதலின் அறியாமை பொருந்திய சொற்களைப் பேசும் தலைவியின் நட்பை மனதில் வைத்து மறவாதிருப்பாயாக" என்று செவிலித்தாயுடன் தலைவி வீட்டுக்குச் செல்லும் போது தோழி மறைந்திருக்கும் தலைவனிடம் இனி தாங்கள் வீட்டிலே இருக்க நேரிடுவதைக் கூறி, விரைவில் மணந்து கொள்ளும்படி குறிப்பாக எடுத்துக் காட்டினாள்.

பாடல் - 19
நெடுமலை நன்னாட! நீள்வேல் துணையாக
கடுவிசை வாலருவி நீந்தி - நடுஇருள்
இன்னா அதர்வர ஈர்ங்கோதை மாதராள்
என்னாவாள் என்னும்என் நெஞ்சு. . . . . [19]

விளக்கம்:

"நீண்டு உயர்ந்த மலைகளையுடைய நல் நாட்டுத் தலைவனே! நீண்ட வேலினையே துணையாகக் கொண்டு, விரைவாக ஓடும் வெண்மை நிறமுடைய அருவிகளைக் கடந்து, நள்ளிரவில் இடையூறுகள் பொருந்திய வழியில் வருவதை நினைத்தால், குளிர்ந்த பூமாலை அணிந்த நின் தலைவி என்ன நிலையை அடைவாளோ என்று என் நெஞ்சம் அஞ்சுகின்றது" என்று வழியினது நிலையைக் கூறி அவ்வழியில் இரவில் வாராதிருக்குமாறு தோழி தலைவனை வேண்டினாள்.

பாடல் - 20
வெறிகமழ் வெற்பன்என் மெய்ந்நீர்மை கொண்ட(து)
அறியான்மற்(று) அன்னோ! அணங்(கு) அணங்கிற்(று) என்று
மறிஈர்த்(து) உதிரம்தூய் வேலன் தரீஇ
வெறியோ(டு) அலம்வரும் யாய். . . . . [20]

விளக்கம்:

"தோழி, நம் அன்னையான செவிலித்தாய் மணங்கமழ்கின்ற மலைநாட்டுத் தலைவன் என்மேனியின் இயல்பான தன்மையைக் களவுப்புணர்ச்சியின் மூலம் கவர்ந்து கொண்டான் என்பதனை அறியாதவளாய், 'ஐயோ! தெய்வம் என்னை வருத்திற்று' என்று நினைத்து, வேலைக் கையில் ஏந்தி அருள் கொண்டு ஆடும் வேலனை வரவழைத்து, முருகனுக்குப் பூசையிடுதலாகிய வெறியாடுதலில் ஈடுபட்டு வருந்திக் கொண்டிருக்கிறாள்" என்று தலைவி தோழியிடம் கூறி அறத்தொடு நின்றாள்.

3. மருதம்

நிலம் :- வயலும் வயல் சார்ந்த இடமும்.
ஒழுக்கம் :- ஊடலும் ஊடல் நிமித்தமும்.

பாடல் - 21
கொண்டுழிப் பண்டம் விலையொரீஇக் கொல்சேரி
நுண்துளைத் துன்னூ விற்பாரின் - ஒன்றானும்
வேறல்லை பாண! வியலூரன் வாய்மொழியைத்
தேற எமக்குரைப்பாய் நீ. . . . . [21]

விளக்கம்:

"பாணனே! அகன்ற மருத நிலத்து ஊர்த் தலைவன் சொல்லி விடுத்த மொழிகளைத் தெளிவாக எமக்கு எடுத்துரைப்பாய். பொருளைக் கொள்முதல் செய்தவிடத்துச் சொன்ன விலையை வேறுபடுத்தி மிகுத்துக் கொல்லர் தெருவின்கண் நுண்மையான துளையையுடைய ஊசியினை விற்கின்ற வணிகரை விட ஒருவகையிலும் நீ வேறுபடவில்லை" எனத் தலைவி பாணற்கு வாயில் மறுத்துக் கூறினாள்.

பாடல் - 22
போதார்வண்(டு) ஊதும் புனல்வயல் ஊரற்குத்
தூதாய்த் திரிதரும் பாண்மகனே - நீதான்
அறி(வு)அயர்ந்(து) எம்இல்லுள் என்செய்ய வந்தாய்
நெறிஅதுகாண் எங்கையர் இற்கு. . . . . [22]

விளக்கம்:

"மலர்களில் மொய்க்கும் வண்டுகள் ஒலிக்கும் நீர் வளம் மிக்க நன்செய் நிலங்களையுடைய மருத நிலத்து ஊர்த் தலைவனுக்குத் தூதனாய்த் திரியும் பாணனே! நீ அறிவு கெட்டுப்போய் எங்களுடைய மனைக்கு என்ன நன்மை செய்ய வந்தாய்? எம் தலைவனால் விரும்பப்பட்ட எம் தங்கையரான மங்கையரின் (பரத்தையர்) மனைக்குச் செல்லும் வழி அதோ இருக்கிறது. அதைக்கண்டு அங்குச் செல்வாயாக" என்று தலைவி பாணனது அறியாமையை எடுத்துக்காட்டி வாயில் மறுத்தாள். (வண்டுகள் போல் தலைவன் பலரிடம் செல்கிறான் என்று அர்த்தம்.)

பாடல் - 23
யாணர் அகல்வயல் ஊரன் அருளுதல்
பாண! பரிந்துரைக்க வேண்டுமோ - மாண
அறிவ(து) அறியும் அறிவினார் கேண்மை
நெறியே உரையாதோ மற்று. . . . . [23]

விளக்கம்:

"பாணனே! புதிய வருவாயையுடைய அகன்ற மருத நிலத்தூர்த் தலைவன் எம்மிடம் மிகுதியான அன்பு கொண்டவனாக இருப்பதை, அவனுக்காக எங்களுக்குச் சொல்லவும் வேண்டுமோ? அறிய வேண்டியதை அறிந்த அறிவுடையோர் கைக்கொள்ளும் நட்பானதை அவரது போக்கே உரைக்காதோ?" என்று கூறித் தலைவி பாணனுக்கு வாயில் மறுத்தாள்.

பாடல் - 24
கோலச் சறுகுருகின் குத்(து)அஞ்சி ஈர்வாளை
நீலத்துப் புக்கொளிக்கும் ஊரற்கு - மேல்எலாம்
சார்தற்குச் சந்தனச்சாந்(து) ஆயினேம் இப்பருவம்
காரத்தின் வெய்யஎம் தோள். . . . . [24]

விளக்கம்:

"பாணனே! அழகிய சிறிய நாரையினது குத்துதலுக்கு அஞ்சிக் குளிர்ந்த வாளை மீன்கள் நீல மலர்க் கூட்டத்தில் புகுந்து மறைந்து கொள்ளும்படியான மருத நிலத்தூர்த் தலைவனுக்கு முன்பெல்லாம் கூடும்போது எம்முடைய தோள்கள் அவருக்குச் சந்தனக் குழம்பு போன்று குளிர்ச்சியாக இருந்தன. ஆனால் இப்போதோ புண்ணிற்கு இடும் மருத்துவக் காரத்தைப் போல வெப்பமாய் உள்ளன" என்று தலைவி பாணற்கு வாயில் மறுத்துக் கூறினாள்.

பாடல் - 25
அழல்அவிழ் தாமரை ஆய்வய லூரன்
விழைதரு மார்பம் உறுநோய் - விழையின்
குழலும் குடுமிஎன் பாலகன் கூறும்
மழலைவாய் கட்டுரை யால். . . . . [25]

விளக்கம்:

"நெருப்பினைப் போல் மலர்கின்ற செந்தாமரை மலர்கள் நிரம்பிய வயல்கள் சூழ்ந்த மருத நிலத் தலைவனது காண்பவரால் விரும்பப்படும் மார்பானது, மென்மைத் தன்மையால் சுழன்று விழும்படியான சிகையினையுடைய என் மகன் கூறும் மழலைச் சிறு சொற்களைக் கேட்க விரும்பி என் தலைவன் என்னைக் கூடினால் துன்பத்தை அடையும்" என்று வாயில் வேண்டிச் சென்றார்க்குத் தலைமகள் வாயில் மறுத்துக் கூறினாள்.

பாடல் - 26
பெய்வளைக் கையாய்! பெருநகை ஆகின்ற
செய்வய லூரன் வதுவை விழ(வு)இயம்பக்
கைபுனை தேரேறிச் செல்வானைச் சென்றிவன்
எய்தி இடருற்ற வாறு. . . . . [26]

விளக்கம்:

"வளையல்கள் அணிந்த கைகளையுடைய தோழியே! திருத்தப் பெற்ற மருத நிலத்து நன்செய் வயல்கள் சூழ்ந்த ஊர்க்குத் தலைவன், பரத்தையர் புதுமண விழாக் கொண்டாடும் பொருட்டுத் தேரின் மீது அமர்ந்து பரத்தையர் பால் செல்லும் போது, என் புதல்வன் எதிரே போய்ப் நின்றதால், தலைவன் பரத்தையரைப் புதுமணம் செய்ய முடியாது துன்பம் அடைந்த நிலையானது எனக்கு மிகுந்த நகைப்பினையுண்டாக்குகின்றது" என்று புதல்வனை முனிந்து தலைமகள் மறுத்தாளைப் போலத் தோழிக்கு வாயில் நேர்ந்தாள்.

பாடல் - 27
தணவயல் ஊரன் புலக்கும் தகையமோ
நுண்ணுறல் போல நுணங்கிய ஐங்கூந்தல்
வெண்மரல் போல நிறந்திரிந்து வேறாய
வண்ணம் உடையேம்மற்(று) யாம். . . . . [27]

விளக்கம்:

"நுண்மையான ஆற்றின் நொய் மணல் போலக் கருமையாயிருந்த எம்முடைய ஐவகைப்பட்ட கூந்தலானது வெண்மையான மரலைப் போல நிறம் மாறுபடலால் மாறுபட்ட தன்மையைப் பெற்றிருக்கிறோம். எனவே குளிர்ந்த நன்செய் நிலங்கள் சூழ்ந்த மருத நிலத்தூர்த் தலைவனோடு கூடும் தகுதியினைப் பெற்றுள்ளோமா?" என்று வாயில் வேண்டி வந்தார்க்குத் தலைமகள் வாயில் மறுத்துக் கூறினாள்.

பாடல் - 28
ஒல்லென்(று) ஒலிக்கும் ஒலிபுனல் ஊரற்கு
வல்லென்(று) என்நெஞ்சம் வாட்கண்ணாய் - நில்லென்னா(து)
ஏக்கற்றாங்(கு) என்மகன் தான்நிற்ப என்னானும்
நோக்கான்தேர் ஊர்ந்து கண்டு. . . . . [28]

விளக்கம்:

"ஒல் என்று ஓசையிடும் அருவியினை உடைய ஊரில் என் வலிமையான நெஞ்சினையும் வாள் போன்ற கண்ணையுமுடைய தோழியே! முன்பு என் மகன் தெருவிலே தேர் மீது ஏறிச்சென்ற தன் தந்தையான தலைவனைக் கண்டு, விரும்பிப் பார்த்துக் கொண்டு நின்றான். அந்த நிலையைப் பார்த்தும், தலைவன் பாகனைத் 'தேரோட்டுபவனே சிறிது நில்' என்று சொல்லாமல், என் மகனைச் சிறிதும் பாராமல் தேரினைச் செலுத்தச் செய்து, பரத்தையர் இல்லத்துக்குப் போனான். அதனால் என் மனமானது என் தலைவனிடம் இரக்கம் காட்டாததாயிற்று" என்று தலைமகள் தோழிக்கு வாயில் மறுத்துக் கூறினாள்.

பாடல் - 29
ஒல்லென் ஒலிபுனல் ஊரன் வியன்மார்பம்
புல்லேன்யான் என்பேன் புனையிழையாய்! - புல்லேன்
எனக்கோர் குறிப்பும் உடையனோ ஊரன்
தனக்(கு)ஏவல் செய்தொழுகு வேன். . . . . [29]

விளக்கம்:

"அழகிய அணிகலன்களை அணிந்துள்ள தோழியே! 'ஒல்' என்று ஒலிக்கும்படியான ஒலி புனல் சூழ்ந்த மருத நிலத்தூர்த் தலைவனது அகன்ற மார்பினைத் 'தழுவ மாட்டேன்' என்று அவனைக் காணுவதற்கு முன் நினைத்திருப்பேன். ஆயினும் என் தலைமகனுக்கு ஊழியம் புரிந்து நடக்கக் கூடிய தன்மையுடையவள் ஆதலால் அவனைக் கண்டபின்னும் 'தழுவமாட்டேன்' என்று கூறி மறுக்கவா முடியும்?" என்று தோழியிடம் தலைமகள் கூறினாள்.

பாடல் - 30
குளிரும் பருவத்தே யாயினும் தென்றல்
வளியெறியின் மெய்யிற்(கு) இனிதாம் - ஒளியிழாய்!
ஊடி யிருப்பினும் ஊரன் நறுமேனி
கூடல் இனிதாம் எனக்கு. . . . . [30]

விளக்கம்:

"ஒளி வீசும் அணிகலன்களை அணிந்துள்ள தோழியே! குளிர்காற்று வீசும் மாரிக் காலமானாலும் தென்றல் காற்று வீசினால் நமது உடம்பிற்கு இன்பம் உண்டாகும். அதுபோல என் தலைவனைக் காணாதபொழுது அவன் செய்த தவற்றினை நினைத்து ஊடியிருப்பேனாயினும் அவனைக் கண்டபோது அவன் தவறுகள் எல்லாம் எனக்குப் புலப்படா. ஆதலின் அவனுடைய மணமிகுந்த மேனியைக் கூடுதலானது எனக்கு இன்பமாயுள்ளது" என்று தோழியிடம் தலைமகள் கூறினாள்.

4. பாலை

நிலம் :- குறிஞ்சியும் முல்லையும் திரந்த மணல் வெளி (நீர்வற்றிய இடம்).
ஒழுக்கம் :- பிரிதலும் பிரிதல் நிமித்தமும்.

பாடல் - 31
உதிரம் துவரிய வேங்கை உகிர்போல்
எதிரி முருக்கரும்ப வீர்ந்தண்கார் நீங்க - எதிருநர்க்(கு)
இன்பம் பயந்த இளவேனில் காண்தொறும்
துன்பம் கலந்தழியும் நெஞ்சு. . . . . [31]

விளக்கம்:

"உதிரத்தை உறிஞ்சிய புலியினது குருதி தோய்ந்த நகங்களைப் போலத் தமக்குரிய பருவத்தோடு பொருந்தி முருக்கமரங்கள் செந்நிற அரும்புகளைத் தோற்றுவிக்க, மிகவும் குளிர்ந்த மேகங்கள் வானத்தினின்று விலகிட, தலைவனும், தலைவியுமாய் எதிர்ப்பட்டுக் கூடினார்க்குப் பேரின்பம் செய்த இளவேனிற் காலத்தை என் கண்கள் காணும் பொழுதெல்லாம் என் நெஞ்சம் துன்பத்தினால் அழிகின்றது" எனத் தலைவி தோழியிடம் கூறினாள்.

பாடல் - 32
விலங்கல் விளங்கிழாய்! செல்லாரோ வல்லர்
அழற்பட்(டு) அசைந்த பிடியை - எழிற்களிறு
கற்சுனைச் சேற்றிடைச் சின்னீரைக் கையாற்கொண்(டு)
உச்சி ஒழுக்கஞ் சுரம். . . . . [32]

விளக்கம்:

பிடி- பெண் யானை, களிறு-ஆண் யானை.

"அழகிய அணிகலன்களை அணிந்த தலைவியே! காட்டுத்தீயில் அகப்பட்டு வருந்தும் பெண்யானை மீது அன்புகொண்ட அழகிய ஆண்யானை, மலைச் சுனையில் இருந்த சேற்றோடு கூடிய சிறிதளவினவான நீரைத் தன் துதிக்கையால் முகந்து தன் பெண்யானையினது தலை உச்சியில் பெய்தற்கு இடமான பாலை நில வழியில் நம் தலைவர் செல்லமாட்டார். ஆகலின் அவர் பயணத்தை விலக்க வேண்டாம்" எனத் தலைவனின் பிரிவை அறிந்து ஆற்றாத தலைவியைத் தோழி தேற்றினாள்.

பாடல் - 33
பாவையும் பந்தும் பவளவாய்ப் பைங்கிளியும்
ஆயமும் ஒன்றும் இவைநினையாள் - பால்போலும்
ஆய்ந்த மொழியினாள் செல்லுங்கொல் காதலன்பின்
காய்ந்து கதிர்தெறூஉங் காடு. . . . . [33]

விளக்கம்:

"பால் போன்று இனிய ஆராய்ந்தமைந்த மொழிகளையுடைய என் மகள், சூரிய கிரகணங்களால் வெப்பம் மிகுந்துள்ள பாலை நிலக்காட்டு வழியில், விளையாடற்குரிய பொம்மைகள், பந்துகள், பவளம் போன்ற வாயினைக் கொண்ட பைங்கிளிகள், தோழிகள் கூட்டம் ஆகிய இவற்றில் ஒன்றையேனும் எண்ணிப் பாராமல், தன் காதலன் பின் செல்லும் தன்மையுடையவளாய் இருப்பாளோ?" என்று நற்றாய், தன் மகளைக் குறித்துத் துன்புற்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள்.

பாடல் - 34
கோட்டமை வல்லில் கொலைபிரியா வன்கண்ணர்
ஆட்டிவிட்(டு) ஆறலைக்கும் அத்தம் பலநீந்தி
வேட்ட முனைவயின் சேறீரோ ஐய! நீர்
வாள்தடங்கண் மாதரை நீத்து. . . . . [34]

விளக்கம்:

"தலைவனே! வாள் போன்ற ஒளிமிக்க அகன்ற கண்களையுடைய எம் தலைவியைப் பிரிந்து, வளைகின்ற மூங்கிலாகிய வலிமையான வில்லினால் கொலைத் தொழிலைச் செய்யும் மறவர்கள், வழியில் செல்கின்ற புதியவரிடம் கொள்ளையடித்து, வருந்தும்படியான கடப்பதற்கு அரிய வழிகள் பலவற்றையும் கடந்து, வேட்டையாடுவதற்குரிய கொடுமைமிக்க காட்டிற்குச் செல்வீரோ?" என்று தோழி தலைவனை வினவினாள்.

பாடல் - 35
கொடுவில் எயினர்தம் கொல்படையால் வீழ்ந்த
தடிநிணம் மாந்திய பேஎய் - நடுகல்
விரிநிழல் கண்படுக்கும் வெங்கானம் என்பர்
பொருள்புரிந்தார் போய சுரம். . . . . [35]

விளக்கம்:

"பொருள்வயின் பிரிந்த எம் தலைவர் சென்ற பாலை நிலத்துவழி, வளைந்த வில்லினையுடைய வேட்டுவர் தம்முடைய கொலைக் கருவிகளால் வீழ்த்திய தசையையும், கொழுப்பையும் தின்ற பேய்கள் போரிலே மடிந்தாரின் பெயர் வரையப்பட்ட நடுகல்லின் நிழலில் உறங்கும் படியான கொடிய காட்டிலே உள்ளது என்று சொல்வர்" என்று தலைவி தோழியிடம் தலைவன் பிரிந்து சென்ற பாலை நிலத்தின் கொடிய தன்மையை எடுத்துக் கூறினாள்.

பாடல் - 36
கடி(து)ஓடும் வெண்தேரை நீராம்என்(று) எண்ணிப்
பிடியோ(டு) ஒருங்கோடித் தாள்பிணங்கி வீழும்
வெடியோடும் வெங்கானம் சேர்வார்கொல் நல்லாய்
தொடியோடி வீழத் துறந்து. . . . . [36]

விளக்கம்:

"தோழியே! என் கைவளையல்கள் கழன்று விழும்படி என் காதலர் என்னை விட்டு நீங்கி, விரைந்து ஓடும் கானல் நீரைத் தண்ணீராக்கும் என்று எண்ணி, ஆண் யானைகள் பெண்யானைகளுடன் ஒன்று சேர்ந்து போய்க் கால்கள் ஓய்ந்து விழும்படியான வெடிப்புகள் நிறைந்த கொடிய காட்டு வழியில் செல்வாரோ?" என்று தோழியிடம் தலைவி தலைவன் பிரிவு குறித்துக் கூறினாள்.

பாடல் - 37
தோழியர் சூழத் துறைமுன்றில் ஆடுங்கால்
வீழ்பவள் போலத் தளருங்கால் - தாழாது
கல்லதர் அத்தத்தைக் காதலன் பின்போதல்
வல்லவோ மாதர் நடை. . . . . [37]

விளக்கம்:

"தோழியர்கள் நாற்புறமும் சூழும்படி முற்றத்தில் என் மகள் விளையாடும் பொழுதிலும் விழுந்து விடுபவளைப் போன்று தளர்கின்ற அவளுடைய மென்மையான கால்கள், கற்கள் நிரம்பிய வழியான அருஞ்சுரத்தில் தன் தலைவன் பின்னால் ஓய்ந்து போகாமல் செல்லுதலில் வல்லனவோ?" என்று உடன்போக்குச் சென்ற தன் மகள் குறித்து நற்றாய் வருந்திக் கூறினாள்.

பாடல் - 38
சுனைவாய்ச் சிறுநீரை எய்தாதென் றெண்ணிப்
பிணைமான் இனிதுண்ண வேண்டிக் - கலைமாத்தன்
கள்ளத்தின் ஊச்சும் சுரமென்பர் காதலர்
உள்ளம் படர்ந்த நெறி. . . . . [38]

விளக்கம்:

கலைமான் - ஆண்மான், பிணை - பெண்.

"நம் காதலர் தமது மனத்தினால் விரும்பிச் சென்ற வழியானது, ஆண்மான் அங்குள்ள சுனையிலுள்ள சிறிய அளவு தண்ணீரைக் கண்டு இது இருவரும் பருகப் போதாது என எண்ணி, தன்னுடைய பெண்மான் மட்டும் குடிக்க வேண்டுமென்று பெரிதும் விரும்பி, பொய்யாகக் குடிப்பது போல உறிஞ்சும் என்று பாலை நிலவழி பற்றிச் சொல்லுவர்" என்று தோழி தலைவியை ஆற்றுவித்தாள்.

பாடல் - 39
மடவைகாண் நன்நெஞ்சே மாண்பொருள் மாட்டோடப்
புடைபெயர் போழ்தத்து மாற்றாள் - படர்கூர்ந்து
விம்மி யுயிர்க்கும் விளங்கிழையாள் ஆற்றுமோ
நம்மில் பிரிந்த இடத்து. . . . . [39]

விளக்கம்:

"நல்ல மனமே! நம்மை விட்டுப் பிரிகின்ற சிறிய அளவு காலத்திலும், பொறுக்க மாட்டாதவளாய்த் துன்பம் மிகுந்து, ஏங்கி, நெடுமூச்செறிகின்ற தலைவி, சிறந்த பொருளைத் தேடுதலுக்காக நாம் அவள் அறியா வண்ணம் சென்றால் பொறுப்பாளோ? பொறாது உயிர் நீப்பாள். இதனை நீ அறியவில்லை. ஆதலால் நீ பெரிதும் அறிவற்றவன்" என்று தலைவன் பொருள் இன்றியமையாதது என்று சொன்ன நெஞ்சிற்கு எடுத்துக் கூறித் தன் செலவைத் தவிர்த்தான்.

பாடல் - 40
இன்(று)அல்கல் ஈர்ம்புடையுள் ஈர்ங்கோதை தோள்துணையா
நன்கு வதிந்தனை நன்னெஞ்சே! - நாளைநாம்
குன்றதர் அத்தம் இறந்து தமியமாய்
என்கொலே சேக்கும் இடம். . . . . [40]

விளக்கம்:

"நல்ல மனமே இன்றைய இரவில் குளிர்ந்த மலர்ப் படுக்கையில் எம் தலைவியின் தோள்கள் பேரின்பத்திற்குத் துணையாகுமாறு நன்றாகத் தங்கியுள்ளாய்; நாளை நாம் சிறு குன்றுகளுக்கு இடையே செல்லும் வழியாகிய அருநெறி வழியே துணையின்றிப் போகும்போது அப்பாலை நிலத்தில் தங்குமிடம் யாதோ?" என்று பொருள் இன்றியமையாதது என்று கூறிய நெஞ்சிற்கு இவ்வாறு கூறித் தன் செலவினைத் தவிர்த்தான்.

5. நெய்தல்

நிலம் :- கடலும் கடல் சார்ந்த இடமும்.
ஒழுக்கம் :- இரங்கலும் இரங்கல் நிமித்தமும்.

பாடல் - 41
தெண்கடற் சேர்ப்பன் பிரியப் புலம்(பு) அடைந்(து)
ஒள்தடங்கண் துஞ்சற்க ஒள்ளிழாய் - நண்படைந்த
சேவலும் தன்அருகில் சேக்குமால் என்கொலோ
பூந்தலை அன்றில் புலம்பு. . . . . [41]

விளக்கம்:

"ஒளியினையுடைய அணிகலன்களை அணிந்த தலைவியே! தெளிந்த கடல் துறையையுடைய தலைவன், இரவுக் குறியில் உன்னைக் காணாமல் பிரிந்து செல்ல, அதனால் நீ தனிமை அடைந்தாய். ஆதலின் நின் ஒளிமிக்க கண்கள் இந்த நாள் இரவும் உறங்காது. ஆனால் காதல் மிகக் கொண்டுள்ள ஆண் அன்றில் பறவை தனக்குப் பக்கத்தே தங்கியிருக்கவும், சிவந்த பூவினைப் போன்ற தலையையுடைய அன்றில் பறவை நேற்று இரவு விடியுமளவும் வருந்தியது என்ன காரணமோ?" என்று தோழி தலைமகளை வினவினாள்.

பாடல் - 42
கொடுந்தாள் அலவ! குறையாம் இரப்பேம்
ஒடுங்கா ஒலிகடல் சேர்ப்பன் - நெடுந்தேர்
கடந்த வழியைஎம் கண்ணாரக் காண
நடந்து சிதையாதி நீ. . . . . [42]

விளக்கம்:

"வளைந்த கால்களையுடைய நண்டே! ஒரு வேண்டுகோளை நாம் உன்னிடத்தில் கேட்டுக் கொள்கிறோம். குறையாத ஒலியையுடைய கடலைச் சார்ந்த எம் நெய்தல் நிலத் தலைவனது பெரிய தேரானது என்னைப் பிரிந்து சென்ற காலத்து ஊர்ந்து சென்ற தேர்ச் சக்கரங்கள் பதிந்த சுவடுகளை, எம்முடைய கண்கள் நன்றாகப் பார்க்கும்படி அதன் மேல் சென்று நீ அழிக்காமல் இருப்பாயாக" என்று தலைவி கடற்கரையில் கண்ட நண்டிடத்து மிகுந்த துன்பத்துடன் கூறினாள்.

பாடல் - 43
பொரிப்புறப் பல்லிச் சினையீன்ற புன்னை
வரிப்புற வார்மணல்மேல் ஏறித் - தெரிப்புறத்
தாழ்கடற் தண்சேர்ப்பன் தார்அகலம் நல்குமேல்
ஆழியால் காணாமோ யாம். . . . . [43]

விளக்கம்:

"தாழ்ந்து ஆழமாக உள்ள கடலோடு கூடிய குளிர்ந்த துறைமுகத்தையுடைய தலைவனது மாலைகள் அணிந்த மார்பினை நமக்குக் கொடுப்பது உறுதியெனின், பொரிந்த பல்லியின் முட்டையினைப் போன்ற அரும்புகளைத் தோற்றுவித்த புன்னை மரத்தினது பூந்துகள் வரியாகக் கிடக்கும் மேற்பாகத்தினையுடைய உயர்ந்த மணல் மேட்டின் மீது ஏறிச் சென்று அமர்ந்து இருந்து, கூடல் இழைப்பதன் வாயிலாய் நாம் அதனை அறிய மாட்டோமா?" என்று தலைவி தனக்குத்தானே கூறிக் கொண்டாள்.

பாடல் - 44
கொண்கன் பிரிந்த குளிர்பூம் பொழில்நோக்கி
உண்கண் சிவப்ப அழுதேன் ஒளிமுகம்
கண்டன்னை எவ்வம்யா தென்னக் கடல்வந்தென்
வண்டல் சிதைத்ததென் றேன். . . . . [44]

விளக்கம்:

"இற்செறிந்த காரணத்தால் நின் தலைவன் பிரிந்து சென்ற குளிர்ந்த மலர்கள் நிறைந்த சோலையைப் பார்த்து, மையுண்ட கண்கள் சிவக்கும்படி கண்ணீர் விட்டு நின்றேன். அப்பொழுது செவிலித்தாய் ஒளிமிக்க என் முகத்தைப் பார்த்து 'உனக்குற்ற துன்பம் யாது?' எனக் கேட்டாள். அதற்கு நான் 'கடலின் அலையானது தரை மீது மோதி என் விளையாட்டுச் சிற்றிலை அழித்து விட்டது' என்று கூறினேன்" என்று தோழி, பகற்குறிக்கண் மறைந்திருக்கும் தலைவன் கேட்கும்படி தலைவியினுடைய இற்செறிப்பைக் குறிப்பாகக் கூறினாள்.

பாடல் - 45
ஈர்ந்தண் பொழிலுள் இருங்கழித் தண்சேர்ப்பன்
சேர்ந்தென் செறிவளைத்தோள் பற்றித் தெளித்தமை
மாந்தளிர் மேனியாய்! மன்ற விடுவனவோ
பூந்தண் பொழிலுள் குருகு. . . . . [45]

விளக்கம்:

"மாந்தளிர் போன்ற மேனியையுடைய மங்கையே! பெரிய உப்பங்கழிகளைக் கொண்ட குளிர்ந்த கடற்கரைத் தலைவன், மிகக் குளிர்ந்த சோலையுள் என்னைக் கலந்து, பின்பு என் வளையல்கள் அணிந்த தோள்களைப் பற்றி என் உள்ள வருத்தத்தைப் போக்குவதாகச் சொன்ன உறுதிமொழிகளைப் பொலிவோடு விளங்கும் குளிர்ந்த அச்சோலையுள் வாழும் பறவைகள் உண்மையாக மறந்துவிடுமோ?" எனத் தலைவி தோழியிடம் சொல்லித் தன் மண வேட்கையைக் குறிப்பாகத் தெரிவித்தாள்.

பாடல் - 46
ஓதம் தொகுத்த ஒலிகடல் தண்முத்தம்
பேதை மடவார்தம் வண்டல் விளக்கயரும்
கானலம் சேர்ப்ப! தகுவதோ என்தோழி
தோள்நலம் தோற்பித்தல் நீ. . . . . [46]

விளக்கம்:

"அலைகளால் சேர்க்கப்பட்ட ஒலிக்கும் கடலில் விளைந்த குளிர்ந்த முத்துக்களைப் பேதைப் பருவமுடைய சிறு பெண்கள் தம் விளையாட்டு மனைக்கு விளக்குகளாகக் கொண்டு விளையாடற்கு இடமான கடற்கரைச் சோலையையுடைய அழகிய கடற்கரைத் தலைவனே! நீ என் தோழியான தலைவியின் தோள்களின் நலத்தை திருமண வேட்கையால் மெலிவித்தல் சரியா?" என்று தோழி தலைவனை வினவினாள்.

பாடல் - 47
பெருங்கடல் உள்கலங்க நுண்வலை வீசி
ஒருங்குடன் தன்னைமார் தந்த கொழுமீன்
உணங்கல்புள் ஒப்பும் ஒளியிழை மாதர்
அணங்காகும் ஆற்ற எமக்கு. . . . . [47]

விளக்கம்:

"பெருங்கடலானது கலங்கும்படி, நுண்ணிய வலையை வீசி, ஒன்றாகத் தமையன்மார்கள் கொண்டு வந்த கொழுத்த மீன்களை, வெயிலில் காயவைத்து வற்றலாக்குங்கால், அவற்றைக் கவர்ந்து செல்லவரும் பறவைகளைக் கவரவிடாமல் பாதுகாக்கும், மின்னும் அணிகளை அணிந்த அப்பெண், மிகுதியும் எம்மை வருத்தும் தெய்வம் போல் ஆவாள்" என்று தலைவன் பாங்கனிடம் கூறினான்.

பாடல் - 48
எக்கர் இடுமணல்மேல் ஓதம் தரவந்த
நித்திலம் நின்றிமைக்கும் நீள்கழித் தண்சேர்ப்ப
மிக்க மிகுபுகழ் தாங்குபவோ தற்சேர்ந்தார்
ஒற்கம் கடைப்பிடியா தார். . . . . [48]

விளக்கம்:

"அலையானது கரைமேல் மோதி உருவாக்கிய மணலின் மீது, அந்த அலையால் கொணரப்பட்ட முத்துக்கள் நின்று நிலையாய் ஒளி வீசும் நீண்ட உப்பங்கழிகளையுடைய தலைவனே! தம்மைச் சேர்ந்தாரின் குறைகளை விலக்க முன்வராதவர் உலகத்தவரால் போற்றப்படுவரா? போற்றப்பட மாட்டார்" எனத் தலைவியின் மண விருப்பத்தை முடிக்கும்படி தோழி தலைவனிடத்தில் குறிப்பாய்க் கூறினாள்.

பாடல் - 49
கொடுமுள் மடல்தாழைக் கூம்பவிழ்ந்த ஒண்பூ
இடையுள் இழுதொப்பத் தோன்றிப் -புடையெலாம்
தெய்வம் கமழும் தெளிகடல் தண்சேர்ப்பன்
செய்தான் தெளியாக் குறி. . . . . [49]

விளக்கம்:

"வளைந்த முள்ளையுடைய மடல்களைக் கொண்ட தாழையினது குவிதல் நீங்கி மலர்ந்த ஒளிமிக்க மலரானது நடுவேயுள்ள சோற்றினால் வெண்ணெயினைப் போல் வெளிப்பட்டுப் பக்கங்களில் எல்லாம் தெய்வமணத்தைப் போல் மணம் கமழும் தெளிந்த கடலையுடைய குளிர்ந்த துறையையுடைய தலைவன், நம்மால் அறிந்து கொள்ள முடியாத குறியினைச் செய்து விட்டான்" என்று தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி கூறினாள்.

பாடல் - 50
அணிகடல் தண்சேர்ப்பன் தேர்ப்பரிமாப் பூண்ட
மணிஅரவம் என்றெழுந்து போந்தேன் - கனிவிரும்பும்
புள்ளரவம் கேட்டுப் பெயர்ந்தேன் ஒளியிழாய்
உள்ளுருகு நெஞ்சினேன் ஆய். . . . . [50]

விளக்கம்:

"ஒளியோடு கூடிய அணிகலன்களை அணிந்த பெண்ணே! அழகிய கடலோடு கூடிய குளிர்ந்த நீர்த்துறையையுடைய தலைவனது தேரில் பூட்டப்பட்ட குதிரைகள் அணிந்திருக்கும் மணியோசை கேட்கின்றது என எண்ணி வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்தேன். ஆனால் பழங்களை விரும்பி உண்ண வந்த பறவைகளின் ஒலியைக் கேட்டுத் தலைவனின் தேர் மணியோசை அன்று என்று வருந்தி அவ்வருத்தமுடைய நெஞ்சத்தோடு நான் திரும்பினேன்" என்று தோழி தலைவியிடம் கூறினாள்.

ஐந்திணை ஐம்பது முற்றிற்று.