பட்டினப்பாலை
பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
நெடுநல்வாடை
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
மதுரைக்காஞ்சி
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
மலைபடுகடாம்
சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.
திருமுருகாற்றுப்படை
பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்
பொருநராற்றுப்படை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
சிறுபாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
பெரும்பாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
முல்லைப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
குறிஞ்சிப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
பட்டினப்பாலை

பூம்புகாரின் செல்வ வளம் நிறைந்த வீதிகள்
பாடல் வரிகள்:- 184 - 193
செல்லா நல்லிசை அமரர் காப்பின்,
நீரின் வந்த நிமிர் பரிப் புரவியும், . . . .[185]
காலின் வந்த கருங்கறி மூடையும்,
வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்,
குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்,
தென்கடல் முத்தும், குணகடல் துகிரும்,
கங்கை வாரியும், காவிரிப் பயனும், . . . .[190]
ஈழத்து உணவும், காழகத்து ஆக்கமும்,
அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி,
வளம் தலை மயங்கிய நனந்தலை மறுகின் . . . .[184-193]
செல்லா நல்லிசை யமரர் காப்பி
னீரின் வந்த நிமிர்பரிப் புரவியுங் . . . .[185]
காலின் வந்த கருங்கறி மூடையும்
வடமலைப் பிறந்த மணியும் பொன்னுங்
குடமலைப் பிறந்த வாரமு மகிலுந்
தென்கடன் முத்துங் குணகடற் றுகிருங்
கங்கை வாரியுங் காவிரிப் பயனு . . . .[190]
மீழத் துணவுங் காழகத் தாக்கமு
மரியவும் பெரியவு நெரிய வீண்டி
வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகி
பொருளுரை:
அதன் எல்லையில் கெடாத புகழையுடைய தேவர்கள் பாதுகாத்தனர். கடலில் வந்த நிமிர்ந்த நடையையுடைய குதிரைகளும், வண்டிகளில் வந்த கரிய மிளகு மூடைகளும், வட மலையில் பிறந்த பொன்னும், குடகு மலையில் தோன்றிய சந்தனமும் அகிலும், கங்கை ஆற்றினால் உண்டான பொருட்களும், காவிரி ஆற்றினால் உண்டான பொருட்களும், ஈழத்து உணவும், மியன்மாரின் பொருட்களும், அரிய பொருட்களும் பெரிய பொருட்களும், நிலத்தை நெளிக்கும்படி திரண்டு ஒன்றோடொன்று கலந்து இருந்தன அகன்ற தெருவில்.
சொற்பொருள்:
வரைப்பின் - எல்லையில், செல்லா நல் இசை - கெடாத புகழ், அமரர் காப்பின் - தேவர்களின் பாதுகாப்பால், நீரின் வந்த நிமிர் பரி புரவியும் - கடலில் வந்த நிமிர்ந்த நடையையுடைய குதிரைகள், காலின் வந்த கருங்கறி மூடையும் - வண்டிகளில் வந்த கரிய மிளகு மூடைகளும், வட மலைப் பிறந்த பொன்னும் - வட மலையில் பிறந்த பொன்னும், குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும் - குடகு மலையில் தோன்றிய சந்தனமும் அகிலும், கங்கை வாரியும் - கங்கை ஆற்றின் பொருட்களும், காவிரிப் பயனும் - காவிரி ஆற்றினால் உண்டான பொருட்களும், ஈழத்து உணவும் - ஈழத்து உணவும், காழகத்து ஆக்கமும் - மியன்மாரின் பொருட்களும், அரியனவும் பெரியவும் - அரிய பொருட்களும் பெரிய பொருட்களும், நெரிய ஈண்டி - அடர்ந்து திரண்டு, வளம் தலை மயங்கிய - செல்வம் நிறைந்துக் கலந்த, நனந்தலை மறுகின் - அகன்ற தெருவில்
குறிப்பு:
ஈழத்து உணவும் (191) - பொ. வே. சோமசுந்தரனார் உரை: ஈழத்துணவும் என்பது ஈழத்துளவும் என்றே இருத்தல் வேண்டும். ஈழத்துணவும் என்னுந் தொடர்க்கு ஆசிரியர் நச்சினார்க்கினியர் உரையும் இல்லாததால் பிற்காலத்தார் அங்ஙனம் பிறழக்கொண்டமைக்குக் காரணமாகலாம். காலின் வந்த கருங்கறி மூடையும் (186) - நச்சினார்க்கினியர் உரை - கடலிலே காற்றால் வந்த கரிய மிளகுப் பொதிகளும், பொ. வே. சோமசுந்தரனார் உரை - நிலத்தின்கண் சகடங்களிலே வந்த கரிய மிளகு பொதிகளும், வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரி உரை - வண்டியின் மூலமாக வந்த கரு நிற மிளகு மூட்டையும். வை. மு. கோ மேலும் விளக்குகின்றார் - கால் என்பது உருளையையுடைய வண்டிக்கு ஆகுபெயர்.