பட்டினப்பாலை
பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
நெடுநல்வாடை
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
மதுரைக்காஞ்சி
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
மலைபடுகடாம்
சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.
திருமுருகாற்றுப்படை
பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்
பொருநராற்றுப்படை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
சிறுபாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
பெரும்பாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
முல்லைப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
குறிஞ்சிப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
பட்டினப்பாலை

கொடிகள் - வீரர்களை வணங்குமிடத்தில் ஏற்றியுள்ள கொடி
பாடல் வரிகள்:- 161 - 168
உருகெழு கரும்பின் ஒண்பூப் போலக்
கூழுடை கொழு மஞ்சிகை
தாழுடைத் தண் பணியத்து
வால் அரிசிப் பலி சிதறிப் . . . .[165]
பாகு உகுத்த பசு மெழுக்கின்,
காழ் ஊன்றிய கவி கிடுகின்
மேல் ஊன்றிய துகில் கொடியும் . . . .[161-168]
றுருகெழு கரும்பி னொண்பூப் போலக்
கூழுடைக் கொழுமஞ்சிகைத்
தாழுடைத் தண்பணியத்து
வாலரிசிப் பலிசிதறிப் . . . .[165]
பாகுகுத்த பசுமெழுக்கிற்
காழூன்றிய கவிகிடுகின்
மேலூன்றிய துகிற்கொடியும்
பொருளுரை:
சந்தனக் குழம்பை பூசி புதிதாக மெழுகிய இடத்தில், சோற்றினை உடைய பெரிய கூடைகள் மீதும் தாழ விரித்த துணியின் மீது உள்ள குளிர்ச்சியுடையப் பண்டங்களின் மீதும் வெள்ளை அரிசியைப் பலியாகத் தூவி இருந்தனர். அங்கு ஊன்றிய வேலின் மீது உள்ள கவிழ்த்தப்பட்ட கேடயங்களுக்கு மேலே இருந்த, காட்டு ஆறு கொண்டு வந்த வெள்ளை மணலில் உள்ள அழகான கரும்பின் ஒளியுடைய பூவைப் போல உள்ள துணியால் செய்யப்பட்ட கொடிகளும்,
சொற்பொருள்:
வரு புனல் தந்த வெண் மணல் - வருகின்ற ஆற்று மணல் கொண்டு வந்த வெள்ளை மணல், கான் யாற்று - காட்டு ஆறு, உருகெழு கரும்பின் ஒண் பூப் போல - அழகான கரும்பின் ஒளியுடைய பூவைப் போல, கூழுடை கொழு மஞ்சிகை - சோற்றினை உடைய பெரிய கூடைகள், தாழ் உடை - தாழ விரித்த துணி, தண் பணியத்து - குளிர்ச்சியுடையப் பண்டங்களையும், வால் அரிசி - வெள்ளை அரிசி, பலி சிதறி - பலியைத் தூவி, பாகு உகுத்த - சேற்றினாலே அப்பி, சந்தனக்குழம்பினால் அப்பி, பசு மெழுக்கின் - புதிதாக மெழுகிய இடத்தில், பசுவின் சாணி மெழுக்கில், காழ் ஊன்றிய - வேல் ஊன்றிய, கவி கிடுகின் - கவிழ்த்தப்பட்ட கேடயத்தின், மேலூன்றிய - மேலே நாட்டப்பட்ட, துகிற் கொடியும் - துணியால் செய்யப்பட்ட கொடியும்
குறிப்பு:
பாகு உகுத்த பசு மெழுக்கின் (166) - பொ. வே. சோமசுந்தரனார் உரை - சந்தனக் குழம்பினைக் கொட்டி மெழுகிய பசிய மெழுக்கு நிலத்தின் மேல், வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரி உரை - பாகு போலக் காய்ச்சி வார்த்த பசிய மெழுக்கைப் பூசிய, நச்சினார்க்கினியர் உரை - உகுத்த பாகு என்பது கண்டு சர்க்கரைக் கட்டுப்பாகினை, இதனை பசு மெழுக்கென்பதனோடு கூட்டி ஆப்பி (பசுவின் சாணி) என்பாருமுளர். பட்டினப்பாலை 78 - கிடுகு நிரைத்து எஃகு ஊன்றி நடுகல்லின் அரண் போல, பட்டினப்பாலை 167 - காழ் ஊன்றிய கவி கிடுகின், முல்லைப்பாட்டு 41 - பூந்தலைக் குந்தம் குத்தி கிடுகு நிரைத்து, பெரும்பாணாற்றுப்படை 119-120 - எஃகம் வடிமணிப் பலகையொடு நிரைஇ.