பட்டினப்பாலை

பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

நெடுநல்வாடை

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

மதுரைக்காஞ்சி

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

மலைபடுகடாம்

சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.

திருமுருகாற்றுப்படை

பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்

பொருநராற்றுப்படை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

சிறுபாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

பெரும்பாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

முல்லைப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

குறிஞ்சிப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

பட்டினப்பாலை


பண்டகசாலை முன்றில்

பாடல் வரிகள்:- 126 - 141

வான் முகந்த நீர் மலைப் பொழியவும்,
மலைப் பொழிந்த நீர் கடல் பரப்பவும்
மாரி பெய்யும் பருவம் போல,
நீரினின்றும் நிலத்து ஏற்றவும்,
நிலத்தினின்று நீர்ப் பரப்பவும், . . . .[130]

அளந்து அறியா பல பண்டம்
வரம்பு அறியாமை வந்து ஈண்டி
அருங்கடி பெருங்காப்பின்
வலிவுடை வல் அணங்கினோன்
புலி பொறித்து புறம் போக்கி, . . . .[135]

மதி நிறைந்த மலி பண்டம்
பொதி மூடைப் போர் ஏறி,
மழை ஆடு சிமைய மால் வரைக் கவாஅன்
வரை ஆடு வருடைத் தோற்றம் போலக்
கூர் உகிர் ஞமலிக் கொடுந் தாள் ஏற்றை . . . .[140]
ஏழகத் தகரோடு உகளும் முன்றில் . . . .[126-141]

பொருளுரை:

முகில் கடலிலிருந்து முகந்த நீரை மலை மேல் பொழியவும் மலையில் விழுந்த மழை நீரை ஆறுகள் மூலம் கடலில் சேர்க்கவும், மழை பெய்யும் பருவம் போல, கடலிலிருந்து நிலத்திற்கு ஏற்றவும், நிலத்திலிருந்து கடலுக்கு பரப்பவும், அளந்து அறிய முடியாத பல பொருட்கள் எல்லை இல்லாது வந்து குவிந்து கிடக்க, பெறுவதற்கு அரிய பெருங்காவலையுடைய வலிமையுடன் மிகுந்த அதிகாரமுடைய அதிகாரி ஒருவன், சோழ மன்னனுக்குரிய புலிச் சின்னத்தைப் பொறித்து புறத்தில் வைத்த விலை நிறைந்த பல்வேறு பண்டங்களைக் கட்டி வைத்த மூடைக் குவியலின் மீது ஏறி, முகில் உலவும் உச்சியையுடைய உயர்ந்த மலையின் பக்க மலையில் விளையாடும் வருடை மானின் தோற்றம் போல, கூர்மையான நகங்களையும் வளைந்த கால்களையுமுடைய ஆண் நாய்களும் ஆட்டுக் கிடாய்களுடன் தாவிக் குதிக்கும், பண்டகசாலையின் முற்றத்தில்.

சொற்பொருள்:

வான் முகந்த நீர் - முகில் முகந்த நீர், மலை பொழியவும் - மலை மேல் பொழியவும், மலை பொழிந்த நீர் - மலையில் விழுந்த மழை நீர், கடல் பரப்பவும் - ஆறுகள் மூலம் கடலில் சேரவும், மாரி பெய்யும் பருவம் போல - மழை பெய்யும் பருவம் போல, நீரினின்றும் நிலத்து ஏற்றவும் - கடலிலிருந்து நிலத்திற்கு ஏற்றவும் (இறக்குமதி), நிலத்தினின்று நீர்ப் பரப்பவும் - நிலத்திலிருந்து கடலுக்கு பரப்பவும் (ஏற்றுமதி), அளந்து அறியா - அளந்து அறிய முடியாத, பல் பண்டம் - பல பொருட்கள், வரம்பு அறியாமை - எல்லை இல்லாது, வந்து ஈண்டி - வந்து குவிந்து கிடக்க, அருங்கடி பெருங்காப்பின் - பெறுவதற்கு அரிய பெருங்காவலையுடைய, வலியுடை வல் அணங்கினோன் - வலிமையுடைய பெரிய அதிகாரமுடையவன், புலிப் பொறித்து - சோழ மன்னனுக்குரிய புலிச் சின்னத்தைப் பொறித்து, புறம் போக்கி - புறத்தில் வைத்து, மதி நிறைந்த - விலை நிறைந்த, மலி பண்டம் - பல்வேறு பண்டங்கள், பொதி மூடை போர் ஏறி - கட்டிய மூடைக் குவியலின் மீது ஏறி, மழை ஆடு சிமய - முகில் உலவும் உச்சியையுடைய, மால் வரை - உயர்ந்த மலை, மூங்கில் நிறைந்த மலை, கவாஅன் - பக்க மலை, வரை ஆடு வருடை தோற்றம் போல - மலையில் விளையாடும் வருடை மானின் தோற்றம் போல, கூர் உகிர் ஞமலி - கூர்மையான நகங்களையுடைய நாய்கள், கொடும் தாள் ஏற்றை - வளைந்த காலையுடைய ஆண்கள், ஏழகத் தகரோடு - ஆட்டுக் கிடாய்களுடன், உகளும் - தாவிக் குதிக்கும், முன்றில் - பண்டகசாலையின் முற்றத்தில்