பட்டினப்பாலை

பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

நெடுநல்வாடை

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

மதுரைக்காஞ்சி

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

மலைபடுகடாம்

சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.

திருமுருகாற்றுப்படை

பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்

பொருநராற்றுப்படை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

சிறுபாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

பெரும்பாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

முல்லைப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

குறிஞ்சிப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

பட்டினப்பாலை


சங்கமுக நீராடலும், பகல் விளையாட்டும்

பாடல் வரிகள்:- 094 - 105

புலவு மணல் பூங்கானல்
மா மலை அணைந்த கொண்மூ போலவும், . . . .[95]

தாய் முலை தழுவிய குழவி போலவும்,
தேறு நீர்ப் புணரியோடு யாறு தலைமணக்கும்
மலி ஓதத்து ஒலி கூடல்
தீது நீங்க கடலால் ஆடியும்,
மாசு போக புனல் படிந்தும், . . . .[100]

அலவன் ஆட்டியும் உரவுத் திரை உழக்கியும்,
பாவை சூழ்ந்தும், பல் பொறி மருண்டும்,
அகலாக் காதலொடு பகல் விளையாடிப்
பெறற்கு அரும் தொல் சீர்த் துறக்கம் ஏய்க்கும்,
பொய்யா மரபின் பூ மலி பெருந்துறை . . . .[94-105]

பொருளுரை:

புலால் நாற்றமுடைய மணலை உடைய, மலர்களைக் கொண்ட சோலைகளையுடைய கடற்கரையில், பெரிய மலையை அணைத்த முகிலைப் போலவும், தாயின் முலையைத் தழுவிய குழந்தையைப் போலவும், தெளிந்த கடல் நீருடன் காவிரி ஆறு கலக்கும் ஒலியையுடைய புகார்முகத்தில், தீமை நீங்க கடலில் விளையாடியும், கடலில் விளையாடியதால் உடலில் பட்ட உப்பை நீக்க ஆற்று நீரில் குளித்தும், நண்டுகளை விரட்டி விளையாடியும், வலிமையான அலைகளில் விளையாடியும், மணல் பொம்மைகளைச் செய்தும், ஐம்பொறிகளை நுகர்ந்தும், நீங்காத விருப்பத்துடன் பகல் முழுக்க விளையாடினார்கள் மக்கள். அவர்களுடைய மகிழ்ச்சி, பெறுவதற்கு அரிய தொன்மையான சிறப்பையுடைய மேல் உலகத்தில் உள்ள மகிழ்ச்சியைப் போன்றது. காவிரியின் மலர்கள் நிறைந்த பெரிய துறை, பொய்த்தல் இல்லாத மரபையுடையதாக இருந்தது.

சொற்பொருள்:

புலவு மணல் - புலால் நாற்றமுடைய மணல், பூங்கானல் - மலர்களைக் கொண்ட கடற்கரைச் சோலை, மா மலை அணைந்த கொண்மூ போலவும் - பெரிய மலையை அணைத்த முகிலைப் போலவும், தாய் முலை தழுவிய குழவி போலவும் - தாயின் முலையைத் தழுவிய குழந்தையைப் போலவும், தேறு நீர்ப் புணரியோடு யாறு தலைமணக்கும் - தெளிந்த கடல் நீருடன் காவிரி ஆறு கலக்கும், மலி ஓதத்து ஒலி கூடல் - ஒலியையுடைய புகார்முகம், தீது நீங்க கடலால் ஆடியும் - தீமை நீங்க கடலில் விளையாடியும், மாசு போக புனல் படிந்தும் - உப்பை நீக்க ஆற்று நீரில் குளித்தும், அலவன் ஆட்டியும் - நண்டுகளை விரட்டி விளையாடியும், உரவுத் திரை உழக்கியும் - வலிமையான அலைகளில் விளையாடியும், பாவை சூழ்ந்தும் - மணல் பொம்மைகளை செய்தும், பல் பொறி மருண்டும் - ஐம்பொறிகளை நுகர்ந்தும், அகலாக் காதலொடு பகல் விளையாடி - நீங்காத விருப்பத்துடன் பகல் முழுக்க விளையாடி, பெறற்கு அரும் தொல் சீர்த் துறக்கம் - பெறுவதற்கு அரிய தொன்மையான சிறப்பையுடைய மேல் உலகம், ஏய்க்கும் - போன்று, பொய்யா மரபின் பூ மலி பெருந்துறை - பொய்த்தல் இல்லாத மரபையுடைய மலர்கள் நிறைந்த காவிரியின் பெரிய துறை

குறிப்பு:

அகநானூறு 280 - அலவன் ஆட்டி, நற்றிணை 363 - அலவன் ஆட்டுவோள், குறுந்தொகை 303 - பொன் வரி அலவன் ஆட்டிய ஞான்றே, ஐங்குறுநூறு 197 - இலங்கு வளை தெளிர்ப்ப அலவன் ஆட்டி.