பட்டினப்பாலை

பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

நெடுநல்வாடை

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

மதுரைக்காஞ்சி

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

மலைபடுகடாம்

சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.

திருமுருகாற்றுப்படை

பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்

பொருநராற்றுப்படை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

சிறுபாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

பெரும்பாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

முல்லைப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

குறிஞ்சிப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

பட்டினப்பாலை


விளையாட்டுக் களத்தில் மறவர்களின் போர்

பாடல் வரிகள்:- 059 - 074

முது மரத்த முரண் களரி
வரி மணல் அகன் திட்டை . . . .[60]

இருங்கிளை இனன் ஒக்கல்
கருந்தொழில் கலி மாக்கள்
கடல் இறவின் சூடு தின்றும்,
வயல் ஆமை புழுக்கு உண்டும்,
வறள் அடும்பின் மலர் மலைந்தும், . . . .[65]

புனல் ஆம்பல் பூச் சூடியும்,
நீல் நிற விசும்பின் வலன் ஏர்பு திரிதரு
நாள்மீன் விராய கோள்மீன் போல
மலர்தலை மன்றத்துப் பலருடன் குழீஇ,
கையினும் கலத்தினும் மெய்யுறத் தீண்டி, . . . .[70]

பெருஞ் சினத்தான் புறங் கொடாது
இருஞ் செருவின் இகல் மொய்ம்பினோர்
கல் எறியும் கவண் வெரீஇப்
புள் இரியும் புகர்ப் போந்தை . . . .[59-74]

பொருளுரை:

பழைய மரங்களையுடைய போரிடும் களத்தில், மணல் வரிகளாக உள்ள மேடுகளில், பெரிய உறவினர் மற்றும் சுற்றத்தார் கூட்டத்துள், வலிமையான தொழிலையுடைய செருக்கான மறவர்கள், கடலில் உள்ள இறால் மீனின் தசையை சுட்டுத் தின்றும், வயலில் உள்ள ஆமையின் தசையை வேக வைத்து தின்றும், மணலில் உள்ள அடும்பின் மலர்களை அணிந்தும், நீரில் உள்ள வெள்ளை ஆம்பல் மலர்களைச் சூடியும், நீல நிறத்தை உடைய வானத்தில் வலது புறமாக எழுந்து திரியும் நாள் மீன்களுடன் கலந்த கோள் மீன்கள் போல, அகன்ற இடத்தையுடைய மன்றத்தில் பலரோடு கூடி, கையாலும் ஆயுதங்களாலும் உடலில் படுமாறு தீண்டி, பெருஞ்சினத்தால் ஒருவர்க்கு ஒருவர் புற முதுகு காட்டி ஓடாத பெரிய போர்க்களத்தில், பகைமை உடைய வலிமையானவர்களுடைய கற்களை வீசும் கவணுக்கு அஞ்சி, பறவைகள் அங்கிருந்து நீங்கி, புள்ளிகளையுடைய பனை மரங்களை அடையும்.

சொற்பொருள்:

முது மரத்த முரண் களரி - பழைய மரங்களையுடைய போரிடும் களம், வரி மணல் அகன் திட்டை - மணல் வரிகளாக உள்ள மேடுகள் (ஆற்று நீரினால் வரிகள் ஏற்படும்), இருங்கிளை - பெரிய உறவினர் கூட்டம், இனன் ஒக்கல் - சுற்றத்தார் கூட்டம், கருந்தொழில் கலி மாக்கள் - வலிமையான தொழிலையுடைய செருக்கான மறவர்கள், கடல் இறவின் சூடு தின்றும் - கடலில் உள்ள இறால் மீனின் தசையை சுட்டுத் தின்றும், வயல் ஆமை புழுக்கு உண்டும் - வயலில் உள்ள ஆமையின் தசையை வேக வைத்து தின்றும், வறள் அடும்பின் மலர் மலைந்தும் - மணலில் உள்ள அடும்பின் மலர்களை அணிந்தும், புனல் ஆம்பல் பூச் சூடியும் - நீரில் உள்ள வெள்ளை ஆம்பல் மலர்களின் மலர்களைச் சூடியும், நீல் நிற விசும்பின் - நீல நிறத்தை உடைய வானத்தில், வலன் ஏர்பு - வலது புறமாக எழுந்து, வலிமையுடன் எழுந்து, திரிதரு நாள்மீன் விராய கோள்மீன் போல - திரியும் நாள் மீன்களுடன் கலந்த கோள் மீன்கள் போல, மலர்தலை மன்றத்துப் பலருடன் குழீஇ - அகன்ற இடத்தையுடைய மன்றத்தில் பலரோடு கூடி, கையினும் கலத்தினும் மெய்யுறத் தீண்டி - கையாலும் ஆயுதங்களாலும் உடலில் படுமாறு தீண்டி, பெருஞ் சினத்தான் புறங் கொடாது - பெருஞ்சினத்தால் ஒருவர்க்கு ஒருவர் புற முதுகு காட்டி ஓடாது, இருஞ் செருவின் - பெரிய போர்க்களத்தில், இகல் மொய்ம்பினோர்- பகைமை உடைய வலிமையானவர்கள், கல் எறியும் கவண் வெரீஇ - கற்களை வீசும் கவணுக்கு அஞ்சி, புள் இரியும் புகர்ப் போந்தை - பறவைகள் நீங்கி புள்ளிகளையுடைய பனை மரங்களை அடையும்

குறிப்பு:

வலன் (67) - பொ. வே. சோமசுந்தரனார் உரை, நெடுநல்வாடை (1) - வலப் பக்கம், வலன் ஏர்பு - அகநானூறு 43, 84, 188, 278, 298, 328, நற்றிணை 37, 264, 328, குறுந்தொகை 237, ஐங்குறுநூறு 469, பதிற்றுப்பத்து 24, 31, நெடுநல்வாடை 1, பட்டினப்பாலை 67, முல்லைப்பாட்டு 4, திருமுருகாற்றுப்படை 1, மதுரைக்காஞ்சி 5 - வல மாதிரத்தான் வளி கொட்ப. கல் எறியும் கவண் வெரீஇ (73) - பொ. வே. சோமசுந்தரனார் உரை - பனை மரத்து உச்சியில் இலக்கு வைத்து எறிதலின் ஆண்டு வாழும் பறவைகள் ஓடின என்க. இங்கனம் இலக்குக் கொண்டு கல்லால் எறிதல் உண்மையால் ஆண்டு நிற்கும் பனைகள் கல்லேற்றின் வடுவுடையன என்பார், புகார்ப் போந்தை என்றார்.