பட்டினப்பாலை

பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

நெடுநல்வாடை

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

மதுரைக்காஞ்சி

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

மலைபடுகடாம்

சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.

திருமுருகாற்றுப்படை

பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்

பொருநராற்றுப்படை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

சிறுபாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

பெரும்பாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

முல்லைப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

குறிஞ்சிப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

பட்டினப்பாலை


காவிரிப்பூம்பட்டினத்துத் தோட்டங்கள், தோப்புகள், பூஞ்சோலைகள்

பாடல் வரிகள்:- 028 - 033

குறும்பல்லூர் நெடுஞ்சோணாட்டு
வெள்ளை உப்பின் கொள்ளை சாற்றி,
நெல்லொடு வந்த வல்வாய்ப் பஃறி, . . . .[30]

பணை நிலைப் புரவியின் அணை முதல் பிணிக்கும்,
கழி சூழ் படப்பை கலியாணர்ப்
பொழில் புறவின் பூந்தண்டலை, . . . .[28-33]

பொருளுரை:

சிறிய பல ஊர்களையுடைய பெரிய சோழ நாட்டில், உப்பங்கழியின் கரையில் வெள்ளை உப்பின் விலையைக் கூறி பண்டமாற்றாகப் பெற்ற நெல்லுடன் வந்த வலிய படகுகள், பந்தியில் நிற்கும் குதிரைகள் கட்டப்பட்டிருப்பது போல் கட்டப்பட்டிருக்கும் உப்பங்கழியைச் சூழ்ந்த தோட்டங்களையும், செழிப்பையுடைய தோப்புக்களையும், அவற்றிற்குப் புறமாக உள்ள பூஞ்சோலைகளையும்,

சொற்பொருள்:

குறும்பல்லூர் - சிறிய பல ஊர்கள், அருகில் உள்ள பல ஊர்கள், நெடுஞ்சோணாட்டு - பெரிய சோழ நாட்டில், வெள்ளை உப்பின் கொள்ளை சாற்றி - வெள்ளை உப்பின் விலையைக் கூறி, நெல்லொடு வந்த வல்வாய்ப் பஃறி - நெல்லைக் கொண்டு வந்த வலிய படகுகள், பணை நிலைப் புரவியின் அணை முதல் பிணிக்கும் - பந்தியில் நிற்கும் குதிரைகளைக் கட்டுவதைப் போல் கட்டியிருக்கும், கழி சூழ் படப்பை - உப்பங்கழி சூழ்ந்த தோட்டங்களும், கலியாணர்ப் பொழில் புறவின் பூந்தண்டலை - செழிப்பையுடைய தோப்புக்களும் அவற்றிற்கு புறமாக உள்ள பூஞ்சோலைகள்

குறிப்பு:

பொ. வே. சோமசுந்தரனார் உரை - ஈண்டு உப்பிற்கு பண்ட மாற்றாகக் கொண்ட நெல் என்க. அகநானூறு 140 - நெல்லின் நேரே வெண் கல் உப்பு, அகநானூறு 390 - நெல்லும் உப்பும் நேரே ஊரீர் கொள்ளீரோ, குறுந்தொகை 269 - உப்பை மாறி வெண்ணெல் தரீஇய. பண்டமாற்று குறிக்கப்பட்ட பாடல்கள்- அகநானூறு 60, 61, 126, 245, 296, 390, நற்றிணை 183, குறுந்தொகை 221, 269, ஐங்குறுநூறு 47, பொருநராற்றுப்படை 214-215, 216-7, பட்டினப்பாலை 28-30, and மலைபடுகடாம் மலைபடுகடாம் 413-414. யாணர் - புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்காப்பியம், உரியியல் 83).