பட்டினப்பாலை

பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

நெடுநல்வாடை

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

மதுரைக்காஞ்சி

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

மலைபடுகடாம்

சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.

திருமுருகாற்றுப்படை

பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்

பொருநராற்றுப்படை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

சிறுபாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

பெரும்பாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

முல்லைப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

குறிஞ்சிப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

பட்டினப்பாலை


மருத நிலத்தின் வளமை

பாடல் வரிகள்:- 008 - 019

விளைவு அறா வியன் கழனி
கார்க் கரும்பின் கமழ் ஆலைத்
தீத் தெறுவின் கவின் வாடி, . . . .[10]

நீர்ச் செறுவின் நீள் நெய்தல்
பூச்சாம்பும் புலத்து ஆங்கண்,
காய்ச் செந்நெல் கதிர் அருந்து
மோட்டு எருமை முழுக் குழவி
கூட்டு நிழல் துயில் வதியும், . . . .[15]

கோள் தெங்கின், குலை வாழை,
காய்க் கமுகின், கமழ் மஞ்சள்,
இன மாவின், இணர்ப் பெண்ணை,
முதல் சேம்பின், முளை இஞ்சி, . . . .[8-19]

பொருளுரை:

விளைச்சல் நீங்காத அகன்ற வயல்களில் கருமை நிறமான முதிர்ந்த கரும்பின் மணமுள்ள பாகைக் காய்ச்சும் ஆலைகளின் நெருப்பின் புகைச் சுடுவதால், அழகு கெட்டு, நீரையுடைய வயல்களில் உள்ள நீண்ட நெய்தல் மலர்கள் வாடும் அந்த இடத்தில், காய்ந்த செந்நெல்லின் கதிரைத் தின்ற வயிற்றையுடைய எருமையின் முதிர்ந்த கன்றுகள் நெற்குதிர்களின் நிழலில் உறங்கும். குலைகளையுடைய தென்னையினையும், குலைகளை உடைய வாழையினையும், காயையுடைய கமுகினையும், மணங் கமழும் மஞ்சளையும், பல இனமான மாமரங்களையும், குலைகளையுடைய பனையையும், கிழங்கையுடைய சேம்பையும், முளையையுடைய இஞ்சியையும் உடையன மருத நிலங்கள்.

சொற்பொருள்:

விளைவு அறா - விளைச்சல் நீங்காத, வியன் கழனி - அகன்ற வயல், கார்க் கரும்பின் கமழ் ஆலைத் தீத் தெறுவின் - கருமை நிறமான முதிர்ந்த கரும்பின் மணமுள்ள பாகை காய்ச்சும் ஆலைகளின் நெருப்பின் புகைச் சுடுவதால், கவின் வாடி - அழகு கெட்டு, நீர்ச் செறுவின் நீள் நெய்தல் - நீரையுடைய வயல்களில் உள்ள நீண்ட நெய்தல் மலர்கள், பூச்சாம்பும் புலத்து ஆங்கண் - மலர்கள் வாடும் அந்த இடத்தில், காய்ச் செந்நெல் கதிர் அருந்து மோட்டு எருமை முழுக் குழவி கூட்டு நிழல் துயில் வதியும் - காய்ந்த செந்நெல்லின் கதிரைத் தின்ற வயிற்றையுடைய எருமையின் முதிர்ந்த கன்றுகள் நெற்குதிர்களின் நிழலில் உறங்கும், கோள் தெங்கின் - குலைகளையுடைய தென்னையினையும், குலை வாழை - குலைகளையுடைய வாழையினையும், காய்க் கமுகின் - காயையுடைய கமுகினையும், கமழ் மஞ்சள் - மணங் கமழும் மஞ்சள், இன மாவின் - பல இனமான மாமரங்களையும், இணர்ப் பெண்ணை - குலைகளையுடைய பனை, முதல் சேம்பின் - கிழங்கையுடைய சேம்பும், முளை இஞ்சி - முளையையுடைய இஞ்சி

குறிப்பு:

குழவி (14) - யானையும் குதிரையும் கழுதையும் கடமையும் மானொடு ஐந்தும் கன்று எனற்கு உரிய. எருமையும் மரையும் வரையார் ஆண்டே. கவரியும் கராமும் நிகர் அவற்றுள்ளே. ஒட்டகம் அவற்றொடு ஒரு வழி நிலையும். குஞ்சரம் பெறுமே குழவிப் பெயர்க்கொடை. ஆவும் எருமையும் அது சொலப்படுமே (தொல்காப்பியம், மரபியல் 15-20).