பட்டினப்பாலை

பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

நெடுநல்வாடை

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

மதுரைக்காஞ்சி

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

மலைபடுகடாம்

சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.

திருமுருகாற்றுப்படை

பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்

பொருநராற்றுப்படை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

சிறுபாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

பெரும்பாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

முல்லைப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

குறிஞ்சிப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

பட்டினப்பாலை


காவிரியின் பெருமை

பாடல் வரிகள்:- 001 - 007

வசையில் புகழ் வயங்கு வெண்மீன்
திசை திரிந்து தெற்கு ஏகினும்,
தற்பாடிய தளி உணவின்
புள் தேம்பப் புயல் மாறி
வான் பொய்ப்பினும், தான் பொய்யா, . . . .[5]

மலைத் தலைய கடல் காவிரி;
புனல் பரந்து பொன் கொழிக்கும்; . . . .[1-7]

பொருளுரை:

குற்றம் இல்லாத, புகழையுடைய, விளங்குகின்ற வெள்ளி என்ற கோள், திசை மாறி, தான் நிற்க வேண்டிய வட திசையில் நிற்காமல் தென் திசைக்கண் போனாலும், நீர்த்துளிகளை உணவாகக் கொண்ட வானம்பாடி வருந்துமாறு, மழை பெய்தலைத் தவிர்த்து, வானம் பொய்த்தாலும், தான் பொய்யாது, குடகு மலையின்கண் துவங்கி, கடலில் புகும் காவிரி ஆறு. அது தன்னுடைய நீரைப் பரந்து நிலத்திற்கு வளமையைச் சேர்க்கும்.

சொற்பொருள்:

வசை இல் - குற்றம் இல்லாத, புகழ் - புகழ், வயங்கு வெண்மீன் - விளங்கும் வெள்ளி என்ற விண்மீன், திசை திரிந்து - திசை மாறி, தெற்கு ஏகினும் - தான் நிற்க வேண்டிய வட திசையில் நிற்காமல் தென் திசைக்கண் போனாலும், தற்பாடிய - வானம்பாடி (வானை நோக்கிப் பாடுவது வானம்பாடி, ஆதலின் தற்பாடி என்றனர்), தளி உணவின் - மழைத் துளியாகிய உணவையுடைய, புள் - பறவை, தேம்ப - வருந்த, புயல் மாறி - மழை பெய்தலைத் தவிர்த்து, வான் பொய்ப்பினும் - வானம் பொய்த்தாலும், தான் பொய்யா - தான் பொய்யாது, மலைத் தலைய - குடகு மலையின்கண் துவங்கி, கடல் காவிரி - கடலில் புகும் காவிரி, புனல் பரந்து - நீர் பரந்து, பொன் கொழிக்கும் - பொன்னைச் சேர்க்கும், வளமையைச் சேர்க்கும் மருத நிலத்தின் வளமை

குறிப்பு:

புறநானூறு 35 - இலங்கு கதிர் வெள்ளி தென்புலம் படரினும் அம் தண் காவிரி வந்து கவர்பு ஊட்ட. வானம்பாடி: கலித்தொகை 46 - துளி நசை வேட்கையான் மிசை பாடும் புள்ளின், அகநானூறு 67 - வானம் வாழ்த்தி பாடவும் அருளாது உறை துறந்து எழிலி, ஐங்குறுநூறு 418 - வானம்பாடி வறம் களைந்து ஆனாது அழி துளி தலைஇய, புறநானூறு 198 - துளி நசைப் புள்ளின். வெள்ளி திசை மாறினும்: புறநானூறு 35 - இலங்கு கதிர் வெள்ளி தென்புலம் படரினும், புறநானூறு 117 - தென் திசை மருங்கின் வெள்ளி ஓடினும், புறநானூறு 388 - வெள்ளி தென் புலத்து உறைய, புறநானூறு 389 - வெண்பொன் போகுறு காலை, மதுரைக்காஞ்சி 108 - வரும் வைகல் மீன் பிறழினும், பட்டினப்பாலை 1 - வயங்கு வெண்மீன் திசை திரிந்து தெற்கு ஏகினும். மலையில் பிறந்த காவிரி: பட்டினப்பாலை 6-7 - மலைத் தலைய கடல் காவிரி புனல் பரந்து பொன் கொழிக்கும், மலைபடுகடாம் 327-328 - குடமலைப் பிறந்த தண் பெருங் காவிரி கடல் மண்டு அழுவத்துக் கயவாய் கடுப்ப.