முல்லைப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
மதுரைக்காஞ்சி
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
மலைபடுகடாம்
சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.
திருமுருகாற்றுப்படை
பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்
பொருநராற்றுப்படை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
சிறுபாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
பெரும்பாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
நெடுநல்வாடை
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
குறிஞ்சிப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
பட்டினப்பாலை
பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
முல்லைப்பாட்டு

கார்ப்பருவத்தில் முல்லை நிலம்
பாடல் வரிகள்:- 092 - 100
செறி இலைக் காயா அஞ்சனம் மலர,
முறி இணர்க் கொன்றை நன் பொன் காலக்,
கோடல் குவி முகை அங்கை அவிழ, . . . .[95]
தோடு ஆர் தோன்றி குருதி பூப்ப,
கானம் நந்திய செந்நிலப் பெருவழி
வானம் வாய்த்த வாங்கு கதிர் வரகின்
திரி மருப்பு இரலையொடு மடமான் உகள,
எதிர் செல் வெண்மழை பொழியும் திங்களில், . . . .[92 - 100]
செறியிலைக் காயா வஞ்சன மலர
முறியிறைக் கொன்றை நன்பொன் காலக்
கோடற் குவிமுகை யங்கை யவிழத் . . . .[95]
தோடார் தோன்றி குருதி பூப்பக்
கான நந்திய செந்நிலப் பெருவழி
வானம் வாய்த்த வாங்குகதிர் வரகிற்
றிரிமருப் பிரலையொடு மடமா னுகள
வெதிர்செல் வெண்மழை பொழியுந் திங்களின் . . . .[100]
பொருளுரை:
நுண் மணலில் நெருங்கின இலையையுடைய காயா மலர்கள் கண்மைப் போல மலர, தளிரையும் கொத்துக்களையுமுடைய சரக்கொன்றை மரங்கள் நல்ல பொன்னைப் போன்ற மலர்களைக் கொட்ட, வெண்காந்தளின் குவிந்த மொட்டுக்கள் அழகிய கைகளைப் போல் அவிழ, இதழ்கள் நிறைந்த செங்காந்தள் குருதி போல மலர, இவ்வாறு காடு செழித்த சிவந்த முல்லை நிலத்தின் பெருவழியில் மழை பெய்ததால் வளைந்த கதிரையுடைய வரகிடத்தே, முறுக்குண்ட கொம்பினையுடைய ஆண் மான்களுடன் மென்மையான பெண் மான்கள் துள்ள, பெய்வதற்காக எதிரே செல்லும், வெண்ணிறமான மேகங்கள் பொழியும் திங்களில்,
குறிப்பு:
முல்லைப்பாட்டு 95 - கோடல் குவி முகை அங்கை அவிழ, குறுந்தொகை 167 - காந்தள் மெல்விரல், பரிபாடல் 19 - கை போல் பூத்த கமழ் குலைக் காந்தள், பொருநராற்றுப்படை 33 - காந்தள் மெல் விரல், புறநானூறு 144 - காந்தள் முகை புரை விரலின்.
சொற்பொருள்:
அயிர - நுண் மணலில், செறி இலை - அடர்ந்த இலை, காயா - காயா மலர்கள், அஞ்சனம் மலர - கண் மை போல மலர, முறி இணர் கொன்றை - தளிரையும் கொத்துக்களையுமுடைய சரக்கொன்றை, நன் பொன் - நல்ல பொன், கால - சொரிய, கோடல் - வெண்காந்தள், குவி முகை - குவிந்த மொட்டுக்கள், அங்கை - அழகிய கைகள், அவிழ -அவிழ, தோடு ஆர் தோன்றி - இதழ்கள் நிறைந்த செங்காந்தள், குருதி பூப்ப - குருதி போல மலர, கானம் நந்திய செந்நிலம் பெரு வழி - காடு செழித்த சிவந்த/செவ்விய முல்லை நிலத்தின் பெருவழி, வானம் வாய்த்த - மழை பெய்யப்பெற்ற, வாங்கு கதிர் வரகின் - வளைந்த கதிரையுடைய வரகிடத்தே, திரி மருப்பு இரலையொடு - முறுக்குண்ட கொம்பினையுடைய ஆண் மான்களுடன், மடமான் உகள - மென்மையான பெண் மான்கள் துள்ள, எதிர் செல் - பெய்வதற்காக எதிரே செல்லும், வெண்மழை பொழியும் திங்களில் - வெண்முகில் பொழியும் மாதத்தில் (ஆவணித் திங்கள்)