மதுரைக்காஞ்சி

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

திருமுருகாற்றுப்படை

பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்

பொருநராற்றுப்படை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

சிறுபாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

பெரும்பாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

முல்லைப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

நெடுநல்வாடை

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

குறிஞ்சிப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

பட்டினப்பாலை

பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

மலைபடுகடாம்

சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.

மதுரைக்காஞ்சி - பத்துப்பாட்டு

பாடியவர் :- மாங்குடி மருதனார்
பாடப்பட்டவன் :- தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன்
திணை :- காஞ்சி திணை
பாவகை :- அகவல்பா (ஆசிரியப்பா)
மொத்த அடிகள் :- 782

மதுரைக்காஞ்சி - பத்துப்பாட்டு

பாடியவர் :- மாங்குடி மருதனார்
பாடப்பட்டவன் :- தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன்
திணை :- காஞ்சி திணை
பாவகை :- அகவல்பா (ஆசிரியப்பா)
மொத்த அடிகள் :- 782

சங்க இலக்கிய பாடல் தொகுப்பான பத்துப்பாட்டு என்னும் தொகுப்பில் அடங்குவது மதுரைக் காஞ்சி. இத் தொகுப்பில் உள்ள நூல்களுள் மிகவும் நீளமானது இதுவே. மாங்குடி மருதனார் என்னும் புலவர் இந் நூலை இயற்றியுள்ளார். இப்பாடலில் 782 அடிகள் உள்ளன. பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனுக்கு உலகியல் உணர்த்துவதாய் இப்பாடல் பாடப்பட்டுள்ளது. பாண்டி நாட்டின் தலைநகரமான மதுரையின் அழகையும், வளத்தையும் கூறுகின்ற இந்நூல், அந்நாட்டின் ஐவகை நிலங்களைப் பற்றியும் கூறுகின்றது. இப் பாட்டின் தொடக்கத்தில் தி‌ரைகடல் சூழ்ந்த ஞாலம் பற்றிப் பாடும் புலவர் பிறகு தேன் கூடுகள் நிறைந்திருக்கும் மலையுச்சிகளைப் பற்றியும் கூறுகிறார். இந்த உவமைகள் இயற்கை வளம் குறித்துப் பாடும் பொருட்டு அமைந்தவை அல்ல. வாழ்க்கை அலை போன்று நிலையில்லாதது. எனவே நல்லறங்கள் செய்து மலை போல் என்றும் அழியாப் புகழைத் ‌தேடிக்கொள் என்று மன்னனுக்கு மறைமுகமாய்க் கூறுகிறார்.

இயற்கை வளம் (1-13)
ஓங்கு திரை வியன் பரப்பின்
ஒலி முந்நீர் வரம் பாகத்
தேன் தூங்கும் உயர் சிமைய
மலை நாறிய வியன் ஞாலத்து
வல மாதிரத்தான் வளி கொட்ப . . . .[05]

விய னாண்மீ னெறி யொழுகப்
பகற் செய்யும் செஞ் ஞாயிறும்
இரவுச் செய்யும் வெண் திங்களும்
மை தீர்ந்து கிளர்ந்து விளங்க
மழைதொழில் உதவ மாதிரங் கொழுக்கத் . . . .[10]

தொடுப்பின் ஆயிரம் வித்தியது விளைய
நிலனு மரனும் பயன்எதிர்பு நந்த
நோ யிகந்து நோக்கு விளங்க . . . .[1 - 13]

பொருளுரை:

பொங்கி அலைவீசும் பரப்பினைக் கொண்டது கடல். அதனை எல்லையாகக் கொண்ட ஞாலத்தில் தேன்கூடுகள் தொங்கும் உயர்ந்த முகடுகளைக் கொண்ட மலைகள் தோன்றியுள்ளன. வானப் பெருவெளியில் காற்று வலிமையுடன் சுழன்று கொண்டுள்ளது. எல்லாவற்றையும் விடப் பெரிதாக அகன்றுள்ள விண்மீன்கள் தத்தம் வழியில் செல்கின்றன. பகலில் ஒளிதரும் ஞாயிறு இரவில் ஒளிதரும் திங்கள் ஆகிய இரண்டும் மயக்கமின்றித் தோன்றி ஒளிர்கின்றன. மழை பொழிந்தது. மாநிலம் கொழுத்துள்ளது. ஒன்று விதைத்தால் அது ஆயிரமாக விளைகிறது. விதைத்த நிலமும் விதைக்காத மரங்களும் நல்ல பலனைத் தருகின்றன. இப்படி இயற்கை உதவுவதால் மக்களின் நோக்கத்திலும் துன்பத்தைக் காண முடியவில்லை. யாரும் துன்பம் செய்யவில்லை.

செயற்கைச் செழிப்பு நிலை (14-23)
மே தக மிகப் பொலிந்த
ஓங்கு நிலை வயக் களிறு . . . .[15]

கண்டு தண்டாக் கட்கின் பத்து
உண்டு தண்டா மிகுவளத் தான்
உயர் பூரிம விழுத் தெருவிற்
பொய் யறியா வாய்மொழி யாற்
புகழ் நிறைந்த நன்மாந்த ரொடு . . . .[20]

நல் லூழி அடிப் படரப்
பல் வெள்ளம் மீக் கூற
உலகம் ஆண்ட உயர்ந்தோர் மருக . . . .[14 - 33]

பொருளுரை:

கண்டு மாளாத களிறு. அக் களிறு உண்டு மாளாத வளம். தெருவெங்கும் பூரிப்பு. பொய் பேசத் தெரியாமல் உண்மையே பேசும் மக்கள். அவர்கள் உலகம் புகழும் நன்மக்கள். இப்படிப்பட்ட மக்கள் வாழும் நல்ல ஊழிக்காலம் வெள்ளம் என்னும் எண்ணளவினைக் கொண்ட ஊழிக்காலம். மக்கள் தன் காலடியைப் பற்றிக்கொண்டு பின்தொடரும்படி வெள்ளம் (கோடி கோடி) ஆண்டுகள். கோடிகோடி (1021) ஆண்டுகள் ஆண்டுவந்த பாண்டியரின் வழித்தோன்றலாக விளங்கும் மருகனே! (தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனே!)

அகத்தியரின் வழிவந்த சான்றோன் (24-42)
பிணக் கோட்ட களிற்றுக் குழும்பின்
நிணம் வாய்ப்பெய்த பேய் மகளிர் இணை . . . .[25]

யொலியிமிழ் துணங்கைச் சீர்ப்
பிணை யூபம் எழுந் தாட
அஞ்சு வந்த போர்க்களத் தான்
ஆண் டலை அணங் கடுப்பின்
வய வேந்தர் ஒண் குருதி . . . .[30]

சினத் தீயிற் பெயர்பு பொங்கத்
தெற லருங் கடுந் துப்பின்
விறல் விளங்கிய விழுச் சூர்ப்பின்
தொடித் தோட்கை துடுப் பாக
ஆ டுற்ற ஊன் சோறு . . . .[35]

நெறி யறிந்த கடிவா லுவன்
அடி யொதுங்கிப் பிற் பெயராப்
படை யோர்க்கு முரு கயர
அமர் கடக்கும் வியன் றானைத்
தென்னவற் பெயரிய துன்னருந் துப்பின . . . .[40]

தொல்முது கடவுட் பின்னர் மேய
வரைத்தாழ் அருவிப் பொருப்பிற் பொருந . . . .[24 - 42]

பொருளுரை:

(பாண்டியன் நெடுஞ்செழியன் குற்றால மலைப் போரில் வென்று அதனைத் தனதாக்கிக் கொண்டான். அங்கு நடைபெற்ற போர் இப்பகுதியில் பேசப்படுகிறது) வரைதாழ் அருவி என்பது குற்றாலம். அங்கு இக்காலத்தில் உள்ள இரத்தின சபையில் தென்திசை நோக்கிக் கூத்தாடுபவர் தென்திசைக் கடவுள் (தட்சிணாமூர்த்தி). தென்திசைக் கடவுளைத் ‘தென்னவன்’ என்றனர். தென்னவனைத் ‘தொன்முது கடவுள்’ எனவும் வழங்கினர். (குற்றாலம் பொதியமலையின் ஒரு பகுதி. இப்பகுதியை வள்ளல் ஆய் ஆண்டு வந்தான் என்பதைச் சங்கப் பாடல்கள் தெரிவிக்கின்றன) பிற்காலத்துப் பரணி நூல்கள் போர்க்களக் காட்சியைப் பாடும்போது பிணத்தைப் பேய்க்கூட்டம் சோறாக்கித் தின்றதாகப் பாடுகின்றன. அவற்றிற்கு முன்னோடி போல அமைந்துள்ளது இந்தப் பாடல் பகுதி. பிணமாகிய களிறுகளைக் குவித்துப் கொழுப்பை எடுத்துப் பேய்க்கூட்டம் வாயில் அதவியது. பின்னர் தோளில் கை கோத்துக்கொண்டு ஒன்றன்மேல் ஒன்று விழுந்து தூண் போல் நின்று போர்க்களத்தில் துணங்கைக் கூத்து ஆடியது. ஆண்களின் தலைகளைக் கல்லாக வைத்து அடுப்புக் கூட்டியது. அரசர்களின் குருதியை உலைநீராக ஊற்றியது. அரசர்களின் சினத்தைத் தீயாக மூட்டியது. வலிமை மிக்க அவர்களின் கைகளை முறித்துத் துடுப்பாக்கிக்கொண்டு சோற்றைத் துளாவியது. பிணக் கறி போட்டுச் சோறு சமைத்தது.. சமையல் தொழிலில் வல்ல வாலுவன் விலகிச் சென்றுவிட்டான். இது படையினரை ஆட்டுவிக்கும் ‘முருகு’ ஆட்ட விழா. இப்படிப் போரிட்டு, தென்னவன் பெயர் கொண்ட கடவுளின் அருவி பாயும் நாட்டை இந்தச் செழியன் தனதாக்கிக்கொண்டான்.

வடிம்பலம்ப நின்ற பாண்டியனின் வழித்தோன்றல் நால் வகைப் படைகளின் வலிமை (43-56)
விழுச் சூழிய விளங்கோ டைய
கடுஞ் சினத்த கமழ்கடா அத்து
அளறு பட்ட நறுஞ் சென்னிய . . . .[45]

வரை மருளும் உயர் தோன்றல
வினை நவின்ற பேர் யானை
சினஞ் சிறந்து களனு ழக்கவும்
மா வெடுத்த மலிகுரூஉத் துகள்
அகல் வானத்து வெயில் கரப்பவும . . . .[50]

வாம் பரிய கடுந்திண் டேர்
காற் றென்னக் கடிது கொட்பவும்
வாள் மிகு மற மைந்தர்
தோள் முறையான் வீறு முற்றவும்
இருபெரு வேந்தரொடு வேளிர் சாயப் . . . .[55]

பொரு தவரைச் செரு வென்றும் . . . .[43 - 56]

பொருளுரை:

யானைப்படை - போர் யானையின் முன்தலைக் கொண்டையில் முகப்படாம் என்னும் சுழி தொங்கியது. சினம் மிகுதியால் ஒழுகும் மதம் கமழ்ந்து கொண்டிருந்தது. பகைவர்களோடு மோதி அதன் தலை குருதியால் சேறுபட்டிருந்தது. யானை மலைபோல் உயர்ந்த தோற்றத்தைக் கொண்டிருந்தது. போர்த் தொழிலைப் பிற யானைகளுக்குக் கற்றுத் தரும் பாங்கினைக் கொண்டது செழியனின் யானை. படைகளை அது காலால் துவட்டியது. மா - இதன் ஓட்டத்தால் எழுந்த செம்புழுதி வானத்து வெயிலை மேகம்போல் மறைத்தது. தேர் - குதிரை பூட்டிய தேர் காற்றைப்போல் சுழன்றது. மைந்தர் - வாளேந்திய இளம் வீரர்கள் தம் தோள் வலிமையைப் பெருமிதத்துடன் காட்டினர். இப்படிப்பட்ட நாற்படையின் துணைகொண்டு நெடுஞ்செழியன் சேர சோழரையும் வேளிரையும் வென்றான்.

நெடியோனின் போர்த் திறமை (57-61)
இலங் கருவிய வரை நீந்திச்
சுரம் போழ்ந்த இக லாற்றல்
உயர்ந் தோங்கிய விழுச் சிறப்பின்
நிலந் தந்த பே ருதவிப் . . . .[60]

பொலந்தார் மார்பி னெடியோன் உம்பல் . . . .[57 - 61]

பொருளுரை:

உம்பல் என்பது யானை. நெடியோனின் வழித்தோன்றலாக வந்த உம்பல் நெடுஞ்செழியன். நெடியோன் அருவி பாய் மலையைக் கடந்து சென்றான். பாலை நிலத்தையும் கடந்து சென்றான். அப்போது தன்னோடு மாறுபட்டவர்களைத் தன் ஆற்றல் மிகுதியால் வென்றான். தோற்றவர்கள் தம் நிலப்பகுதியை நெடியோனுக்குக் கொடுத்தனர். அதனை அவன் தனதாக்கிக் கொள்ள வில்லை. மாறாக அவர்களின் நாட்டை அவர்களுக்கே திருப்பிக் கொடுத்து விட்டான். இது ‘நிலம் தந்த பேருதவி’. இதனை ‘நிலந்தரு திரு’ என்றனர். ‘திரு’ என்பது பெருமை. வென்ற நிலத்தைத் தோற்றுப்போன உடையாளி அரசனுக்கே திருப்பித் தந்த நெடியோன் இவன். இந்தப் பாண்டிய அரசன் நெடியோன் தான் வென்ற நாட்டைத் தன்னிடம் தோற்ற அரசனுக்கு உதவியாக அமையும்படி திருப்பித் தந்ததால் அது ‘பேருதவி’ என்று போற்றப்பட்டது. நிலமளந்த நெடியோனின் திருவைவிட, நிலம் தந்த பேருதவியாகிய திரு மேலானதாகையால் இப் பாண்டியன் ‘நிலந்தரு திருவின் நெடியோன்’ என்று போற்றப்படுகிறான் இவன் வழி வந்த யானைக் குட்டிதான் இப் பாட்டுடைத் தலைவன் நெடுஞ்செழியன். நிலமளந்த நெடியோன் - மாபலியின் கொடையைக் கொன்று, அவனது மூவுலகையும் தனதாக்கிக் கொண்டான்.

மன்னர் மன்னனாக விளங்கிய பெருமை (62-74)
மரந் தின்னூஉ வரை யுதிர்க்கும்
நரை யுருமின் ஏற னையை
அருங் குழுமிளைக் குண்டுக் கிடங்கின்
உயர்ந் தோங்கிய நிரைப் புதவின் . . . .[65]

நெடு மதில் நிரை ஞாயில்
அம் புமிழ் அயி லருப்பந்
தண் டாது தலைச் சென்று
கொண்டு நீங்கிய விழுச் சிறப்பின்

பொருளுரை:

இடியானது, பச்சை மரங்களை எரித்துத் தின்று பட்ட மரங்களாக்கும். பாறையாக உள்ள மலைகளையும் உதிரச் செய்யும். அதுபோல நெடுஞ்செழியன் பகைவர் பலரது கோட்டைகளைத் தகர்த்தான். பகைவரின் கோட்டை கடத்தற்கரிய காவற்காடுகளுக்கு இடையே இருந்தது. ஆழமான அகழிகள், மிக உயரத்தில் வீரர்கள் பதுங்கிக் கொள்ளும் புதவு, நீண்ட மதில், படைக்கருவிகளைப் பாதுகாக்கும் ஞாயில், மறைந்திருந்து அம்பெய்யவும் வேல் வீசவும் உதவும் அருப்பம் முதலானவற்றைக் கொண்டிருந்தது, பகைவரின் கோட்டை. இப்படிப்பட்ட இடங்களிலெல்லாம் நெடுஞ்செழியனின் படை தடையின்றி உள்ளே சென்று கோட்டையைத் தனதாக்கிக் கொண்டது. இது அவனது விழுமிய சிறப்புகளுள் ஒன்று.

தென் குமரி வட பெருங்கல் . . . .[70]

குண குட கடலா வெல்லைத்
தொன்று மொழிந்து தொழில் கேட்ப
வெற்ற மொடு வெறுத் தொழுகிய
கொற்ற வர்தங் கோனா குவை . . . .[62 - 74]

பொருளுரை:

தெற்கில் குமரிமுனை, வடக்கில் வேங்கடமலை, கிழக்கிலும் மேற்கிலும் கடல், இந்த எல்லைப் பகுதிக்குள் ஆண்ட மன்னர்கள் அனைவரும் வழிவழியாகத் தனது ஆணைக்குட்பட்டு நடக்கும்படி செய்த அரசர்க்கரசன் நெடுஞ்செழியன். வெற்றம் = வெறுப்பு, வேறு வழி இல்லையே என்னும் வெறுப்போடு இவனுக்கு அடிபணிந்து ஒழுகினர். கொற்றம் = பிறர் பணியும் வெற்றி.

கடல்வளம் மிகுந்த சாலியூரைக் கொண்ட வெற்றி (75-88)
வானி யைந்த இரு முந்நீர்ப் . . . .[75]

பேஎம் நிலைஇய இரும் பெளவத்துக்
கொடும் புணரி விலங்கு போழக்
கடுங் காலொடு கரை சேர
நெடுங் கொடிமிசை இதை யெடுத்து
இன் னிசைய முரச முழங்கப . . . .[80]

பொன் மலிந்த விழுப் பண்டம்
நா டார நன் கிழிதரும்
ஆடி யற் பெரு நாவாய்
மழை முற்றிய மலை புரையத்
துறை முற்றிய துளங் கிருக்கைத் . . . .[85]

தெண் கடற் குண் டகழிச்
சீர் சான்ற உயர் நெல்லின்
ஊர் கொண்ட உயர் கொற்றவ! . . . .[75 - 88]

பொருளுரை:

‘நெல்லின் ஊர்’ என்பது சாலியூர். நெடுஞ்செழியன் இவ்வூரை வென்று தனதாக்கிக் கொண்டான். ‘விலங்கு’என்றால் வளைவு. சாலியூரில் கடல் வளைந்திருந்தது. காற்றால் செலுத்தப்படும் பெரும்பெரும் நாவாய்க் கப்பல்கள் இங்குப் பொன்னை இறக்கின. பொருள்களை ஏற்றின. அப்போதெல்லாம் முரசு முழங்கிற்று. நாவாயின் பாய்மரம் ‘இதை‘. இதில் நாட்டின் அடையாளக் கொடி கட்டப்பட்டிருந்தது. நாவாய் கடலலையில் ஆடியது. நாவாய் மலை போலவும், அதன் பாய்மரம் மலையில் மேயும் மழைமேகம் போலவும் தோன்றியது. இப்படிப் பல நாவாய்கள். இந்தத் துறைமுக நகரைச் சுற்றிலும் ஆழமான அகழிகள் இருந்தன. வானத்தைத் தொடுவது போன்ற பெருங்கடல். மேகங்கள் போல் நுரைதள்ளும் பேரலைகள். இந்த வளைந்த புணரிக் கடல்தான் உட்குழிவாக நிலப்பகுதியில் நுழைந்திருந்தது. (இந்தச் சாலியூர் இக்காலத்துத் தனுஷ்கோடியின் ஒரு பகுதியாய் இருந்து கடலால் கொள்ளப்பட்டது.) ‘புணரி’ என்று இங்குக் குறிப்பிடப்படுவது இராமேஸ்வரத்துக்கு மேற்கில் வடபால் தென்பால் கடல்நீர்கள் புணர்வதை உணர்த்துகிறது.

குரவை ஒலியும் பிற ஓசைகளும் மலிந்த ஊர (89-97)
நீர்த் தெவ்வும் நிரைத் தொழுவர்
பாடு சிலம்பு மிசை யேற்றத . . . .[90]

தோடு வழங்கும் அக லாம்பியிற்
கய னகைய வய னிறைக்கு
மென் றொடை வன் கிழாஅர்
அதரி கொள்பவர் பகடுபூண் தெண்மணி
இரும்புள் ஒப்பும் இசையே என்றும் . . . .[95]

மணிப்பூ முண்டகத்து மணல்மலி கானற்
பரதவர் மகளிர் குரவையொ டொலிப்ப . . . .[89 - 97]
பொருநர்க்கு யானை முதலிய பரிசுகளைப் பாண்டியன் கொடுத்தல் (98-105)
ஒருசார், விழவுநின்ற விய லாங்கண்
முழவுத் தோள் முரட் பொருநர்க்கு
உரு கெழு பெருஞ் சிறப்பின் . . . .[100]

இரு பெயர்ப் பேரா யமொடு
இலங்கு மருப்பிற் களிறு கொடுத்தும்
பொலந் தாமரைப் பூச் சூட்டியும்
நலஞ் சான்ற கலஞ் சிதறும்
பல் குட்டுவர் வெல் கோவே! . . . .[98 - 105]

பொருளுரை:

சேரநாட்டின் பகுதியான குட்டநாட்டில் ஆங்காங்கே பல மன்னர்கள் ஆண்டு வந்தனர். இவர்களைக் ‘குட்டுவர்’ என்றனர். இப்படிப்பட்ட குட்டுவர் பலரை நெடுஞ்செழியன் வென்றான். ‘கிழார்’ எனப்படுவோர் நன்செய்நில உழவர். ‘தொழுவர்’ என்போர் நிலப் பணியாளர். தொழுவர் ஆற்று நீரை மேட்டு நிலங்களுக்கு ஏற்றத்தால் தெவ்வி இறைத்துப் பாய்ச்சினர். நீர் இறைக்கும்போது அவர்கள் பாடிய பாட்டிசை எங்கும் முழங்கியது. ‘ஆம்பி’ எனபது ஏற்றத்தில் நீரை மொண்டு ஊற்றும் சால். ‘தோடு’ என்பது ஆம்பியை ஏற்றத்தில் தொடுக்கும் பகுதி. அகன்ற ஆம்பியின் வாயில் நீரை மொள்ளும்போது ஆற்றிலிருந்த கயல் மீன்களும் மொண்டு ஊற்றப்படுவது உண்டு. அவ்வாறு மொண்டு ஊற்றப்பட்ட கயல்மீன்கள் வயலில் புரண்டன. கிழார் போர் அடிக்க எருதுகளைக் கயிறுகளைத் துவளவிட்டு மென்மையாகத் தொடுத்தனர். அந்த எருதுகளின் மணியோசை தெளிவாகவும் இனிமையாகவும் கேட்டது. இந்த ஓசையைக் கேட்டுப் பறவைகள் பறந்தோடின. பரதவர் மகளிர் கடற்கரை மணலில் முண்டக மரத்தடியில் குரவை ஆடிக் குரவை (குலவை) ஒலி எழுப்பினர். இது வயல்வெளிப் பகுதியில் நிகழ்ந்தது. மற்றொரு பக்கம் ஊர்ப்பகுதியில் விழாக் கொண்டாடும் மன்றங்களில் கலைஞர், உழவர், மறவர் ஆகியோருக்குக் கொடை வழங்கும் பாங்கு நிகழ்ந்து கொண்டிருந்தது. கொடையானது தங்கத் தாமரைப்பூ விருதாகவும் , விருதுக் கிண்ணங்களாகவும் இருந்தன.

முதுவெள்ளிலை என்னும் ஊரின் சிறப்பு (106-119)
கல் காயுங் கடுவேனி லொடு
இரு வானம் பெயலொ ளிப்பினும்
வரும் வைகல் மீன் பிறழினும்
வெள்ளமா றாது விளையுள் பெருக
நெல்லி னோதை அரிநர் கம்பலை . . . .[110]

புள்ளிமிழ்ந் தொலிக்கும் இசையே என்றும்
சலம் புகன்று கறவுக் கலித்த
புலவு நீர் வியன் பெளவத்து
நிலவுக் கானல் முழவுத் தாழைக்
குளிர்ப் பொதும்பர் நளித் தூவல் . . . .[115]

நிரைதிமில் வேட்டுவர் கரைசேர் கம்பலை
இருங்கழிச் செறுவின் வெள்ளுப்புப் பகர்நரொடு
ஒலி யோவாக் கலி யாணர்
முது வெள்ளிலை மீக் கூறும் . . . .[106 - 119]

பொருளுரை:

மலையே காய்ந்து போகும்படி கடுமையான கோடை வந்தாலும், கரு மேகங்கள் மழை பொழியாவிட்டாலும், நாள்தோறும் காலையில் தோன்றும் கதிரவன் வடபாலோ தென்பாலோ பாகைஇடம் சாய்ந்து எழுந்தாலும், வைகை யாற்றில் வெள்ளம் வருவது மாறாததால் விளைச்சல் பெருகி நெல் அறுப்போர் பாடும் பாடலோசை, நீர்ப்பறவைகளின் பாடல் ஓசை. திமில்படகு வேட்டுவர் ஓசை. பெருங்கடலில் சுறா மிகுந்துள்ள இடங்களுக்கு விரும்பிச் சென்று கட்டு மரங்களில் மீனைப் பிடித்துக் கொண்டுவந்து நிலாமணல் கரையில் தாழை மரத்தடிக்கு எற்றும்போது முழவை முழக்கிக்கொண்டு பாடும் பாடல் ஓசை . உப்பு விற்போர் கூவும் ஓசை ஆகிய ஓசைகளோடு சேர்ந்து, முதுவெள்ளில் என்னும் பாண்டிய நாட்டுத் துறைமுகப் பகுதியில் அரசனை வாழ்த்தும் ஒலியும் கேட்டுக்கொண்டேயிருக்கும். முதுவெற்றிலை = தூத்துக்குடி.

முதுவெள்ளிலையார் ஏவல் கேட்ப, தலையாலங்கானத்தில் பகைவர்களை வென்றமை (120-130)
வியன் மேவல் விழுச் செல்வத்து . . . .[120]
இரு வகையான் இசை சான்ற
சிறு குடிப் பெருந் தொழுவர்
குடி கெழீஇய நானிலவ ரொடு
தொன்று மொழிந்து தொழில் கேட்பக்

பொருளுரை:

சிறுகுடியில் வாழ்ந்த பெருந்தொழுவர் அறிவு வழங்குதல், ஆக்கம் பெற உதவுதல் என்னும் இருவேறு பாங்குகளால் புகழ் பெற்றிருந்தனர். பலரும் விரும்பிப் பேணும் பெருஞ்செல்வம் பெற்றவர்களாகவும் விளங்கினர். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்னும் நால்வகை நிலங்களிலும் வாழ்ந்த இவர்கள் வழிவழியாகப் பாண்டியன் இட்ட பணியையும் நிறைவேற்றி வந்தனர்.

கா லென்னக் கடிது ராஅய் . . . .[125]

நாடு கெட எரி பரப்பி
ஆலங் கானத் தஞ்சுவர விறுத்து
அரசு பட அமரு ழக்கி
முரசு கொண்டு களம் வேட்ட
அடு திறலுயர் புகழ் வேந்த . . . .[120 - 130]

பொருளுரை:

நெடுஞ்செழியனின் படை ஒன்றோடொன்று உரசிக் கொண்டு காற்றைப்போல் விரைந்து சென்றது. ஆலங்கானப் போரில் வெற்றி பெற்ற பின் அந்நாட்டை எரித்தது. எதிர்த்த அரசர்கள் படுத்துப்போயினர். வென்ற அரசர்களின் முரசுகளைத் தன் நாட்டுக்குக் கொண்டுவந்து வெற்றி முரசமாக நெடுஞ்செழியன் முழக்கினான். இப்படி, ‘அடுதிறல் உயர்புகழ் வேந்தே’!

கொற்கைக்குத் தலைவன் (131-138)
நட்டவர் குடி யுயர்க் குவை
செற்றவர் அரசு பெயர்க் குவை
பேரு லகத்து மேஎந் தோன்றிச்
சீரு டைய விழுச் சிறப்பின்
விளைந்து முதிர்ந்த விழு முத்தின் . . . .[135]

இலங்கு வளை இருஞ் சேரிக்
கட் கொண்டிக் குடிப் பாக்கத்து
நற் கொற்கை யோர்நசைப் பொருந . . . .[131 - 138]

பொருளுரை:

வேந்தே! நீ உன்னோடு நட்பு கொண்ட அரசர்களின் குடியை உயர்வடையச் செய்வாய். உன்னோடு பகை கொண்ட அரசர்களைப் பெயர்த்தெரிவாய். கொற்கை பேருலகத்தில் பெயர்பெற்று மேலோங்கி நிற்கிறது. அதற்குக் காரணம் சீரும் சிறப்பும் மிக்க முத்து விளையும் சங்குகள் அங்கு விளைவதுதான். கொற்கைத் துறைமுகத்துச் சேரியில் வாழும் குடிமக்கள் செல்வ வளத்தில் கள்ளுண்டு களிப்பினும் உன்னை (நெடுஞ்செழியனை) அடையும் ஆசையோடு போராடுகின்றனர்.

செழியன் பரதவரை வென்றமை (139-144)
செற்ற தெவ்வர் கலங்கத் தலைச்சென்று
அஞ்சுவரத் தட்கும் அணங்குடைத் துப்பிற் . . . .[140]

கோழூ உன்குறைக் கொழு வல்சிப்
புலவு விற் பொலி கூவை
ஒன்று மொழி ஒலி யிருப்பில்
தென் பரதவர் போ ரேறே . . . .[139 - 144]

பொருளுரை:

தென்பரதவர் போர்த்திறம் மிக்கவர். பகைவர் அஞ்சும்படி அவர் நாட்டுக்கே சென்று போரிட்டு அவர்களைத் தடுத்து நிறுத்தும் வல்லமை பெற்றவர். அவர்கள் பகைவரின் கொழுப்பைக் குத்திய அம்போடு கூடிய வில்லைத் தம் கூவைக் குடிசையில் சார்த்தியிருப்பர். ஊரில் ஒன்று கூடித் தம் பெருமையைப் பேசி ஒலித்துக் கொண்டிருப்பர். இப்படிப்பட்ட தென்பரதவரைப் போரிட்டு வென்றவனே!

பகைவரது நாட்டைக் கைக்கொண்ட வெற்றி (145-151)
அரிய வெல்லாம் எளிதினிற் கொண்டு . . . .[145]

உரிய வெல்லாம் ஓம்பாது வீசி
நனிபுகன் றுறைது மென்னா தேற்றெழுந்து
பனிவார் சிமையக் கானம் போகி
அகநாடு புக்கவர் விருப்பம் வெளவி
யாண்டுபல கழிய வேண்டுபுலத் திறுத்து . . . .[150]

மேம்பட மரீஇய வெல்போர்க் குருசில் . . . .[145 - 151]

பொருளுரை:

நெடுஞ்செழியன் கிடைத்தற்கரிய பொருளையெல்லாம் எளிதாகப் பெற்றவன். அவற்றையும், தனக்கு உரியனவற்றையும் தனக்கென்று வைத்துக் கொள்ளாமல் பிறருக்கு அள்ளிக் கொடுத்தவன் இந்த மகிழ்வோடு வாழலாம் என்று எண்ணிக்கொண்டு இருக்காமல் போருக்கு எழுந்தவன். பனிவார் சிமையம் என்பது இமயமலை. இமயமலைக் காட்டுக்குச் சென்று வழியில் இருந்த அகநாட்டு அரசர்களின் கோட்டைகளைக் கைப்பற்றியவன். அப்போது, அங்கெல்லாம் தான் விரும்பிய இடத்தில் தங்கியவன். இப்படிப் போரில் வென்ற அரசுச் செம்மலே!

பகைவர் தேசம் பாழ்பட்ட நிலை (152-176)
உறு செறுநர் புலம் புக்கவர்
கடி காவி னிலை தொலைச்சி
இழி பறியாப் பெருந்தண் பணை
குரூஉக் கொடிய எரி மேய . . . .[155]

நா டெனும் பேர் காடாக
ஆ சேந்த வழி மாசேப்ப
ஊரி ருந்த வழி பாழாக
இலங்கு வளை மட மங்கையர்
துணங்கை யஞ்சீர்த் தழூஉ மறப்ப . . . .[160]

அவை யிருந்த பெரும் பொதியிற்
கவை யடிக் கடு நோக்கத்துப்
பேய் மகளிர் பெயர் பாட
அணங்கு வழங்கு மகலாங் கண்
நிலத் தாற்றுங் குழூஉப் புதவின் . . . .[165]

அரந்தைப் பெண்டிர் இனைந்தனர் அகவக்
கொழும் பதிய குடி தேம்பச்
செழுங் கேளிர் நிழல் சேர
நெடுநகர் வீழ்ந்த கரிகுதிர்ப் பள்ளிக்
குடுமிக் கூகை குராலொடு முரலக . . . .[170]

கழுநீர் பொலிந்த கண்ணகன் பொய்கைக்
களிறுமாய் செருந்தியொடு கண்பமன் றூர்தர
நல்லேர் நடந்த நசைசால் விளைவயல்
பன்மயிர்ப் பிணவொடு கேழல் உகள
வாழா மையின் வழிதவக் கெட்டுப் . . . .[175]

பாழா யினநின் பகைவர் தேஎம் . . . .[152 - 176]

பொருளுரை:

நெடுஞ்செழிய! உன் பகைவர் நாடு பாழாயிற்று. (எப்படியெல்லாம் பாழாயிற்று என்று இங்குக் கூறப்படுகிறது.) செழியன் வலிமை மிக்க பகைவர் நாட்டுக்குள் புகுந்தான். அவர்களது காவற் காடுகளையும், வயல்களையும் எரித்தான். அதனால் அவர்களின் நாட்டுக்கு ‘நாடு’ என்னும் பேர் இல்லாமல் போய்க் ‘காடு’ என்னும் பெயர் வழங்கலாயிற்று. கறவைப் பசுக்கள் மேய்ந்த வெளிகளில் காட்டு விலங்குகள் திரிந்தன. ஊர் இருந்த இடம் பாழ் நிலமாக மாறியது. அந்த ஊர்களில் வாழும் ஒரு சிலரும் விழாக் கொண்டாடித் துணங்கை ஆடுவதையே மறந்து விட்டனர். மக்கள் கூடி மகிழ்ந்த பொதுமன்றங்களில் பேய்கள் கூத்தாடின. ‘அணங்கு’ என்னும் அழகியர் உலாவிய தெருக்களில் கணவனை இழந்த ‘அரந்தைப் பெண்டிர்’ அழுது கொண்டிருந்தனர். கொழுங்குடி மக்கள் அவர்களின் மூதாதையர் நிழலைச் சென்றடைந்தனர். (மாண்டனர்) கரிக்குதிர்ப்பள்ளி (ஒப்பு நோக்குக ‘குராப்பள்ளி’) ஓங்கி உயர்ந்த மாளிகைகளைக் கொண்ட நகரங்கள் செழியனின் அடிக்கீழ் வீழ்ந்தன. மாடங்களில் மக்கள் நடமாட்டம் இல்லை. மாறாக கூகைகளும் கோட்டான்களும் இருந்து கூவிக்கொண்டிருந்தன. கழுநீர்ப் பூக்கள் பூத்திருந்த பொய்கை காட்டு யானைகள் மேயும் செருந்திப் பூவும், கண்புப் பூவும் பூத்து வறண்டு போயிற்று. நல்லேர் பூட்டி உழுத வயல்களைக் காட்டுப் பன்றிகள் உழுது கொண்டிருந்தன. பகைவர் நாடு இப்படிப் பாழாகி மக்கள் வாழாததால் அந்த இடங்களுக்குச் செல்லும் வழித்தடங்களும் கெட்டுப் போயின.

பகைவரை அடக்கி, அவரை அறநெறியில் நிறுத்துதல் (177-196)
எழாஅத் தோள் இமிழ்மு ழக்கின்
மாஅத் தாள் உயர் மருப்பிற்
கடுஞ் சினத்த களிறு பரப்பி
விரி கடல் வியன் றானையொட . . . .[180]

முரு குறழப் பகைத்தலைச் சென்று
அகல் விசும்பின் ஆர்ப் பிமிழப்
பெய லுறழக் கணை சிதறிப்
பல புரவி நீ றுகைப்ப
வளை நரல வயி ரார்ப்பப் . . . .[185]

பீ டழியக் கடந் தட்டவர்
நா டழியக் எயில் வெளவிச்
சுற்ற மொடு தூ வறுத்தலிற்
செற்ற தெவ்வர் நின்வழி நடப்ப
வியன்கண் முதுபொழில் மண்டில முற்றி . . . .[190]

பொருளுரை:

செழியன் முதுபொழிலை முற்றுகையிட்டான். (அம் முற்றுகையின் போது எப்படித் தாக்கினான் என்பது இங்குக் கூறப்படுகிறது) முரசை முழக்கினான். யானைப்படையைப் பரவலாக நிறுத்தினான். கடல் போன்ற காலாள் படையுடன் சென்று தாக்கினான். முருகனைப் போல் மோதினான். போர் முழக்கம் வானில் எதிரொலித்தது. வெயிலின் கதிர்கள் போல் அம்புகள் பாய்ந்தன. போர்க்குதிரைகள் புழுதியைக் கிளப்பிக் கொண்டு பாய்ந்தன. சங்கு ஊதினர். கொம்பு ஊதினர். பகையரசரின் பெருமை அழிந்தது. நாடு அழிந்து போனதால் கோட்டையைக் கைப்பற்றிக் கொண்டான். பகை நாட்டு மக்களின் சுற்றத்தார்கூட அழிந்து போயினர். எதிர்த்துப் போரிட்ட பகைவர் செழியனின் ஆணைக்குக் கட்டுப்பட்டு நடந்து கொண்டனர். இவ்வாறு முதுபொழில் முற்றுகை நடந்து முடிந்தது.

அரசியல் பிழையா தறநெறி காட்டிப்
பெரியோர் சென்ற அடிவழிப் பிழையாது
குடமுதல் தோன்றிய தொன்றுதொழு பிறையின்
வழிவழிச் சிறக்கநின் வலம்படு கொற்றம்
குணமுதல் தோன்றிய ஆரிருள் மதியின் . . . .[195]

தேய்வன கெடுகநின் தெவ்வர் ஆக்கம் . . . .[177 - 196]

பொருளுரை:

வழிவழி சிறக்க வாழ்க. அரசியல் பிழையாது ஆட்சி புரிக. அறநெறியைப் பின்பற்றி வாழ்ந்து காட்டிய பெரியோரின் அடியொற்றிப் பிழை நேராமல் ஆட்சி புரிக. மேற்கில் தோன்றும் பிறைநிலா வளர்வது போல் உனது வெற்றிமுகம் வளரட்டும். கிழக்கில் தோன்றும் முழுநிலா தேய்வது போல உன் பகைவரும் அவர்களின் செல்வமும் தேயட்டும்.

செழியனை வாழ்த்தி, அவனுக்கு நிலையாமையை அறிவுறுத்தத் தொடங்குதல் (197-209)
உயர்நிலை உலகம் அமிழ்தொடு பெறினும்
பொய்சேண் நீங்கிய வாய்நட் பினையே
முழங்குகட லேணி மலர்தலை யுலகமொடு
உயர்ந்த தேஎத்து விழுமியோர் வரினும் . . . .[200]

பகைவர்க் கஞ்சிப் பணிந்தொழு கலையே
தென்புல மருங்கின் விண்டு நிறைய
வாணன் வைத்த விழுநிதி பெறினும்
பழிநமக் கெழுக என்னாய் விழுநிதி
ஈதல் உள்ளமொடு இசைவேட் குவையே . . . .[205]

பொருளுரை:

வானுலகத்தை அமிழ்தத்தோடு சேர்த்துக் கொடுத்தாலும் தான் கொடுத்த வாக்கிலிருந்து தவற மாட்டான். பகைவர்க்கு அஞ்சிப் பணியாதவன் முழங்கும் கடல் ஏணிக்கு மேல் உலகம் மலர்ந்து பூத்திருக்கிறது.உயர்ந்த மேல் உலகத்தின் வானோர் மண்ணுலகத்தையே படையாகத் திரட்டிக்கொண்டு எதிர்த்து வந்தாலும் செழியன் பணியமாட்டான். பழிக்கு அஞ்சுபவன் - பாண்டிய நாட்டின் தென்பகுதியில் வாணன் என்பவன் விழுமிய நிதிக்குவியலை மூங்கில் குழாய்களில் சேமித்து வைத்திருந்தான். அதனை முழுமையாகப் பெறுவதாயினும் ‘ஏற்றல்’ பழி வரும் என்று எண்ணி வாங்கமாட்டான். புகழ்வேள்வி செய்பவன் - தன்னிடம் உள்ள விழுமிய செல்வத்தை யெல்லாம் ‘ஈய வேண்டும்’ என்னும் எண்ணத்தோடு வாரி வழங்கும் இசை வேள்வியைச் செய்வான்.

அன்னாய் நின்னொடு முன்னிலை எவனோ
கொன்னொன்று கிளக்குவல் அடுபோர் அண்ணல்
கேட்டிசின் வாழி கெடுகநின் அவலம்
கெடாது நிலைஇயர்நின் சேண்விளங்கு நல்லிசை . . . .[197 - 209]

பொருளுரை:

செழியனை ‘அன்னாய்’ என விளித்துப் புலவர் சொல்லத் தொடங்குகிறார். எங்களுக்கெல்லாம் தாயாக விளங்குபவனே! உன் முன்னே நின்றுகொண்டு உன் பெருமைகளைப் பேசுவதால் என்ன பயன். சும்மா! ஒரு நினைப்பு. சொல்கிறேன் கேள். போரில் அப்பாவி மக்களை அழித்துவிட்டோமே என்று துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறாய். இந்தத் துன்பக் கவலையை விட்டு விடுக. தொலைவிடங்களும் போற்றும் நின் புகழ் குன்றாமல் நிலைத்திருக்கட்டும்.

உலகைச் சிறப்புற ஆண்டு மறைந்தோர் பலர் எனல் (210-237)
தவாப் பெருக்கத் தறா யாணர . . . .[210]

அழித் தானாக் கொழுந் திற்றி
இழித் தானாப் பல சொன்றி
உண் டானாக் கூர் நறவில்
தின் றானா இன வைக
னிலனெடுக் கல்லா வொண்பல் வெறுக்கைப் . . . .[215]

பயனற வறியா வளங்கெழு திருநகர்
நரம்பின் முரலு நயம்வரு முரற்சி
விறலியர் வறுங்கைக் குறுந்தொடி செறிப்பப்
பாணர் உவப்ப களிறுபல தரீஇக்
கலந்தோ ருவப்ப வெயிற்பல கடைஇ . . . .[220]

மறங் கலங்கத் தலைச் சென்று
வாளுழந் ததன் தாள் வாழ்த்தி
நா ளீண்டிய நல் லகவர்க்குத்
தே ரோடு மா சிதறிச்

பொருளுரை:

வெறுக்கை என்பது ‘போதும் போதும்’ என்று வெறுக்கத் தக்க அளவில் பெருகியுள்ள செல்வம். ஆனா = அமையாத. யாணர் =புதுப்புது வருவாய். குறையவே குறையாத செல்வம். புதுப்புது வருவாய். தின்றழிக்க முடியாத புலால் உணவு. அள்ள அள்ளக் குறையாத பெருஞ்சோறு. உண்டு மாளாத கள். இவற்றைத் தின்று மாளாத காலைப்பொழுது. பயன்படுத்த முடியாமல் நிலத்திலேயே கொட்டிக் கிடக்கும் வெறுக்கத் தக்க செல்வம். எதை எப்படிப் பயன்படுத்துவது என்று தெரியாமல் செல்வ வளம் செழித்துக் கிடக்கும் அரண்மனை. யாழ் மீட்டும் விறலியர் கைகளுக்கு வளையல். பாணர்களுக்கு யானைகள். அதிகாலையில் அவைக்கு வந்து அரசனை வாழ்த்தும் அகவர்களுக்கு குதிரை பூட்டிய தேர். அகவர் = ’ஜே’ போடுவோர் என்றெல்லாம் பரிசுகளை நெடுஞ்செழியன் வழங்கினான். நண்பர்கள் மகிழும்படி வென்று கொண்டுவந்தனவற்றை வழங்கினான்.

சூடுற்ற சுடர்ப் பூவின் . . . .[225]

பாடு புலர்ந்த நறுஞ் சாந்தின்
விழுமிய பெரியோர் சுற்ற மாகக்
கள்ளின் இரும்பைக் கலஞ்செல வுண்டு
பணிந்தோர் தேஎந் தம்வழி நடப்பப்
பணியார் தேஎம் பணித்துத்திறை கொண்மார . . . .[230]

பருந்துபறக் கல்லாப் பார்வற் பாசறைப்
படுகண் முரசங் காலை யியம்ப
வெடிபடக் கடந்து வேண்டுபுலத் திறுத்த
பணைகெழு பெருந்திறற் பல்வேல் மன்னர்
கரைபொரு திரங்கும் சுனையிரு முந்நீர்த் . . . .[235]

திரையிடு மணலினும் பலரே உரைசெல
மலர்தலை யுலகம் ஆண்டுகழிந் தோரே . . . .[210 - 237]

பொருளுரை:

விழுமிய பெரியோர் உன் சுற்றம். அவர்கள் நீ சூட்டிய விருதுப் பூவை அணிந்தவர்கள். அவர்களின் மார்பில் உள்ள சந்தனம் பெருமையால் புலர்ந்துள்ளது. அவர்களும் நீயும் பையில் கொண்டுவந்த கள்ளைக் கலத்தில் வாங்கி உண்டு மகிழ்கிறீர்கள். உன்னைப் பணிந்த அரசர்கள் இப்படிச் சுற்றமாக வாழ்கிறார்கள். உன்னைப் பணியாதவர்களின் பாசறைகளைக் கடந்து நீ வென்றாய். பருந்துகளும் பறக்க முடியாத பாசறைகளில் காலை வேளையில் முரசு முழக்கி வென்றாய். இப்படி உன்னைப் பணிந்தும் பணியாமலும் உலகை ஆண்டு கழிந்த மன்னர் கடற்கரை மணலினும் பலர். அதனால்......

மருத நில வளப்பம் - வலைஞர் இயல்பு (238-258)
அதனால், குணகடல் கொண்டு குடகடல்முற்றி
இரவு மெல்லையும் விளிவிட னறியாது
அவலு மிசையு நீர்த்திரள் பீண்டிக் . . . .[240]

கவலையங் குழும்பின் அருவி ஒலிப்பக்
கழைவளர் சாரற் களிற்றின நடுங்க
வரைமுத லிரங்கும் ஏறொடு வான்ஞெமிர்ந்து
சிதரற் பெரும்பெயல் சிறத்தலிற் றாங்காது

பொருளுரை:

புகழோடு பெருவாழ்வு வாழ்ந்த அரசர்கள் பலர் மாண்டொழிந்தனர். அதனால் நீ உன்னை எண்ணிப் பார்க்க வேண்டுகிறேன். மேகங்கள் கிழக்கிலுள்ள கடலில் நீரை முகந்துகொண்டு சென்று மேற்கிலுள்ள கடலை முற்றுகையிட்டன. அதனால் குளிர்ந்து கொட்டும் இடம் தெரியாததால் தாழ்ந்த நிலப் பரப்பிலும், உயர்ந்த மலைப் பரப்பிலும் மழையைக் கொட்டின. அதனால் கவலை என்னும் மலைப்பிளவுப் பகுதிகளில் அருவி ஓடி ஒலித்தது. மழை மிகுதியால் மூங்கில் காடுகளில் மேய்ந்த யானைக்கூட்டம் நடுங்கிற்று. வானத்தில் முழங்கும் இடி மலைமுகடுகளில் மோதி எதிரொலித்தது.

குணகடற் கிவர்தருங் குரூஉப்புன லுந்தி . . . .[245]

நிவந்துசெ னீத்தங் குளங்கொளச் சாற்றிக்
களிறு மாய்க்குங் கதிர்க் கழனி
ஒளி றிலஞ்சி அடை நிவந்த
முட் டாள சுடர்த் தாமரை
கட் கமழு நறு நெய்தல் . . . .[250]

வள் ளிதழ் அவிழ் நீலம்
மெல் லிலை யரி யாம்பலொடு
வண்டிறை கொண்ட கமழ்பூம் பொய்கைக்

பொருளுரை:

கீழைக் கடலுக்குச் செல்லும் செந்தண்ணீர் வெள்ளத்தைத் தடுத்துக் குளங்களில் பாயச் செய்தனர். அதனால் விளைந்த கதிர்மணிகளை யானை தின்று மாய்ப்பதைப் பற்றி உழவர் பொருட்படுத்தாத அளவுக்கு விளைச்சல் பெருகிற்று. குளத்திலிருந்து பாயும் நீர் ஆங்காங்கே தேங்கி நிற்பது இலஞ்சி. இலஞ்சிகளில் தாமரை, நெய்தல், நீலம், ஆம்பல் முதலான பூக்கள் வண்டுகள் மொய்க்கப் பூத்து மணம் பரப்பின.

கம்புட் சேவல் இன்றுயில் இரிய
வள்ளை நீக்கி வயமீன் முகந்து . . . .[255]

கொள்ளை சாற்றிய கொடுமுடி வலைஞர்
வேழப் பழனத்து நூழி லாட்டுக்
கரும்பி னெந்திரங் கட்பி னோதை
மருத நிலத்தில் எழும் பற்பல ஓசைகள் (259-270)
அள்ளற் றங்கிய பகடுறு விழுமங்
கள்ளார் களமர் பெயர்க்கும் ஆர்ப்ப . . . .[260]

ஒலிந்த பகன்றை விளைந்த கழனி
வன்கை வினைஞர் அரிபறை யின்குரல்
தளிமழை பொழியுந் தண்பரங் குன்றிற்
கவிகொள் சும்மை யொலிகொ ளாயந்
ததைந்த கோதை தாரொடு பொலியப் . . . .[265]

புணர்ந்துட னாடும் இசையே யனைத்தும்
அகலிரு வானத் திமிழ்ந்தினி திசைப்பக்
குருகு நரல மனை மரத்தான்
மீன் சீவும் பாண் சேரியொடு
மருதஞ் சான்ற தண்பணை சுற்றிஒருசார்ச . . . .[259 - 270]

பொருளுரை:

தாமரைப் பூக்களில் காடைக்குருவி தன் சேவலோடு உறங்கியது. அங்குப் படர்ந்திருந்த வள்ளைக் கொடிகளை ஒதுக்கிவிட்டு வலை போட்டதில் கிட்டிய பெரிய பெரிய மீன்களை வலைமீனவர் விலை சொல்லிக் கூவினர். நூழில் என்பது கரும்பாலை. வயலில் விளைந்த கரும்பை நூழில் எந்திரம் நெரிக்கும் ஓசை முழக்கம் கேட்டது. கரும்பின் வெல்லக் கட்டியை ஏற்றிச் செல்லும்போது சேற்றில் மாட்டிக் கொண்ட வண்டிச் சக்கரத்தைத் தூக்கி விட்டுக் கொண்டு உழவர் காளைகளை அதட்டி ஓட்டும் ஓசை கேட்டது. மாலைக்குப் பயன்படும் பகன்றை வயல்வெளியில் தழைத்திருந்தது. தொழிலாளர் அதனை அரிக்கும்போது முழக்கும் பறையின் ஒலி கேட்டது. திருப்பரங்குன்றத்தில் மழை பொழியும் ஓசை கேட்டது. மழை பொழியும் மகிழ்ச்சியால் மக்கள் செய்த ஆரவார ஒலி கேட்டது. பகன்றை மாலை சூடிக்கொண்டு மக்கள் கை கோத்து ஆடும் குரவை, தோள் தழுவி ஆடும் துணங்கை ஆகியவற்றின் பாட்டோசை கேட்டது. இந்த ஓசைகள் வானளாவ முழங்கியதால் எங்கும் இனிய ஓசையே எதிரொலித்தது. மீன் தேடும் குருகுகள் நீர்ப் பரப்புகளுக்குச் செல்லாமல் மீன் சீவும் வீட்டு முற்றத்திலிருந்த மரத்தில் அமர்ந்து இரை தேடலாயின.

முல்லை நிலக் காட்சிகள் (271-285)
சிறுதினை கொய்யக் கவ்வை கறுப்பக்
கருங்கால் வரகின் இருங்குரல் புலர
ஆழ்ந்த குழும்பில் திருமணி கிளர
எழுந்த கடற்றி னன்பொன் கொழிப்பப்
பெருங்கவின் பெற்ற சிறுதலை நெளவி . . . .[275]

மடக்கட் பிணையொடு மறுகுவன உகளச்
சுடர்ப்பூங் கொன்றை தாஅய நீழற்
பாஅ யன்ன பாறை யணிந்து
நீலத் தன்ன பைம்பயிர் மிசைதொறும்
வெள்ளி யன்ன வொள்வி யுதிர்ந்து . . . .[280]

சுரிமுகிழ் முசுண்டையொடு முல்லை தாஅய்
மணிமரு ணெய்தல் உறழக் காமர்
துணிநீர் மெல்லவற் றொய்யிலொடு மலர
வல்லொன் தைஇய வெறிக்களங் கடுப்ப
முல்லை சான்ற புறவணிந் தொருசார் . . . .[271 - 285]

பொருளுரை:

தினைக்கதிர்கள் கொய்யும் நிலையைப் பெற்றிருந்தன. ‘கௌவை’ என்னும் கேழ்வரகு அறுவடை நிலையில் கருத்திருந்தது. வரகு அறுவடை நிலையில் விளைந்து காய்ந்திருந்தது. தோண்டிய குழிகளில் மணிகள் ஒளி கிளர்ந்தன. காட்டு வழியெல்லாம் பொன் கொழித்தது. சிறிய தலையுடன் பேரழகு கொண்டிருக்கும் ‘நௌவி’ மான்கள் தம் பெண்மான்களுடன் சுழன்று விளையாடின. பாறையின் நிழல் பகுதியில் கொன்றைப் பூக்கள் கொட்டிப் பாய் விரித்திருந்தது. நீலவானம் போல் காட்சிதரும் பயிர்வெளியில் பயிரில் பூக்கும் ‘ஒள்வீ’ வெள்ளி விரித்தது போல் காணப்பட்டது. கருமை நிற முசுண்டைப் பூக்களும், வெண்மை நிற முல்லைப் பூக்களும், நீல நிற நெய்தல் பூக்களும், மேட்டு நிலங்களில் பூக்கும் தொய்யில் பூக்களும் ஆங்காங்கே மலர்ந்திருந்தன. இப்படி முல்லைநிலம் கெட்டிக்காரன் வரைந்த ஓவியம் போலக் காட்சியளித்தது. இந்த முல்லை நிலப் பகுதி ஒருபக்கம்.

குறிஞ்சி நிலத்தின் இயற்கை வளம் (286-301)
நறுங்காழ் கொன்று கோட்டின் வித்திய
குறுங்கதிர்த் தோரை நெடுங்கால் ஐயவி
ஐவன வெண்ணெலொ டரில்கொள்பு நீடி
இஞ்சி மஞ்சட் பைங்கறி பிறவும்
பல்வேறு தாரமொடு கல்லகத் தீண்டித் . . . .[290]

தினைவிளை சாரற் கிளிகடி பூசல்
மணிப்பூ அவரைக் குரூஉத்தளிர் மேயும்
ஆமா கடியுங் கானவர் பூசல்
சேணோன் அகழ்ந்த மடிவாய்ப் பயம்பின்
வீழ்முகக் கேழல் அட்ட பூசல் . . . .[295]

கருங்கால் வேங்கை இருஞ்சினைப் பொங்கர்
நறும்பூக் கொய்யும் பூசல் இருங்கேழ்
ஏறடு வயப்புலிப் பூசலொ டனைத்தும்
இலங்குவெள் ளருவியொடு சிலம்பகத் திரட்டக்
கருங்காற் குறிஞ்சி சான்ற வெற்பணிந்து. . . . .[300]

அருங்கடி மாமலை தழீஇ ஒருசார் . . . .[286 - 301]

பொருளுரை:

குறிஞ்சி நிலத்துப் பயிர் - நல்ல வயிரம் பாய்ந்த மரங்களை வெட்டி வீழ்த்தி அவற்றைச் சுட்டெரித்த நிலத்தில் பயிர் செய்தனர். குச்சியால் குழி போட்டு அதில் ஊன்றிய தோரையின் (துவரை) குறுங்கதிர் விளைந்திருந்தது. ஐயவி என்னும் வெண்சிறுகடுகுப் பயிர் நீண்டு விளைந்திருந்தது. ஐவன வெண்ணெல் முற்றி விளைந்திருந்தது. இஞ்சி, மஞ்சள், கீரைவகைகள் முதலான பிறவும் பயன்படு தாரமாக (விளைச்சல் வருவாயாக) விளைந்த தானியங்கள் மலைப்பாறையில் கொட்டிக் காயவைக்கப்பட்டிருந்தன. தினை விளைந்திருக்கும் மலைச்சாரலில் கிளிகளை ஓட்டும் மகளிர் பூசல் அவரையை மேயும் ஆமாக்களை ஓட்டும் கானவர் பூசல், பருகும் நீருக்காக பரண்மீதேறிக் காவல் புரிவோர் பூசல், தோண்டி வைத்த குழியில் காட்டுப் பன்றிகள் இறங்கி அட்டகாசம் செய்வதை ஓட்டும்பூசல், மகளிர் வேங்கைப்பூ பறிக்கும்போது பாடும் பூசல், காட்டெருமைகளைப் புலி தாக்கும்பூசல், போன்றவை அனைத்தும் அருவி ஒலியோடு மலையில் மோதி எதிரொலித்தன. இவை, செழியன் தேயத்தின் ஒருசார் பகுதியாக விளங்கின. இந்தக் குறிஞ்சி நிலப்பகுதி ஒருபக்கம்.

பாலை நில இயல்பு (302-314)
இருவெதிர்ப் பைந்தூறு கூரெரி நைப்ப
நிழத்த யானை மேய்புலம் படரக்
கலித்த இயவர் இயந்தொட் டன்ன
கண்விடு புடையூஉத் தட்டை கவினழிந்து . . . .[305]

அருவி யான்ற அணியில் மாமலை
வைகண் டன்ன புன்முளி யங்காட்டுக்
கமழ்சூழ் கோடை விடரக முகந்து
காலுறு கடலின் ஒலிக்குஞ் சும்மை
இலைவேய் குரம்பை உழையதட் பள்ள . . . .[310]

உவலைக் கண்ணி வன்சொல் இளைஞர்
சிலையுடைக் கையர் கவலை காப்ப
நிழலுரு விழந்த வேனிற்குன் றத்துப்
பாலை சான்ற சுரஞ்சேர்ந் தொருசார் . . . .[302 - 314]

பொருளுரை:

யானை பச்சை மூங்கிலை உண்டு வாழ்ந்துவந்தது. அந்தப் பெரிய பச்சை மூங்கில் தூறு தீப்பற்றி எரிந்துவிட்டது. அதனால் யானை மேய்ச்சலுக்காக வேறு நிலத்தைத் தேடிச் சென்று விட்டது. இசைவாணர்கள் இசைக்கருவிகளை முழக்குவது போல கானவர் மூங்கிலைப் பிளந்து செய்த தம் தட்டை என்னும் கருவியை தழைத்திருக்கும் தம் பயிரை மேய வரும் யானைகளை விரட்ட முழக்குவர். யானைக்கூட்டம் வேற்றுப் புலம் சென்றுவிட்டதால் தட்டை முழக்கப்படாமல் தன் அழகமைதி அழிந்து வெறுமனே கிடந்தது. அருவி ஒழுகும் அழகிய பெரிய மலை. அதன் சாரலில் வைக்கோலைப் போலப் புல் உலர்ந்து கிடக்கும் அழகிய காடு. அதில் கோடை மேகம் இடி இடித்து உண்டாக்கிய வெடிப்பு. அந்த நிலவெடிப்பில் காற்று நுழையும்போது, காற்று மோதி கடலலை ஒலிப்பது போல ஓசை. இந்த ஓசை கேட்கும் இடத்தில் இலைகளால் வேயப்பட்ட குடிசை. அதன் பக்கத்தில் (பொடி சுடாமல் இருக்கத்) தோலை விரித்து அதன்மேல் நின்றுகொண்டு இளைஞர் வில்லேந்திய கையராய்க் குடிசையைக் காத்துக்கொண்டு நின்றனர். மரங்களில் இலை இல்லை. எனவே நிழல்கூடத் தன் உருவத்தை இழந்து காணப்பட்ட பாலைநிலம் அது. (ஒப்பு நோக்குக - ‘முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து பாலை எனபதோர் படிமம் கொள்ளும் காலை’ - சிலப்பதிகாரம்) இந்தப் பாலை நிலப் பகுதி ஒருபக்கம்.

நெய்தல் நில இயல்பு (315-326)
முழங்குகடல் தந்த விளங்குகதிர் முத்தம் . . . .[315]

அரம்போழ்ந் தறுத்த கண்ணேர் இலங்குவளை
பரதர் தந்த பல்வேறு கூலம்
இருங்கழிச் செறுவிற் றீம்புளி வெள்ளுப்புப்
பரந்தோங்கு வரைப்பின் வன்கைத் திமிலர்
கொழுமீன் குறைஇய துடிக்கண் துணியல . . . .[320]

விழுமிய நாவாய் பெருநீ ரோச்சுநர்
நனந்தலை தேஎத்து நன்கலன் உய்ம்மார்
புணர்ந்துடன் கொணர்ந்த புரவியொ டனைத்தும்
வைகல் தோறும் வழிவழிச் சிறப்ப
நெய்தல் சான்ற வளம்பல பயின்றாங்கு . . . .[325]

ஐம்பால் திணையுங் கவினி யமைவர

பொருளுரை:

முழங்கும் கடலலை தரைக்குக் கொண்டுவந்து சேர்த்ததால் ஒளிரும் முத்துக்கள், சங்குகளை அரத்தால் அறுத்துச் செய்த வளையல்கள், பரதர் மக்கள் கடலில் குளித்துக் கொண்டுவந்த முத்து, பவளம் போன்ற பல்வேறு பொருள்கள், உப்பங்கழி வயலில் விளைந்த வெள்ளுப்பு. பரந்து விரிந்த கடலில் திமிலில் சென்று கொண்டுவந்த பெரிய மீன்கள், அவை அடிக்கும் துடிப்பறையின் கண்முகம் போல நறுக்கி வைத்திருக்கும் மீன் துண்டுகள். நாவாய்க் கப்பலை ஓட்டிச் சென்ற வணிகர் கொண்டுவந்த குதிரைகள், (இந்தக் குதிரைகள் பண்டங்களை ஏற்றிச் செல்ல நில வணிகரால் பயன்படுத்தப்பட்டன) இவை போன்ற அனைத்தும் நாள்தோறும் வழிவழியாகச் சிறப்படைந்து கொண்டிருந்த நெய்தல் நிலப் பெருவெளியின் சான்ற வளம். இந்த நெய்தல் நிலப் பகுதி ஒருபக்கம்.

மதுரை மாநகரின் அமைப்பும் காட்சிகளும் (327-331)
முழ வீமிழும் அக லாங்கண்
விழவு நின்ற வியன் மறுகில்
துணங்கையந் தழூஉவின் மணங்கமழ் சேரி
இன்கலி யாணர்க் குழூஉப்பல பயின்றாங்குப . . . .[330]

பாடல் சான்ற நன்னாட்டு நடுவண் . . . .[327 - 331]

பொருளுரை:

பாண்டிய நாடு இவ்வாறு ஐந்து நிலப் பகுதிகளின் அமைதியும் ஒருங்கிணைந்த நாடாக அழகுடன் விளங்கியது. பெருந்தெருக்களில் முழவின் ஓசை. குறுந்தெருக்களில் விழாக்கோலம் ஆங்காங்கே பலப்பல குழூஉக்கள் குரவையும் துணங்கையும் என்று தழூஉப் பிணைந்து விளையாடித் திளைக்கும் காட்சி. அந்த ஆட்டங்களில் நாட்டைப் புகழ்ந்து பாடும் நல்லிசை. இப்படிப்பட்ட நாட்டுக்கு நடுவில்.......

பெரும்பாணர் வாழும் இருக்கை (332-342)
கலை தாய உயர் சிமையத்து
மயி லகவு மலி பொங்கர்
மந்தி யாட மாவிசும் புகந்து
முழங்குகால் பொருத மரம்பயில் காவின் . . . .[335]

இயங்குபுனல் கொழித்த வெண்டலைக் குவவுமணற்
கான்பொழில் தழீஇய அடைகரை தோறுந்
தாதுசூழ் கோங்கின் பூமலர் தாஅய்க்
கோதையி னொழுகும் விரிநீர் நல்வரல்
அவிரறல் வையைத் துறைதுறை தோறும . . . .[340]

பல்வேறு பூத்திரள் தண்டலை சுற்றி
அழுந்துபட் டிருந்த பெரும்பாண் இருக்கையும் . . . .[332 - 342]

பொருளுரை:

உயர்ந்த மலையுச்சிகளிலும் மரவுச்சிகளிலும் கலை என்னும் ஆண்குரங்கு தாவும். அதனால் பூக்கள் உதிரும். அதைப் பார்த்து அங்கே இருக்கும் மயில் அகவும். மயிலோசையின் தாளத்திற்கேற்ப மந்தி என்னும் பெண்குரங்கு ஆடும். இந்த நிகழ்வுகளை அங்கிருக்கும் மற்ற விலங்கினம் விரும்பும். மரக்காடுகளில் காற்று மோதி ஆட்டத்துக்கு ஒத்திசை கூட்டித் தரும். வையை ஆற்று வெள்ளம் மணலைக் கொழிக்கும். அங்கே கோங்க மரம் பூத்துக் குலுங்கும். ஆங்காங்கே வையையாற்றுத் துறைகளில் பல்வேறு வகையான பூக்கள் பூத்திருக்கும். அவை தண்டலை என்னும் சோலைகள். அந்தச் சோலைகளில் குடிபெயரும் விருப்பமே இல்லாமல் பெரும்பாணர் வாழும் ஊர்கள். வெண்டலை என்பது ஆற்றிலிருக்கும் வெண்மணல் வெளி. தண்டலை என்பது குளிர்ந்த மலர்ச்சோலை.

அகழியும் மதிலும் பெற்று, மாடங்கள் ஓங்கி நிற்றல் (343-359)
நிலனும் வளனுங் கண்டமை கல்லா
விளங்குபெருந் திருவின் மான விறல்வேள்
அழும்பில் அன்ன நாடிழந் தனருங் . . . .[345]

கொழும்பல் புதிய குடியிழந் தனரும்
தொன்றுகறுத் துறையுந் துப்புத்தர வந்த
அண்ணல் யானை அடுபோர் வேந்தர்
இன்னிசை முரச மிடைப்புலத் தொழியப்
பன்மா றோட்டிப் பெயர்புறம் பெற்று . . . .[350]

மண்ணுற ஆழ்ந்த மணிநீர்க் கிடங்கின்
விண்ணுற வோங்கிய பல்படைப் புரிசைத்
தொல்வலி நிலைஇய அணங்குடை நெடுநிலை
நெய்படக் கரிந்த திண்போர்க் கதவின்
மழையாடு மலையி னிவந்த மாடமொடு . . . .[355]

வையை யன்ன வழக்குடை வாயில்
வகைபெற எழுந்து வான மூழ்கி
சில்காற் றிசைக்கும் பல்புழை நல்லில்
யாறுகிடந் தன்ன அகனெடுந் தெருவிற்

பொருளுரை:

அழும்பில் வேள் - அழும்பில் (வேள்) என்பவனுக்குப் பாண்டிய நாட்டின் வளத்தைக் கண்டு சும்மா இருக்க முடியவில்லை. அவன் முன்பே பெருஞ்செல்வம் படைத்தவன். என்றாலும் பாண்டிய நாட்டை அடையப் பாண்டியனைத் தாக்கினான். போரில் அழும்பில் (வேள்) தன் நாட்டை இழந்தான். பாண்டியன் அழும்பில் வேளின் மான உணர்வை மதித்துத் தன் மதுரையில் தங்க இனம் தந்தான். அவனும் மதுரையில் வாழ்ந்துவந்தான். தன் குடும்பத்தை இழந்த பற்பல ஊரைச் சேர்ந்தவர்களும் மதுரையில் வாழ்ந்தனர். பண்டைக் காலம் தொட்டுப் பாண்டியனோடு பகைமைச் சினம் கொண்டு வாழ்ந்தவரும் தலைமையான யானைப்படை கொண்டவரும் ஆகிய வேந்தர் தம் முரசைப் போர்க்களத்தில் போட்டுவிட்டுப் பெயர்ந்தோடும்படி பாண்டியன் போரிட்டான். அவர்களின் முரசைக் கொண்டுவந்து பாண்டியன் தன் அகழி நீரில் குளிப்பாட்டித் தனதாக்கிக் கொண்டான். ஆழத்தால் நீல நிறம் தோன்றும் அகழியும், வானளாவ ஓங்கியதும், பல படைக்கருவிகளைத் தன்னகத்தே கொண்டதுமான மதிலும், வலிமைத் திறம் காட்டும் அணங்கு உருவம் பொறிக்கப்பட்ட நிலைகளும், எண்ணெய் பூசப்பட்டுப் பளபளக்கும் கதவுகளும் கொண்டு மலைபோல் ஓங்கி மழைமேகங்கள் ஆடும் மாட மாளிகைகளில் அவர்கள் வாழ்ந்துவந்தனர். மாடங்களுக்கு வையை ஆறு போல் முற்றம். வானத்தில் மூழ்கிக் கிடந்த அந்த மாடிகளில் புழை என்னும் சன்னல். அதில் சில்லென்று காற்று நுழையும்போது புல்லாங்குழல் போன்ற இசை. ஆறு போல் அகன்ற தெருக்களில் அந்த மாளிகைகள்.

பல் வகைக் கொடிகள் (360-374)
பல்வேறு குழாஅத் திசையெழுந் தொலிப்ப . . . .[360]

மாகா லெடுத்த முந்நீர் போல
முழங்கிசை நன்பணை அறைவனர் நுவலக்
கயங்குடைந் தன்ன இயந்தொட் டிமிழிசை
மகிழ்ந்தோ ராடுங் கலிகொள் சும்மை

பொருளுரை:

மதுரைத் தெருக்களில் மகிழ்ச்சியுடன் பாடி ஆடினர். அவர்களின் களிப்பு ஆரவாரம் கடலில் காற்றுஅடிக்கும்போது அலை எழுப்பும் ஆரவாரம் போல் இருந்தது. முரசு முழக்கும் ஓசை, குளம் வெட்டியது போல் வாயகன்ற இசைக்கருவிகளைத் தட்டுவதால் ஒலிக்கும் இசை, இவற்றைக் கேட்டு மகிழ்ந்து ஆடிப்பாடும் ஆரவாரம், ஆகியவை தெருக்களில் கேட்டுக்கொண்டேயிருந்தன.

ஓவுக்கண் டன்ன இருபெரு நியமத்துச் . . . .[365]

சாறயர்ந் தெடுத்த உருவப் பல்கொடி
வேறுபல் பெயர ஆரெயில் கொளக்கொள
நாடோ றெடுத்த நலம்பெறு புனைகொடி
நீர்ஒலித் தன்ன நிலவுவேற் றானையொடு
புலவுப்படக் கொன்று மிடைதோ லோட்டிப . . . .[370]

புகழ்செய் தெடுத்த விறல்சா னன்கொடி
கள்ளின் களிநவில் கொடியொடு நன்பல
பல்வேறு குழூஉக்கொடி பதாகை நிலைஇப்
பெருவரை மருங்கி னருவியி னுடங்கப் . . . .[360 - 374]

பொருளுரை:

மதுரை நியமங்கள் வரையப்பட்ட ஓவியம் போல வடிவமைக்கப்பட்டிருந்தன. விழாக் கொண்டாட்டத்தைக் குறிக்கும் பல்வேறு உருவம் பொறித்த கொடிகள் அந்த நியமங்களில் பறந்தன. முருகனுக்குச் சேவல் கொடி, பெருமாளுக்குக் கருடன் கொடி போன்றவற்றை நினைவுபடுத்திக் கொள்ளலாம் அரசன் ஒவ்வொரு நாட்டையும் வெல்லும்போதெல்லாம் அந்த நாட்டின் அரசனைக் கொண்டுவந்து தங்கவைத்த மாடங்களில் பறக்க விடப்பட்ட அந்தந்த நாட்டுக் கொடிகள். நாள்தோறும் நடக்கும் விழாவுக்காக அன்றாடம் புதிது புதிதாக ஏற்றப்பட்ட கொடி. வென்ற நாட்டின் அடையாளமாக அங்கிருந்து கொண்டுவரப்பட்டு ஏற்றப்பட்ட கொடிகள். கள் விற்குமிடம் இது என்று அடையாளம் காட்டும் கொடிகள். பல்வேறு குடிமக்களின் வாழ்விடங்களை அடையாளம் காட்டும் கொடிகள். இப்படி எங்கும் பறக்கும் கொடிகள் மலைமேல் ஆடும் அருவி போல் ஆடிப் பறந்தன.

நால் வகைப் படைகளின் இயக்கம் (375-395)
பனைமீன் வழங்கும் வளைமேய் பரப்பின் . . . .[375]

வீங்குபிணி நோன்கயி றரீஇ யிதைபுடையூக்
கூம்புமுதல் முருங்க எற்றிக் காய்ந்துடன்
கடுங்காற் றெடுப்பக் கல்பொரு துரைஇ
நெடுஞ்சுழிப் பட்ட நாவாய் போல
இருதலைப் பணில மார்ப்பச் சினஞ்சிறந்து . . . .[380]

கோலோர்க் கொன்று மேலோர் வீசி
மென்பிணி வன்றொடர் பேணாது காழ்சாய்த்துக்
கந்துநீத் துழிதருங் கடாஅ யானையும்

பொருளுரை:

கடலில் ஆடும் நாவாய் போலக் கட்டுத் தறியில் ஆடும் களிறுகள். பருத்த மீன்கள் வந்துபோகும் கடல். சங்குகள் மேயும் கடல். கப்பலில் பாய்மரம் கட்டிய கயிறு அறுந்து ‘இதை’ என்னும் பாய் காற்றில் பறக்கும் போது ,நாவாய் காற்றில் அடித்துச் செல்லப்பட்டுக் கடலிலுள்ள கல்லில் மோதிச் சூறாவளிச் சுழலில் அகப்பட்டுச் சுழலும் நாவாய் போல, இருபுறமும் மணி ஆடி அடித்துக்கொண்டு செல்லும்போது கையில் அங்குசக் கோலைக் கொண்டிருக்கும் தன் பாகனைக் கொன்றுவிட்டு தன்மேல் அமர்ந்திருப்போரை வீசி எறிந்துவிட்டு, தன்னைப் பிணித்துள்ள சங்கிலித் தொடரைச் சற்றும் பேணாமல், கட்டியிருக்கும் தூணைச் சாய்த்துவிட்டு வெளியேறும் களிறு தெருவில் செல்லும். (போருக்கு இட்டுச் செல்லாமல் கட்டப்பட்டிருந்ததால் யானை இப்படிக் கட்டுக்காவல் மீறி வெளிப்பட்டுத் திரிந்தது.)

அங்கண்மால் விசும்பு புதைய வளிபோழ்ந்து
ஒண்கதிர் ஞாயிற் றூறளவாத் திரிதரும் . . . .[385]

செங்கால் அன்னத்துச் சேவல் அன்ன
குரூஉமயிர்ப் புரவி யுராலிற் பரிநிமிர்ந்து
காலெனக் கடுங்குங் கவின்பெறு தேருங்

பொருளுரை:

ஞாயிற்றின் ஊறல்கண் கூசும்படி வெள்ளை நிறம் கொண்ட அன்னம். செங்கால் அன்னம். அது வானம் புதையும்படி, காற்றைப் பிளந்துகொண்டு விண்ணில்தாவிப் பறப்பது போல், செந்நிறக் குதிரைகள் இழுத்துச் செல்வதால் வெண்ணிறத் தேர்கள் பறந்தன. பறக்கும் திறன் குறைந்த அன்னம் பறப்பது போல் - இல்பொருள் உவமை

கொண்ட கோலன் கொள்கை நவிற்றலின்
அடிபடு மண்டிலத் தாதி போகிய . . . .[390]
கொடிபடு சுவல விடுமயிர்ப் புரவியும்

பொருளுரை:

குதிரை வீரர் சவுக்குக் கோலுடன் குதிரைமேல் அமர்ந்துகொண்டு தாக்கச் செல்லும் திசையைக் காட்டினர். முதுகில் சேணவளையல் அணிந்திருந்த அந்தக் குதிரைகள் அவன் காட்டிய வழியில் ‘ஆதி’ நடை போட்டுக்கொண்டு சென்றன.

வேழத் தன்ன வெருவரு செலவிற்
கள்ளார் களமர் இருஞ்செரு மயக்கமும்
அரியவும் பெரியவும் வருவன பெயர்தலிற்
தீம்புழல் வல்சிக் கழற்கால் மழவர் . . . .[375 - 395]

பொருளுரை:

‘புழல்வல்சி’ என்பது குழாய்ப் புட்டு. வீரக்கழல் அணிந்த போர் மறவர்களுக்குப் புழல் வல்சி உணவு வழங்கப்பட்டது. (நினைவு கூர்க - பிட்டுக்கு மண் சுமந்த கதை) களமர் என்னும் சொல் உழவரைக் குறிக்கும். ‘கள்ளார் களமர்’ என்பது கள்ளுண்டு போர்க்கள உழவு செய்யும் வீரர்களைக் குறிக்கும். இருசார் படைகளும் கலந்து தாக்கிப் போரிட்டன. போரில் அவர்கள் நிகழ்த்திய செயல்கள் அரியனவும், பெரியனவுமாக அமைந்திருந்தன.

நாளங்காடியில் பூ முதலிய பொருள்களை விற்றல் (396-406)
பூந்தலை முழவின் நோன்றலை கடுப்பப்
பிடகைப் பெய்த கமழ்நறும் பூவினர்
பலவகை விரித்த வெதிர்பூங் கோதையர்
பலர்தொகுபு இடித்த தாதுகு சுண்ணத்தர்
தகைசெய் தீஞ்சேற் றின்னீர்ப் பசுங்காய் . . . .[400]

நீடுகொடி யிலையினர் கோடுசுடு நூற்றினர்
இருதலை வந்த பகைமுனை கடுப்ப
இன்னுயிர் அஞ்சி இன்னா வெய்துயிர்த்து
ஏங்குவன ரிருந்தவை நீங்கிய பின்றைப்
பல்வேறு பண்ணியந் தழீஇத்திரி விலைஞர் . . . .[405]

மலைபுரை மாடத்துக் கொழுநிழல் இருத்தர . . . .[396 - 406]

பொருளுரை:

பிடகை என்பது பூக்கூடை. முழவின் வாய்போல் அகன்ற வாயையுடைய பிடகையில் பூ வைத்துக் கொண்டு மகளிர் பூ விற்றனர். சிலர் மணக்கும் பூ மாலை விற்றனர் சிலர் சுண்ணம் விற்றனர். சுண்ணம் என்பது talc poweder, பாக்கு, வெற்றிலை, சுண்ணாம்பு ஆகியனவும் விற்கப்பட்டன. போர்முனை போல் போட்டி போட்டுக்கொண்டு விற்பனை நடைபெற்றது. இந்தக் கடைகள் போனபின் பண்ணியக் கடைகள் மாடிவீடுகளின் நிழலில் வைக்கப்பட்டன. பண்ணியம் என்பது இட்டிலி, அப்பம், வடை முதலான பலகார வகைகள்.

முது மகளிர் நுகர்பொருள்களை ஏந்தித் திரிதல் (407-420)
இருங்கடல் வான்கோடு புரைய வாருற்றுப்
பெரும்பின் னிட்ட வானரைக் கூந்தலர்
நன்னர் நலத்தர் தொன்முது பெண்டிர்
செந்நீர்ப் பசும்பொன் புனைந்த பாவை . . . .[410]

செல்சுடர்ப் பசுவெயிற் றோன்றி யன்ன
செய்யர் செயிர்த்த நோக்கினர் மடக்கண்
ஐஇய கலுழு மாமையர் வையெயிற்று
வார்ந்த வாயர் வணங்கிறைப் பணைத்தோட்
சோர்ந்துகு வன்ன வயக்குறு வந்திகைத் . . . .[415]

தொய்யில் பொறித்த சுணங்கெதி ரிளமுலை
மையுக் கன்ன மொய்யிருங் கூந்தல்
மயிலிய லோரும் மடமொழி யோரும்
கைஇ மெல்லிதின் ஒதுங்கிக் கையெறிந்து
கல்லா மாந்தரொடு நகுவனர் திளைப்பப் . . . .[407 - 420]

பொருளுரை:

தொன்முது பெண்டிர், மயிலியலோர், மடமொழியோர் என்னும் பல்திற மகளிர் கல்லா மாந்தரொடு உறவாடும்போது கையால் தட்டிக்கொடுக்கும் வகையில் தாக்கி உறவாடி மகிழ்ந்தனர். தொன்முது பெண்டிர் தன் நரைமுடியில் கடலில் நுரையலையில் மிதந்துவரும் சங்கு போல் கொண்டை போட்டிருந்தனர். மயிலியலோர் எப்படியிருந்தனர்? கருமேகம் கொட்டி வழிவது போல் கூந்தல். பசும்பொன்னைச் செந்தீயில் போட்டுச் செய்த பாவை இளவெயிலில் மிளிர்வது போன்ற செய்ய மேனி. அதில் ‘ஐ’ என்று வியக்கும்படி ஒழுகும் மாமை நிறம். (‘ஐ வியப்பு ஆகும்’ - தொல்காப்பியம்) கூர்மையான பற்கள் பகட்டிக் காட்டும் வாய். ‘கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமல்‘ அவ்வாய் பேசும் மடமொழி. வளைந்த மூங்கில் போன்ற தோள். அந்தத் தோளில் கிடந்து கிடந்து சோர்ந்து போய்க் கழன்று விழுவது போன்ற வந்திகை என்னும் தோளணி. கொளுத்தக் கொண்டு கொண்டது விடாத மடக் கண்ணில் ஊடும் சினம் கொண்ட பார்வை. இப்படிப்பட்ட மகளிர் இந்த மெய்ப்பாடுகளைக் கல்லாத காளையரைத் தட்டிக்கொடுத்து அவர்களோடு பேசித் திளைத்தனர்.

திருவிழாக் காட்சிகள் - ஏழாம் நாளில் தீர்த்த நீரில் ஆடுதல் (421-430)
புடையமை பொலிந்த வகையமை செப்பிற்
காம ருருவிற் றாம்வேண்டு பண்ணியம்
கமழ்நறும் பூவொடு மனைமனை மறுக
மழைகொளக் குறையாது புனல்புக மிகாது
கரைபொரு திரங்கு முந்நீர் போலக் . . . .[425]

கொளக்கொளக் குறையாது தரத்தர மிகாது
கழுநீர் கொண்ட எழுநாள் அந்தி
ஆடுதுவன்று விழவி னாடார்த் தன்றே
மாடம் பிறங்கிய மலிபுகழ்க் கூடல்
நாளங் காடி நனந்தலைக் கம்பல . . . .[421 - 430]

பொருளுரை:

பூ விற்போரும், பண்ணியம் விற்போரும் வீடு வீடாகச் சென்று விற்பதும் உண்டு. மழைமேகங்கள் மொண்டு செல்வதால் கடல் குறைவது இல்லை. ஆற்று வெள்ளம் வந்து சேர்வதால் அளவு கூடுவதும் இல்லை. அதுபோலக் கூடல் நகரத்துச் செல்வம் பிறர் கொண்டுசெல்வதால் குறைவதும் இல்லை. பிறர் கொண்டுவந்து தருவதால் மிகுவதும் இல்லை. அரசனின் ஒவ்வொரு வெற்றியின்போதும் வெற்றிவிழா ஏழு நாள் கொண்டாடப்படும். அதற்கு ‘ஆடு துவன்று விழா’ என்று பெயர். செங்கழுநீர் பூத்த குளத்தில் வெற்றி தந்த வேல், வாள் முதலானவற்றைக் கழுவி அக்குளக்கரையில் அந்த ‘ஆடு துவன்று விழா’ கொண்டாடப்படும். அந்த விழா நாடு முழுவதும் ஆங்காங்கே கொண்டாடப்படும். அந்த விழாவின்போது எழும் ஆரவாரம் போல மதுரை நகரத்துக் கடைத்தெருவில் பகல் பொழுதில் ஆரவாரம் எழுந்துகொண்டேயிருக்கும்.

செல்வர்கள் செல்லும் நிலை (431-441)
வெயிற்கதிர் மழுங்கிய படர்கூர் ஞாயிற்றுச்
செக்கர் அன்ன சிவந்துணங் குருவிற்
கண்பொரு புகூஉம் ஒண்பூங் கலிங்கம்
பொன்புனை வாளொடு பொலியக் கட்டித்
திண்டேர்ப் பிரம்பிற் புரளுந் தானைக் . . . .[435]

கச்சந் தின்ற கழறயங்கு திருந்தடி
மொய்ம்பிறந்து திரிதரும் ஒருபெருந் தெரியல்
மணிதொடர்ந் தன்ன வொண்பூங் கோதை
அணிகிளர் மார்பி னாரமொ டளைஇக்
காலியக் கன்ன கதழ்பரி கடைஇக . . . .[440]

காலோர் காப்பக் காலெனக் கழியும் . . . .[431 - 441]

பொருளுரை:

குதிரையில் திரியும் காவலரும், கால்நடையில் திரியும் காவலரும் கடைத்தெரு முழுவதும் காவல் புரிவர். அவர்கள் செக்கர் வானம் போல் சிவந்த உடை அணிந்திருப்பர். அந்தச் செந்நிறத்தில் பட்டுக் கதிரவன் ஒளியே மங்கிப் போகும். அந்த ஆடையுடன் சேர்த்து வாளும் கட்டியிருப்பர். வாளின் கைப்பிடி பொன்னால் ஆனது. ‘திண்தேர்ப் பிரம்பு’ என்பது பிரம்பாலான வில்லுவண்டி. (இருக்கை, சக்கரம் போன்ற இன்றியமையா உறுப்புக்களைக் கொண்ட சிறிய வண்டி) இந்தத் தேரில் ஏறித் திரியும் தானைக்காவலர்களும் (படைக்காவலர்களும்) உண்டு. அவர்களின் கால்களில் கழல் இருக்கும். அது கச்சம் போல் இறுகலாக மாட்டப்பட்டிருப்பதால் அவர்களின் காலைத் தின்று அவ்விடத்தில் காப்புக் காய்த்திருக்கும். அவர்கள் மார்புக்குக் கீழே தெரியல் என்னும் அடையாள மாலை, மணி கோத்தது போன்ற பூமாலை ஆகியவற்றைச் சந்தனம் பூசிய மார்பில் அணிந்திருப்பர். இவர்கள் காற்றைப்போல் பறக்கும் குதிரை மேலும் திரிவர், கால்நடையாகவும் திரிவர். காவற்பணி மேற்கொண்டு கடைத்தெருவில் திரிவர்.

நிலா முற்றங்களிலிருந்து சேவிக்கும் மகளிர் (442-452)
வான வண்கை வளங்கெழு செல்வர்
நாள்மகிழ் இருக்கை காண்மார் பூணொடு
தெள்ளரிப் பொற்சிலம் பொலிப்ப வொள்ளழல்
தாவற விளங்கிய வாய்பொன் னவிரிழை . . . .[445]

அணங்குவீழ் வன்ன பூந்தொடி மகளிர்
மணங்கமழ் நாற்றந் தெருவுடன் கமழ
ஒண்குழை திகழும் ஒளிகெழு திருமுகந்
திண்காழ் ஏற்ற வியலிரு விலோதந்
தெண்கடற் றிரையின் அசைவளி புடைப்ப . . . .[450]

நிரைநிலை மாடத் தரமியந் தோறும்
மழைமாய் மதியிற் றோன்றுபு மறைய . . . .[442 - 452]

பொருளுரை:

மாடவெளியில் மகளிர் உலாவுவர். வானம் போல் வழங்கும் வளம் படைத்த செல்வர் குடும்பத்தைச் சேர்ந்த மகளிர் அரசன் அரியணையில் இருந்துகொண்டு கொடை வழங்கும் நாள்மகிழ் இருக்கை காண்பதற்காகத் தெருவில் ஓடுவர். அப்போது அவர்கள் அணிந்திருந்த சிலம்பின் பரல் ஒலிக்கும். பொன்னணிகள் ஒளிரும். அழகிய வளையல்கள் பாடும். அழகுத் தெய்வங்களே ஆசை கொள்ளும் அழகுடையவர்கள் அவர்கள். காதில் ஒளி வீசும் குழைகள் அவர்களின் கட்டழகுத் திருமுகத்தை மேலும் கவின் பெறச் செய்யும். அவர்கள் ஓடும்போது தெருவெல்லாம் மணம் வீசும். மற்றொருபுறம் மாடத்தில் உலாவும் மயிலியலார். மழை மேகத்தில் மறையும் மதியம் போல மாடவெளியில் பட்டப் பகலில் தென்றல் காயும் மகளிர் அசையும் தம் கூந்தலில் மறைந்து மறைந்து வெளிப்படுவர்.

கோயில்களில் அந்தி விழா (453-460)
நீரு நிலனுந் தீயும் வளியும்
மாக விசும்போ டைந்துட னியற்றிய
மழுவா ணெடியோன் றலைவ னாக . . . .[455]

மாசற விளங்கிய யாக்கையர் சூழ்சூடர்
வாடாப் பூவின் இமையா நாட்டத்து
நாற்ற உணவின் உருகெழு பெரியோர்க்கு
மாற்றரு மரபி னுயர்பலி கொடுமார்
அந்தி விழவிற் றூரியங் கறங்கத் . . . .[453 - 460]
பௌத்தப் பள்ளி (461-467)
திண்கதிர் மதாணி யொண்குறு மாக்களை
ஓம்பினர்த் தழீஇத் தாம்புணர்ந்து முயங்கித்
தாதணி தாமரைப் போதுபிடித் தாங்குத்
தாமு மவரும் ஓராங்கு விளங்கக்
காமர் கவினிய பேரிளம் பெண்டிர் . . . .[465]

பூவினர் புகையினர் தொழுவனர் பழிச்சிச்
சிறந்து புறங்காக்குங் கடவுட் பள்ளியுஞ் . . . .[461 - 467]

பொருளுரை:

பூவும் புகையும் ஏந்திக் கொட்டு முழக்குடன் சென்று பேரிளம் பெண்டிர் மதுரைச் சிவபெருமானை வழிபடுவர் - மழுவை வாளாக ஏந்திக்கொண்டிருப்பவன் சிவச்செல்வன் நெடியோன். அவன் நீர், நிலம், தீ, காற்று, ஆகாயம் என்னும் ஐந்தையும் படைத்தவன். அவனைத் தலைவனாகக் கொண்டவர்கள் இமையா நாட்டத்துப் பலர். (தேவர்) அவர்கள் உயிர்பலி பெறும் நாற்ற உணவினை விரும்புவர். அவர்களுக்குப் பலி கொடுப்பதற்காக ஒருபுறம் மக்கள் அந்திவிழா கொண்டாடிக் கொண்டிருப்பர். அங்கே தூரியப் பறை கறங்கும். தாமரை மொட்டைத் தோளில் தழுவுவது போல மகளிர் தம் குழந்தைகளைத் தழுவிக்கொண்டு அவ் விழாவுக்குச் செல்வர். பேரிளம் பெண்டிர் பூப் போட்டும், புகை காட்டியும் இமையா நாட்டத்துத் தேவர்களை வழிபட்டுப் போற்றுவர். இது சிவன் கடவுள் பள்ளி.

அந்தணர் பள்ளி (468-474)
சிறந்த வேதம் விளங்கப் பாடி
விழுச்சீர் எய்திய ஒழுக்கமொடு புணர்ந்து
நிலமமர் வையத் தொருதா மாகி. . . . .[470]

உயர்நிலை யுலக மிவணின் றெய்தும்
அறநெறி பிழையா அன்புடை நெஞ்சிற்
பெரியோர் மேஎ யினிதி னுறையுங்
குன்றுகுயின் றன்ன அந்தணர் பள்ளியும் . . . .[468 - 474]

பொருளுரை:

அந்தணர் பள்ளியில் வாழ்வோர் பெரியோர். அந்தப் பெரியோர் சிறந்த வேதம் விளங்கும்படிப் பாடுவர். மேலான சீருடன் வாழ்பவர்கள். ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பவர்கள். நிலத்தை விரும்பி வையத்தில் வாழ்பவர்கள். இந்த உலகத்தில் இருந்துகொண்டே உயர்நிலை உலகத்தை அடைபவர்கள். அறநெறி பிழையாதவர்கள். அன்புடை நெஞ்சம் கொண்டவர்கள். (ஒப்பு நோக்குக; ‘அந்தணர் என்போர் அறவோர் மற்று எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலான்- குறள்) மலைக்குன்றைக் குடைந்து வைத்தது போன்ற வீடுகளில் அவர்கள் வாழ்ந்தனர். (வேதம் சிறப்புற்று விளங்கப் பாடினார்களா? மக்களுக்கு விளங்கப் பாடினார்கள் என்றால் அது தமிழ்வேதம்)

அமணப் பள்ளி (475-487)
வண்டுபடப் பழுநிய தேனார் தோற்றத்துப் . . . .[475]

பூவும் புகையுஞ் சாவகர் பழிச்சச்
சென்ற காலமும் வரூஉ மமயமும்
இன்றிவண் தோன்றிய ஒழுக்கமொடு நன்குணர்ந்து
வானமு நிலனுந் தாமுழு துணருஞ்
சான்ற கொள்கைச் சாயா யாக்க . . . .[480]

ஆன்றடங் கறிஞர் செறிந்தனர் நோன்மார்

பொருளுரை:

அகன்ற அறிவும், அதனைக் காட்டிக்கொள்ளாத அடக்கமும் கொண்டு வாழ்பவர் ஆன்றடங்கு அறிஞர். அவர்கள் செறிவும் உடையவர்கள். (அடக்கம் என்பது பகட்டு இல்லாமை. செறிவு அறிவில் செறிவு. ஆன்ற அறிவு என்பது பல்துறையிலும் பரந்திருக்கும் அறிவு.) அவர்களின் கொள்கை சால்பினை உடையது. உடல் சாயாமல் ஓய்வு எடுத்துக் கொள்ளாமல் உலகுக்கு உதவுபவர்கள். தேன் நாவில் இனிப்பது போல் அவர்களின் தோற்றம் பார்வைக்கே இனிக்கும். சாவகர் என்போர் அந்த நோன்பிகளின் மாணாக்கர்கள். நோன்பிக்குத் தொண்டு செய்வோரும் சாவகர்களே. (சாவகர் என்பதால் இவர்களைச் சமணத் துறவியர் என்றும் கருதலாம்.) இந்தக் காலத்தை எல்லாரும் அவரவர்களுக்குத் தெரிந்த அளவில் பார்க்கின்றனர். இவர்களோ கடந்த காலத்தை எண்ணிப் பார்த்து, அதனால் எதிர் காலத்தில் நிகழப்போவதையும் தெளிவாக உணர வல்லவர்கள். தம்மைச் சூழ்ந்துள்ள ஒக்கல், தம்மை நாடிவரும் ஒக்கல் ஆகியோரின் எதிர்காலம் பற்றியும் அறிந்துரைக்க வல்லவர்கள் இவர்கள்

கல்பொளிந் தன்ன விட்டுவாய்க் கரண்டைப்
பல்புரிச் சிமிலி நாற்றி நல்குவரக்
கயங்கண் டன்ன வயங்குடை நகரத்துச்
செம்பியன் றன்ன செஞ்சுவர் புனைந்து . . . .[485]

நோக்குவிசை தவிர்ப்ப மேக்குயர்ந் தோங்கி
இறும்பூது சான்ற நறும்பூஞ் சேக்கையுங் . . . .[475 - 487]

பொருளுரை:

அரண்மணையில் அரியணை இருக்கும் நாளவையின் பக்கச் சுவர்களில் கமண்டலம் போன்ற உருவ அமைப்புகள் இருந்தன. அவை கல்லை உளியால் பொளித்துச் செதுக்கிச் செய்யப்பட்டிருந்தன. சிமிலி என்னும் புரிசங்குச் சிப்பிகளில் கோவைகள் செய்யப்பட்டு நாலாப் பக்கமும் மறைக்கும் திரைகளாகத் தொங்கவிடப்பட்டிருந்தன. பூத்துக் கிடக்கும் குளம் போல் மாளிகையின் அமைப்பு விளங்கிற்று. சுவர் செம்பால் செய்யப்பட்டது போல் இளஞ்சிவப்பு வண்ணம் தீட்டப்பட்டிருந்தது அருகிலிருந்து அண்ணாந்து பார்க்க முடியாத அளவுக்கு மேலே மேலே உயர்ந்திருந்த மாளிகை அது. அதில் பார்க்கப் பார்க்க வியப்பு உண்டாக்கும் பூங்கட்டில் (அரியணை) இடப்பட்டிருந்தது.

அறம் கூறு அவையம் (488-492)
குன்றுபல குழீஇப் பொலிவன தோன்ற
அச்சமும் அவலமும் ஆர்வமு நீக்கிச்
செற்றமும் உவகையுஞ் செய்யாது காத்து . . . .[490]

ஞெமன்கோ லன்ன செம்மைத் தாகிச்
சிறந்த கொள்கை அறங்கூ றவையமும் . . . .[488 - 492]

பொருளுரை:

அரியணைகள் குன்றுகள் போல் அறங்கூறவையத்தில் ஆங்காங்கே பலருக்கும் இடப்பட்டிருந்தன. அந்தச் சேக்கைகளில் அமர்ந்திருந்தவர்கள் அச்சமோ, அவலமோ, ஆர்வமோ கொள்ளாதவர்களாகவும் சினமோ, உவகையோ சேராதவர்களாகவும், தராசுக் கோல்போல் செம்மை திறம்பாத சிறந்த கொள்கையாளராகவும் விளங்கினர்.

காவிதி மாக்கள் (493-499)
நறுஞ்சாந்து நீவிய கேழ்கிளர் அகலத்து
ஆவுதி மண்ணி அவிர்துகில் முடித்து
மாவிசும்பு வழங்கும் பெரியோர் போல . . . .[495]

நன்றுந் தீதுங் கண்டாய்ந் தடக்கி
அன்பும் அறனும் ஒழியாது காத்துப்
பழியொரீஇ யுயர்ந்து பாய்புகழ் நிறைந்த
செம்மை சான்ற காவிதி மாக்களும் . . . .[493 - 499]

பொருளுரை:

‘காவிதி’ என்னும் விருது சிறந்த உழவருக்கு வழங்கப்பட்டது என்பது ஆன்றோர் முடிபு. அரசனின் நாளவையில் இவர்களுக்குச் சிறப்பிடம் தரப்பட்டிருந்ததை இப் பாடற்பகுதி உணர்த்துகின்றது. அறங்கூறுவதில் காவிதிகளின் கருத்தும் கேட்டறியப்பட்டது. மாவிசும்பு வழங்கும் பெரியோர் வேள்வி செய்து தம்மைத் தூய்மைப்படுத்திக் கொள்வர். தூய ஆடை உடுத்தியிருப்பர். மார்பிலே சந்தனம் பூசியிருப்பர். காவிதிகளும் அப் பெரியோர் போன்ற கோலம் கொண்டிருந்தனர். நன்றும் தீதும் கண்டறிந்து அடக்கத்துடன் இவர்கள் வாழ்ந்தனர். பிறரிடம் அன்பைப் பொழிவதோடு நன்னிலையில் அறநெறியையும் பூண்டு மற்றவர்களையும் அறநெறியில் ஒழுகப் பண்ணிக் காத்துவாழ்ந்தனர். பழி வராவண்ணம் தம்மைப் பாதுகாத்துக் கொண்டனர். மேலான புகழோடு சிறப்பாகவும் செம்மையாகவும் வாழ்ந்துவந்தனர்.

பண்டங்கள் விற்கும் வணிகர் (500-506)
அறநெறி பிழையா தாற்றி னொழுகி . . . .[500]

குறும்பல் குழுவிற் குன்றுகண் டன்ன
பருந்திருந் துகக்கும் பன்மா ணல்லிற்
பல்வேறு பண்டமொ டூண்மலிந்து கவினி
மலையவு நிலத்தவு நீரவும் பிறவும்
பல்வேறு திருமணி முத்தமொடு பொன்கொண்டு . . . .[505]

சிறந்த தேஎத்துப் பண்ணியம் பகர்நரும் . . . .[500 - 506]

பொருளுரை:

வணிக மாடங்கள் - பயிர் செய்தும், கைசெய்தும் பண்ணப்பட்ட பண்டங்களைப் ‘பண்ணியம்’ என்றனர். இக்காலத்தில் இதனை ‘மளிகை’ என்று வழங்குகிறோம் பயிர்செய்து பெற்ற பொருள்களைப் ‘பண்டம்’ என்றும், கைவினைப் பொருள்களைப் ‘பண்ணியம்’ என்றும் இப் பாடற்பகுதி தெளிவுபடுத்துகிறது. பண்டம் உணவாகப் பயன்படும் என்றும், மலையிலிருந்தும், நிலத்திலிருந்தும், நீரிலிருந்தும் பெறப்படும் என்றும் இப்பகுதி ககூறுவதை எண்ணிப் பார்க்க வேண்டும் மணி, முத்து, பொன் ஆகியவற்றைக் கொண்டு பல்வேறு நாடுகளில் செய்யப்பட்டவை ‘பண்ணியம்’. பண்டங்களையும் , பண்ணியங்களையும் விற்பனை செய்வோர் அறநெறி பிழையாமல் நன்னடத்தை கொண்டவர்களாகத் திகழ்ந்தனர். அவர்களது வீடுகள் குன்றுகள் போன்றவை. பருந்துகள் அமர்ந்து இரை தேடும் அளவுக்கு உயரமான அடுக்கு மாடிகளைக் கொண்டவை.

நாற் பெருங் குழு (507-510)
மழையொழுக் கறாஅப் பிழையா விளையுட்
பழையன் மோகூர் அவையகம் விளங்க
நான்மொழிக் கோசர் தோன்றி யன்ன
தாமேஎந் தோன்றிய நாற்பெருங் குழுவும் . . . .[507 - 510]

பொருளுரை:

நாற்பெருங் குழு - (அமைச்சர், புரோகிதர் என்னும் புரையோர், தூதன், ஒற்றன், படைத்தலைவன் ஆகியோரை அரசனின் ஐம்பெருங்குழு என்று நிகண்டு நூல் தொகுத்து உரைக்கிறது.) (அத்துடன் அரசனின் பெருஞ்சுற்றம் என்று ஐவரை நிகண்டு குறிப்பிடுகிறது. படைத்தொழிலாளர், நிமித்தம் பார்ப்பவர், ஆயுள் வேதியர், நட்பாளர், அந்தணர் என்னும் அறவோர் - என்போர் அந்த ஐவர்.) (படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் - 6ம் என்று திருக்குறள் 381 தொகுத்துப் பார்க்கும்போது, அரணமைதியை விலக்கிவிட்டுப் பார்க்கும்போது, படைத்தலைவர், குடிமக்களின் பிரதிநிதியாகக் கொள்ளத் தக்க ‘கிழார்’ போன்றோர். செல்வப் பெருமக்கள், அமைச்சர், நண்பர் - ஆகிய ஐவரை ஐம்பெருங்குழுஎன்று கொள்ள வேண்டியுள்ளது.) இந்த நூலில் பேசப்படுவது ‘நாற்பெருங் குழு’. இந்த நாற்பெருங்குழு எது? அந்தணர் (அடி 474) அறிஞர் (481). அறங்கூறும் அவைத்தலைவர் (492) - ஆகியோர் எனக் கொள்வது ஒருவகையில் பொருத்தமானது. இவ்வாறு கொள்வது கூறியது கூறலாக அமையும். என்றாலும் மோகூர் அரசவையில் நான்மொழிக் கோசர் வீற்றிருந்தது போல் மதுரை அரசவையில் நாற்பெருங்குழு இருந்தது என்று கூறப்படுவதால் , 4 மொழி பேசும் மொழிபெயர்ப்பாளர்கள் இருந்தனர் எனல் மிகப் பொருத்தமானது. அக்காலத்தில் வழக்கில் இருந்த வடமொழி பாலி, தெலுங்கு, கன்னடம் - ஆகியவை அந்த 4 மொழிகள் என்க. இங்குக் குறிப்பிடப்படும் மோகூர் மதுரையின் ஒரு பகுதியாக உள்ளது.

பல்வேறு தொழிலாளர்களின் கூட்டம் (511-522)
கோடுபோழ் கடைநருந் திருமணி குயினரும்
சூடுறு நன்பொன் சுடரிழை புனைநரும்
பொன்னுரை காண்மருங் கலிங்கம் பகர்நரும்
செம்புநிறை கொண்மரும் வம்புநிறை முடிநரும்
பூவும் புகையும் ஆயு மாக்களும் . . . .[515]

எவ்வகைச் செய்தியும் உவமங் காட்டி
நுண்ணிதின் உணர்ந்த நுழைந்த நோக்கிற்
கண்ணுள் வினைஞரும் பிறரும் கூடித்
தெண்டிரை யவிரறல் கடுப்ப வொண்பகல்
குறியவு நெடியவு மடிதரூஉ விரித்துச் . . . .[520]

சிறியரும் பெரியருங் கம்மியர் குழீஇ
நால்வேறு தெருவினுங் காலுற நிற்றரக். . . . .[511 - 522]

பொருளுரை:

நால்வேறு தெரு என்று இங்குக் கூறப்படுவது முன்பு கூறிய நாற்பெருங்குழு மேன்மக்கள் வாழ்ந்த நான்கு தெருக்கள். இக்காலத்திலும் மதுரையின் அமைப்பு நாற்றிசைப் பெயர்கொண்ட தெருக்களைக் கொண்டு விளங்குவது ஒப்பிட்டு எண்ணத் தக்கது. இந்த நால்வேறு தெருக்களிலும் நடந்து கொண்டே விற்போரும், துணி பரப்பிப் பொருள் கிடத்தி விற்போரும், கடை வைத்துக் கலைத்தொழில் செய்து விற்போரும் எனப் பல்திறப்பட்ட வணிகர்கள் வாணிகம் செய்தனர். சங்கை அறுத்துக் கடைந்து வளையல் செய்வோர். பவளம் போன்ற மணிகளைக் கோப்பதற்கு ஓட்டை போடுவோர். தங்கத்தைச் சுட்டு அணிகலன் செய்வோர். தங்கத்தை உரைத்துப் பார்த்து மதிப்பீடு செய்வோர். வேட்டி முதலான கலிங்கம் விற்போர். செம்பாலான பாத்திரம் விற்போர். மகளிர் சட்டையில் மணிமுடிந்து அழகுபடுத்துவோர். ஓவியம் தீட்டியும், படிமம் செய்தும் விற்கும் கண்ணுள் வினைஞர். மற்றும் பலரும் சிறியதும் பெரியதுமான துணிகளை விரித்து விற்பனை செய்தனர். மக்கள் கடலலை போல நடமாடுகையில் அவர்களின் துணிவிரிப்புக் கடைகள் கடலோர மணல் போல் காணப்பட்டன. கால் வலிக்க நின்றுகொண்டு விற்றவர்களும் உண்டு.

பலரும் கூடி நிற்றலால் உண்டாகும் ஆரவாரம் (523-526)
கொடும்பறைக் கோடியர் கடும்புடன் வாழ்த்துந்
தண்கட னாடன் ஒண்பூங் கோதை
பெருநா ளிருக்கை விழுமியோர் குழீஇ . . . .[525]
விழைவுகொள் கம்பலை கடுப்பப் . . . .[523 - 526]
உணவு வகைகள் (527-535)
சேறு நாற்றமும் பலவின் சுளையும்
வேறுபடக் கவினிய தேமாங் கனியும்
பல்வே றுருவிற் காயும் பழனும்
கொண்டல் வளர்ப்பக் கொடிவிடுபு கவினி . . . .[530]

மென்பிணி யவிழ்ந்த குறுமுறி யடகும்
அமிர்தியன் றன்ன தீஞ்சேற்றுக் கடிகையும்
புகழ்படப் பண்ணிய பேரூன் சோறும்
கீழ்செல வீழ்ந்த கிழங்கொடு பிறவும்
இன்சோறு தருநர் பல்வயி னுகர . . . .[527 - 535]

பொருளுரை:

சேறு (பழ மசியல்), நாற்றம் (பத்தி சந்தனம் ஏலம் போன்ற மணப்பொருள்கள்), பலாப்பழச் சுளை, பல்வேறு உருவம் கொண்ட இனிப்பு மாம்பழங்கள், பலதிறப்பட்ட காய்கள், பழங்கள், வெற்றிலை, பாக்கு, சமைத்த உணவு வகைகள், சமைத்த கிழங்கு வகைகள், இனிப்புப் பண்டங்கள், முதலானவற்றை வாங்கி ஆங்காங்கே தின்றுகொண்டிருந்தனர். வெற்றிலை - கீழைக்காற்று வீசும்போது கொடி படர்ந்து அழகாகத் துளிர் விட்டு விரிந்துள்ள இளம் இலை, பாக்கு - கடிகை என்னும் கொட்டை நிலையில் இருந்தாலும் மெல்லும்போது சேறாகி அமிழ்தம் போல் இனிப்பது. கடைத்தெருவில் உணவுப் பண்டங்களை மக்கள் வாங்கித் தின்ற ஆரவாரப் பாங்கு எப்படியிருந்தது? சேர நாட்டில் கோதை மன்னன் வெற்றி விழா கொண்டாடியபோது அவனது நாளவையில் விழுமியோர் கூடியிருக்கையில் யாழும் இயமும் இசை கூட்டிக் கோடியர் என்னும் இசைவாணர் கூட்டம் வாழ்த்தும்போது எழும் கம்பலை ஆரவாரம் போல இருந்தது.

அந்திக் கடையில் எழும் ஓசை மிகுதி (536-544)
வாலிதை எடுத்த வளிதரு வங்கம்
பல்வேறு பண்ட மிழிதரும் பட்டினத்
தொல்லென் இமிழிசை மானக் கல்லென
நனந்தலை வினைஞர் கலங்கொண்டு மறுகப்
பெருங்கடற் குட்டத்துப் புலவுத்திரை யோதம . . . .[540]

இருங்கழி மருவிப் பாயப் பெரிதெழுந்து
உருகெழு பானாள் வருவன பெயர்தலிற்
பல்வேறு புள்ளின் இசையெழுந் தற்றே
அல்லங் காடி அழிதரு கம்பலை . . . .[536 - 544]

பொருளுரை:

கடலலையானது கழிமுகத்தில் பாய்ந்து தழுவிவிட்டுத் திரும்பும்போது ஒதுக்கிய இரைகளைத் தின்ற பறவைகள் மாலைநேரம் வந்ததும் இருப்பிடத்துக்குத் திரும்பும்போது தம் இனத்தைச் சேர்ந்த மற்ற பறவைகள் ஒன்று திரள்வதற்காக ஒலி எழுப்புவது போல, மாலைநேரக் கடைகளில் ஆரவாரம் மிகுந்தது. பானாள் = பால் நாள் = பாதி நாள் (‘பானாள் கங்குல்’ என்னும்போது இரவாகிய கங்குலில் பாதிநாள். அதாவது நள்ளிரவாகிய யாமம்). தெருக்கடை நாளங்காடி போய் அல்லங்காடிக்குப் பொருள்களைக் கொண்டுவந்து சேர்ப்பவர்களின் நிலை எப்படி இருந்தது? கடலலை கழித்துறையில் கடற்பொருட்களை ஒதுக்கிவிட்டுத் தரைப்பொருட்களை எடுத்துச் செல்வது போல் இருந்தது. வால் இதை = வலிமை மிக்க பாய்மரம் (ஒப்பு நோக்கி இணைத்துக் கொள்க; திருக்குறள் ‘வாலறிவன்’ - வாலறிவு = வலிமை மிக்க இறிவு). காவிரிப்பூம்பட்டினத்தில் காற்றால் செலுத்தப்படும் பாய்மரக் கப்பல்களிலிருந்து பல்வேறு பண்டங்களை இறக்குமதி செய்யும்போது எழுப்பப்படும் மகிழ்ச்சி ஆரவாரம் போலவும் அல்லங்காடி கம்பலை இருந்தது.

இரவுக் கால நிலை (545-558)
ஒண்சுடர் உருப்பொளி மழுங்கச் சினந்தணிந்து . . . .[545]

சென்ற ஞாயிறு நன்பகற் கொண்டு
குடமுதற் குன்றஞ் சேரக் குணமுதல்
நாள்முதிர் மதியந் தோன்றி நிலாவிரிபு
பகலுரு வுற்ற இரவுவர நயந்தோர்

பொருளுரை:

உருப்பு ஒளி = கடும் வெயில். ஞாயிறு ஒளியும் வெயிலுமாகிய தன் சினம் தணிந்து தன் நன்பகல் பொழுதை மேலைத்திசை முதலில் சேர்த்தது. அப்போது கீழைத்திசை முதலில் 15 நாள் முதிர்ந்த மதியம் தோன்றித் தன் நிலவொளியை விரித்துப் பகல்செய்து கொண்டிருந்தது. இதனை விரும்பியவர்கள் அதன் பயனைத் துய்க்கலாயினர்.

காதல் இன்றுணை புணர்மார் ஆயிதழ்த . . . .[550]

தண்ணறுங் கழுநீர் துணைப்ப இழைபுனையூஉ
நன்னெடுங் கூந்த னறுவிரை குடைய
நரந்த மரைப்ப நறுஞ்சாந்து மறுக
மென்னூற் கலிங்கங் கமழ்புகை மடுப்பப்
பெண்மகிழ் வுற்ற பிணைநோக்கு மகளிர் . . . .[555]

நெடுஞ்சுடர் விளக்கம் கொளீஇ நெடுநகர்
எல்லை எல்லா நோயொடு புகுந்து
கல்லென் மாலை நீங்க நாணுக்கொள . . . .[545 - 558]

பொருளுரை:

மானைப் போல் மருளும் பார்வை கொண்ட மகளிர் தம் பெண்மைத் தன்மையைத் தாமே கண்டு மகிழ்ந்தனர். அதனால் தம் காதலரோடு கலந்து இன்புற விரும்பினர். அதற்காகத் தம்மை ஒப்பனை செய்துகொண்டனர். குளுமை தரும் கழுநீர்ப் பூக்களைப் பறித்துவந்து அதன் இதழ்களைத் துணைப்படுத்தி நாரால் மாலை கட்டினர். நன்கு நீண்டு வளர்ந்துள்ள கூந்தலை நீராட்டுவதற்காக நரந்தம் என்னும் மணப் பொருளை அரைத்தனர். அணியப்போகும் மெல்லிய நூலாடைக்கு நறுமணம் கமழும் புகையை ஊட்டினர். சுவர் மாடங்களில் வைக்கப்பட்டிருந்த விளக்குகளை ஏற்றினர். நெடுநகராகிய வீட்டில் பகலெல்லாம் காதலனைப் பிரிந்திருக்கும் துன்ப நோயோடு வாழ்ந்தவர்கள், இரவு வந்ததும் காதலனை எதிர்கொள்வதை விடுத்து அவன் வருகையை எண்ணியவுடன் நாணினர்.

பரத்தையரது வாழ்க்கை (559-589)
ஏழ்புணர் சிறப்பின் இன்றொடைச் சீறியாழ்
தாழ்பயற் கனைகுரல் கடுப்பப் பண்ணுப்பெயர்த்த . . . .[560]

வீழ்துணை தழீஇ வியல்விசும்பு கமழ
நீர்திரண் டன்ன கோதை பிறக்கிட்டு
ஆய்கோல் அவிர்தொடி விளங்க வீசிப்
போதவிழ் புதுமலர் தெருவுடன் கமழ
மேதகு தகைய மிகுநல மெய்திப் . . . .[565]

பெரும்பல் குவளைச் சுரும்புபடு பன்மலர்
திறந்துமோந் தன்ன சிறந்துகமழ் நாற்றத்துக்
கொண்டல் மலர்ப்புதல் மானப்பூ வேய்ந்து
நுண்பூ ணாகம் வடுக்கொள முயங்கி
மாயப் பொய்பல கூட்டிக் கவவுக்கரந்த . . . .[570]

சேயரு நணியரு நலனயந்து வந்த
இளம்பல் செல்வர் வளந்தப வாங்கி
நுண்தா துண்டு வறும்பூத் துறக்கும்
மென்சிறை வண்டின மானப் புணர்ந்தோர்
நெஞ்சே மாப்ப இன்றுயில் துறந்து . . . .[575]

பழந்தேர் வாழ்க்கைப் பறவை போலக்
கொழுங்குடிச் செல்வரும் பிறரு மேஎய
மணம்புணர்ந் தோங்கிய அணங்குடை நல்லில்

பொருளுரை:

மாய மகளிர் - இந்த அணங்குகள்தான் மேலே சொன்னவாறு தன் அழகைப் பார்த்துத் தானே மயங்கி மாலைக்காலம் வந்ததும் ஒப்பனை செய்துகொண்டவர்கள். அவர்கள் தெருவில் உலாத்திக்கொண்டு வருவார்கள். யாழ் மீட்டிக் கொண்டு வருவார்கள். ஏழிசைப்பண் பாடிக்கொண்டு வருவார்கள். அவர்களை விரும்பியவரைத் தழுவிக்கொண்டு வருவார்கள். நீர்மேகத் திரட்சி போன்ற கூந்தலைப் பின்புறம் பறக்கவிட்டுக்கொண்டு வருவார்கள். அந்தக் கூந்தல் வானமெல்லாம் கமழும். வளையல் ஓசை கேட்கும்படி கையை வீசிக்கொண்டு வருவார்கள். கூந்தலில் அணிந்துள்ள மொட்டு விரியும் பூ தெருவெல்லாம் கமழும். தகைமை என்னும் அவர்களது கச்சிதமான உடலழகில் மென்மை தவழும். அதில் மிகுதியான ஒப்பனை நலமும் செய்திருப்பர். குவளைமலர்க் கூட்டம் வண்டுகள் மொய்க்கும்போது தானே வாய் திறந்து மோந்து பார்ப்பவர்களுக்கு மணம் வீசுவது போல் அவர்களின் மேனியே மணம் வீசும். தமிழ்நாட்டில் முதன்முதலாகக் கீழைக் காற்றால் கொண்டல்மழை பொழியும்போது பூத்துக் குலுங்கும் குட்டிப்பிலாத்தி மலர்ச்செடி போல் உடல் முழுவதையும் பூவால் ஒப்பனை செய்து கொண்டிருப்பார்கள். நாடி வந்தவர்களின் நெஞ்சில் தாம் அணிந்திருக்கும் நுட்பமான அணிகலன்கள் பதியும் அளவுக்கு இறுக்கித் தழுவுவார்கள். அத்தனையும் மாயம், பொய், பொருளைக் கவர்ந்து கொள்ளப் போவதை மறைத்து வஞ்சனையாகத் தழுவுவார்கள். தொலைவிலிருந்தும் அருகாமையிலிருந்தும் வரும் செல்வவளம் மிக்க இளைஞர்களின் உடல்வளத்தையும், பண வளத்தையும் வாங்கிக்கொண்டு அவர்களைத் துறந்து விடுவர். தேனை எடுத்துக்கொண்ட பின் வண்டானது தேன் தந்த பூவை ஒதுக்கித் தள்ளிவிட்டுத் தேன் தரும் பூவுக்குத் தாவுவது போல் இவர்கள் வேறு செல்வக் காளையரைத் தேடிக்கொள்வர். தழுவிய ஆண்களின் நெஞ்சம் ஏமாந்து போவதைப் பற்றி அவர்கள் கவலைப்படுவது இல்லை. பழத்தைத் தின்ற பறவைகள் பழம் இருக்கும் வேறு மரத்தைத் தேடிச் செல்வது போன்றது அவர்களின் வாழ்க்கை. என்றாலும் கொழுத்த பணக்காரர்களும் காமக் கொழுப்பு ஏறிய பிறரும் இவர்களை விரும்பி அவர்கள் வாழும் ஓங்கி உயர்ந்த இல்லங்களுக்குச் சென்று தழுவுவார்கள்

ஆய்பொன் அவிர்தொடிப் பாசிழை மகளிர்
ஒண்சுடர் விளக்கத்துப் பலருடன் துவன்றி . . . .[580

நீனிற விசும்பில் அமர்ந்தனர் ஆடும்
வானவ மகளிர் மானக் கண்டோர்
நெஞ்சு நடுங்குறூஉக் கொண்டி மகளிர்
யாம நல்யாழ் நாப்ப ணின்ற
முழவின் மகிழ்ந்தனர் ஆடிக் குண்டுநீர்ப் . . . .[585]

பனித்துறைக் குவவுமணல் முனைஇ மென்றளிர்க்
கொழுங்கொம்பு கொழுதி நீர்நனை மேவர
நெடுந்தொடர்க் குவளை வடிம்புற அடைச்சி
மணங்கமழ் மனைதொறும் பொய்தல் அயரக் . . . .[559 - 589]

பொருளுரை:

கொண்டி மகளிர் என்போர் மாயம் செய்யும் வரைவின் மகளிர் அல்லர். யாருக்கும் அடங்காமல் கொண்டித்தனம் செய்யும் மகளிர். பிறரது நெஞ்சை நடுங்கச் செய்பவர்கள். வானவ மகளிர் மற்றவர் மயங்க ஆடுவர். யாருக்கும் எந்த உடலின்பமும் தர மாட்டார்கள். இவர்கள் தங்க வளையல் மின்னும்படியும் பூண்டிருக்கும் புதிய அணிகலன்கள் பொலியும்படியும் பலராகக் கூடி விளக்கு வெளிச்சத்தில் விளையாடுவார்கள். இந்த வானவ மகளிர் போல் கொண்டிமகளிர் நள்ளிரவில் கூடி விளையாடுவர். யாழில் பண் இசைத்துப் பாடுவர். முழவிசைக்கேற்ப ஆடுவர். ஆழமான நீர்த்துறைகளை அடுத்துக் குவிந்திருக்கும் மணலில் விளையாடுவர். ஆடும் விளையாட்டில் சலிப்பு தோன்றும்போது அதனை விட்டுவிட்டுப் பூப்பறிக்கும் விளையாட்டில் ஈடுபடுவர். நீரில் நனைவதைப் பொருட்படுத்தாமல் குவளை மலர்களைப் பறித்து அதன் காம்புகளை நன்றாக அலசிவிட்டுக் கட்டாக மனைக்குக் கொண்டுசென்று அழகுபடுத்தி வைத்துக்கொண்டு பொய்தல் விளையாட்டு விளையாடுவார்கள். பொய்தல் என்பது பொருள்களை மறைத்தும், ஆள் மறைந்தும் விளையாடும் விளையாட்டு.

ஓணநாள் விழாவில் மறவர் மகிழ்ந்து திரிதல் (590-599)
கணங்கொள் அவுணர்க் கடந்த பொலந்தார் . . . .[590]

மாயோன் மேய ஓண நன்னாட்
கோணந் தின்ற வடுவாழ் முகத்த
சாணந் தின்ற சமந்தாங்கு தடக்கை
மறங்கொள் சேரி மாறுபொரு செருவில்
மாறா துற்ற வடுப்படு நெற்றிச் . . . .[595]

சுரும்பார் கண்ணிப் பெரும்புகல் மறவர்
கடுங்களி றோட்டலிற் காணுநர் இட்ட
நெடுங்கரைக் காழக நிலம்பர லுறுப்பக்
கடுங்கள் தேறல் மகிழ்சிறந்து திரிதரக் . . . .[590 - 599]

பொருளுரை:

திருவோணத் திருநாளில் யானை அணிவகுப்புத் திருவிழா நடைபெறும். அதனைக் காணவரும் மக்கள் கூட்டம் விரைந்து வரும் யானையைப் பார்த்து அஞ்சி ஓடும். அப்போது அவர்கள் தம் மார்பில் அணிந்துள்ள காழகம் என்னும் அணிகலன் க.ன்று விழுவதையும் பொருட்படுத்தாமல் ஓடுவர். அவை நிலத்தில் கிடந்து ஓடுபவர்களின் காலில் உருத்தும். அவுணரைக் கடந்ததாகப் பாடல் கூறுவதற்கு இந்தக் கதையே அடிப்படை. மதுரையிலும் இந்த நன்னாள் கொண்டாடப்பட்டது. இந்த விழாவின்போது உலாவந்த யானைகளின் பெருமை பாடலில் சொல்லப்படுகிறது. யானையின் முகத்தில் அங்குசம் குத்தி ஆறிய புண்ணின் தழும்பு இருந்தது. துதிக்கையில் அந்தப் புண்ணின் தழும்பு. அந்தக் கை எதிரிகளைத் தடுத்து நிறுத்தியவை. நெற்றியில் சேரிக் கதவுகளை முட்டித் தாக்கிய தழும்பு. யானையை ஓட்டிவந்த மறவர் வண்டு மொய்க்கும் மலர்மாலை அணிந்திருந்தனர்.

புதல்வர்களை ஈன்ற மகளிர் நீராடுதல் (600-603)
கணவ ருவப்பப் புதல்வர்ப் பயந்து . . . .[600]

பணைத்தேந் திளமுலை அமுதம் ஊறப்
புலவுப்புனிறு தீர்ந்து பொலிந்த சுற்றமொடு
வளமனை மகளிர் குளநீர் அயரத்

பொருளுரை:

மக்களைப் பெற்று கணவனோடு வாழும் இல்லத்தரசியர் பருத்துயர்ந்த இளைய மார்பகங்களில் பால் ஊறக் குளநீர் ஆடச் சென்றனர். குழந்தை பெற்ற ஈரக்காலம் முடிந்தபின் சென்றனர். சுற்றத்தாரோடு சென்றனர்.

சூல்மகளிர் தேவராட்டியுடன் நின்று தெய்வத்திற்கு மடை கொடுத்தல் (604-610)
திவவுமெய்ந் நிறுத்துச் செவ்வழி பண்ணிக்
குரல்புணர் நல்யாழ் முழவோ டொன்றி . . . .[605]

நுண்ணீ ராகுளி இரட்டப் பலவுடன்
ஒண்சுடர் விளக்க முந்துற மடையொடு
நன்மா மயிலின் மென்மெல இயலிக்
கடுஞ்சூன் மகளிர் பேணிக் கைதொழுது
பெருந்தோட் சாலினி மடுப்ப ஒருசார் . . . .[604 - 610]

பொருளுரை:

சாலினி என்போர் குருகேறி ஆடும் பெண். ஒருபக்கம் சாலினி நிறைமாதப் பெண்களைப் பேணித் தம் பருத்த தோள்களை உயர்த்திக் கைகூப்பித் தொழுதாள். அவள் தொழும்போது யாழ் மீட்டப்பட்டது முழவு முழங்கிற்று. உடுக்கு அடிக்கப்பட்டது. ஆகுளி இரட்டல் ஒலி முழங்கிற்று. விளக்கு காட்டப்பட்டது. உணவு கொண்டு செல்லப்பட்டது. மெல்ல மெல்லத் தானும் நடந்து பிள்ளைத் தாய்ச்சியையும் நடத்திக் கொண்டிருந்தாள். யாழ் நரம்புகள் இசைப்பதற்கு ஏற்ற வகையில் நிறுத்தப்பட்டன. கற்பினை உருப்பொருளாகக் கொண்ட செவ்வழிப் பண் யாழில் இசைக்கப்பட்டது. மகளிர் மேனியிலுள்ள மாமை நிறம் எப்படியிருக்கும் என்பது இங்கு உவமையால் உணர்த்தப்படுகிறது. அவள் நிறம் மயில் தோகை போன்றது. மாமை மயில் தோகையிலுள்ள புள்ளிகள் போன்றது.

வேலன் வழிபாடும், குரவைக் கூத்தும் (611-615)
அருங்கடி வேலன் முருகொடு வளைஇ
அரிக்கூ டின்னியங் கறங்கநேர் நிறுத்துக்
கார்மலர்க் குறிஞ்சி சூடிக் கடம்பின்
சீர்மிகு நெடுவேட் பேணித் தழூஉப்பிணையூஉ
மன்றுதொறு நின்ற குரவை சேரிதொறும் . . . .[611 - 615]

பொருளுரை:

மற்றொரு பக்கம் வேலன் முருகேறி ஆடும் குரவை ஆட்டம் நிகழ்ந்தது. வேலன் குறிஞ்சிப்பூ சூடியிருந்தான். கடம்பு சூடிய கடவுள் முருகனை வழிபாடு செய்துகொண்டு குரவை ஆடினான். மகளிரும் மைந்தரும் தோளோடு தோள் தழுவிக்கொண்டு ஆடுவது ‘தழூஉ’ ஆட்டம். இவர்கள் தழூஉ ஆடும்போது விட்டிசை கூட்டும் இன்னிசைக் கருவிகள் முழங்கின. அதன் தாள இசைக்கேற்ப தப்படி போட்டு [நேர் நிறுத்து] வேலன் ஆட்டம் நிகழ்ந்தது.

இரவின் முதற் சாம நிகழ்ச்சிகள் முடிவு பெறுதல் (616-620)
உரையும் பாட்டும் ஆட்டும் விரைஇ
வேறுவேறு கம்பலை வெறிகொள்பு மயங்கிப்

பொருளுரை:

சாலினி ஆட்டம் குரவை எனப்படும். வேலன் ஆட்டம் தழூஉ எனப்படும். இந்த இருபாலார் ஆட்டத்தையும் வெறி என்பர். வெறியாட்டத்தின்போது இடையிடையே பேசுவார்கள், பாடுவார்கள், ஆடுவார்கள். எனவே இதனை வெறிக்கூத்து என்றும் வழங்குவர்.

பேரிசை நன்னன் பெரும்பெயர் நன்னாட்
சேரி விழவின் ஆர்ப்பெழுந் தாங்கு
முந்தை யாமம் சென்ற பின்றைப் . . . .[620]

பொருளுரை:

தன் வள்ளண்மையால் பெரும்புகழ் பெற்றவன் நன்னன். நன்னன் = திருமால் எனலுமாம். அவன் அரியணை ஏறி அரசனாகிய நாள் அவனுக்குப் ‘பெரும் பெயர் நன்னாள்’ ஆண்டுதோறும் அந்த நாள் கொண்டாடப்படும்போது மக்கள் ஆர்ப்பரித்து முழங்குவர். அது போல மதுரையில் முதல்யாமம் ஆர்ப்பரிப்போடு கழிந்தது.

இரண்டாம் சாமத்தில் நகரின் நிலை (621-628)
பணிலங் கலியவிந் தடங்கக் காழ்சாய்த்து
நொடைநவில் நெடுங்கடை அடைத்து மடமதர்
ஒள்ளிழை மகளிர் பள்ளி யயர

பொருளுரை:

சங்குகளின் முழக்கம் அடங்கிப் போயிற்று. மகளிர் இல்லக் கதவுகளை அடைத்தனர். காழ் எனப்படும் தாழ்ப்பாள் போட்டனர். கதவை மூடும்போதும், தாழ்ப்பாள் போடும்போதும் இசைத்தொடை எழுந்து நவின்றது. மகளிர் பள்ளி கொண்டனர். அவர்கள் மடமையும் தூக்க மதமதப்பும் கொண்ட நிலையினராய் அயர்ந்து தூங்கினர். இவ்வாறு இரண்டாம் யாமம் கழிந்தது.

நல்வரி இறாஅல் புரையு மெல்லடை
அயிருருப் புற்ற ஆடமை விசயங் . . . .[625]

கவவொடு பிடித்த வகையமை மோதகந்
தீஞ்சேற்றுக் கூவியர் தூங்குவனர் உறங்க
விழவி னாடும் வயிரியர் மடியப் . . . .[621 - 628]

பொருளுரை:

அடை, ஆப்பம், பாயசம் போன்றவற்றை மூன்றாம் யாமம் வரையில் விழித்திருந்து விற்றவர்கள் அந்த யாமம் முடியும்போதே தூங்கி வழிந்து உறங்கலாயினர். விழாவில் நாடகம் ஆடுவோரும் தம் நாடகத்தை முடித்துக்கொண்டனர்.

மூன்றாம் சாம நிகழ்ச்சிகள் (629-653)
பாடான் றவிந்த பனிக்கடல் புரையப்
பாயல் வளர்வோர் கண்ணினிது மடுப்பப் . . . .[630]

பானாட் கொண்ட கங்கு லிடையது
பேயும் அணங்கும் உருவுகொண் டாய்கோற்
கூற்றக் கொஃறேர் கழுதொடு கொட்ப

பொருளுரை:

கடலில் அலை ஓயாது. பனியால் மூடப்பட்டிருக்கும் கடலில் அலை இருக்குமா? பனிக்கடல் போல மக்கள் படுத்து இனிமையாக உறங்கினர். கங்குல் 6 யாமங்கள் கொண்டது. அதில் 3 கழிந்து விட்ட படியாலே இரவுக்காலத்தில் அது பாதிநாள் [பானாள்] ஆயிற்று. இந்த நேரத்தில் பேய், அணங்கு, கூற்றம், கழுது ஆகியவை சுழன்று கொண்டிருந்தன.

இரும்பிடி மேஎந்தோ லன்ன இருள்சேர்பு
கல்லு மரனுந் துணிக்குங் கூர்மைத் . . . .[635]

தொடலை வாளர் தொடுதோ லடியர்
குறங்கிடைப் பதித்த கூர்நுனைக் குறும்பிடிச்
சிறந்த கருமை நுண்வினை நுணங்கறல்
நிறங்கவர்பு புனைந்த நீலக் கச்சினர்
மென்னூல் ஏணிப் பன்மாண் சுற்றினர் . . . .[640]

நிலனகழ் உளியர் கலனசைஇக் கொட்கும்
கண்மா றாடவர் ஒடுக்க மொற்றி
வயக்களிறு பார்க்கும் வயப்புலி போலத்
துஞ்சாக் கண்ணர் அஞ்சாக் கொள்கையர்
அறிந்தோர் புகழ்ந்த ஆண்மையர் செறிந்த . . . .[645]

நூல்வழிப் பிழையா நுணங்குநுண் டேர்ச்சி
ஊர்காப் பாளர் ஊக்கருங் கணையினர்
தேர்வழங்கு தெருவி னீர்திரண் டொழுக
மழையமைந் துற்ற அரைநா ளமயமும்
அசைவிலர் எழுந்து நயம்வந்து வழங்கலிற் . . . .[650]

கடவுள் வழங்குங் கையாறு கங்குலும்
அச்ச மறியா தேம மாகிய
மற்றை யாமம் பகலுறக் கழிப்பிப் . . . .[629 - 653]

பொருளுரை:

வைகறை - பேய் வழங்கும் 4ஆம் யாமம் போனபின் கடவுள் வழங்கும் 5ஆம் யாமம் வந்தது. காப்பாற்றுபவரைக் கடவுள் என்கிறோம். மக்கள் உறங்கும்போது அவர்களது உடைமைகளைக் காப்பாற்றுபவரைக் கடவுள் எனல் தகும் என்று காட்டுவதாக இப் பாடற்பகுதி அமைந்துள்ளது. ஊர் காப்பாளரும் கடவுளரும் வழங்கிக் கொண்டிருப்பதால் மக்கள் அச்சம் என்பதையே அறியாமல் பாதுகாப்பாக உறங்கினர். பகலில் அச்சமின்றிப் பணியாற்றுவது போல் இரவில் அச்சமின்றி உறங்கினர். ஊர் காப்பாளரின் தோற்றமும், காவற்பணியும் எவ்வாறு இருந்தன என்று விரிவாகச் சொல்லப்படுகிறது. முக்காடு - யானையின் மேல்தோல் நிறத்தில் முக்காடு (‘இருள்’) போட்டுக் கொண்டிருந்தனர். வாள் - கையிலே வாள் இருந்தது. அது கல்லையும் மரத்தையும் வெட்டிச் சாய்க்கும் கூர்மை உடையதாக இருந்தது. வாளை உறையில் (‘தொடலை’) போட்டுக்கொண்டு திரிந்தனர். தொடுதோல் - காலிலே செருப்பு அணிந்திருந்தனர். கச்சு - இடையின் குறங்குப் பகுதியில் (தொடைக்கு மேலுள்ள இடுப்புப் பகுதியில்) கச்சு அணிந்திருந்தனர். கூர்நுனைக் குறும்பிடி என்பது கைவிரல்கள் போன்ற நுனியில் மாட்டிப் பிடித்துக்கொள்ளும் பெல்ட் பக்கில் belt buckle அந்தக் கச்சின் நிறம் நீலம். அதில் கருமணல் போன்ற புள்ளிகள் இருந்தன. கண் பார்வை - அவர்களுடைய கண்கள் திருடர்களை ஒற்றுப் பார்த்துக் கொண்டிருந்தன. திருடர் - திருடர் நிலத்தைப் பறிக்கும் கன்னுளி (கன்னக்கோல்) வைத்திருப்பர். அணிகலன்கள் பாதுகாக்கப்படும் இடத்தை ஆசையோடு ஆராய்ந்து பார்த்துக் கொண்டிருப்பர். புலி யானையை வீழ்த்தக் காலம் பார்த்துக் கொண்டிருப்பது போல் உடைமையாளர் எப்போது கண் சோர்வர் என்று எதிர்பார்த்துக் கொண்டிருப்பர். ஊர்காப்பாளர் - இவர்களைப் பிடிக்க ஊர்காப்பாளர் கண் சோராமல் தேடுவர். ஊர்காப்பாளர் திருடர்களுக்கு அஞ்சாதவர். அதாவது அஞ்சாமையே அவர்களது கோட்பாடு. அவர்களது ஆண்மையானது persionality அறிந்தவர்கள் அனைவராலும் புகழப்படும். தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாத செறிவு உடையவர்கள். ஊர்காப்பாளருக்கு உதவும் இலக்கண நூல் - ஊர்காப்பாளர் இலக்கணம் சொல்லும் நூல் அக்காலத்தில் இருந்தது. குற்றவாளிகளை நூல்போல் தொடரும் பாங்கு கூறப்பட்டிருந்தது. அதன்படி மிக நுட்பமாகக் குற்றவாளிகளைப் பின்தொடர்வதில் அவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர். எய்தால் வெல்ல முடியாத ‘ஊக்கருங் கணை’ அவர்களிடம் இருந்தது. அச்சமில்லா உறக்கம் - வழங்கல் = புழக்கத்தில் இருத்தல். ஊர்காப்பாளர் தெருவில் புழங்கிக் கொண்டிருந்ததால் மக்கள் பாதுகாப்பாக உறங்கினர்.

விடியல்காலத்தில் மதுரை மாநகர் (654-686)
போதுபிணி விட்ட கமழ்நறும் பொய்கைத்
தாதுண் தும்பி போது முரன்றாங் . . . .[655]

கோத லந்தணர் வேதம் பாடச்
சீரினிது கொண்டு நரம்பினி தியக்கி
யாழோர் மருதம் பண்ணக் காழோர்
கடுங்களிறு கவளங் கைப்ப நெடுந்தேர்ப்
பணைநிலைப் புரவி புல்லுணாத் தெவிட்டப் . . . .[660]

பல்வேறு பண்ணியக் கடைமெழுக் குறுப்பக்
கள்ளோர் களிதொடை நுவல இல்லோர்
நயந்த காதலர் கவவுப்பிணித் துஞ்சிப்
புலர்ந்துவிரி விடிய லெய்த விரும்பிக்
கண்பொரா வெறிக்கு மின்னுக்கொடி புரைய . . . .[665]

ஒண்பொ னவிரிழை தெழிப்ப இயலித்
திண்சுவர் நல்லிற் கதவங் கரைய
உண்டுமகிழ் தட்ட மழலை நாவிற்
பழஞ்செருக் காளர் தழங்குகுரல் தோன்றச்
சூதர் வாழ்ந்த மாகதர் நுவல . . . .[670]

வேதா ளிகரொடு நாழிகை இசைப்ப
இமிழ்முர சிரங்க ஏறுமாறு சிலைப்பப்
பொறிமயிர் வாரணம் வைகறை இயம்ப
யானையங் குருகின் சேவலொடு காமர்
அன்னங் கரைய அணிமயில் அகவப் . . . .[675]

பிடிபுணர் பெருங்களிறு முழங்க முழுவலிக்
கூட்டுறை வயமாப் புலியொடு குழும
வான நீங்கிய நீனிற விசும்பின்
மின்னுநிமிர்ந் தனைய ராகி நறவுமகிழ்ந்து
மாணிழை மகளிர் புலந்தனர் பரிந்த . . . .[680]

பரூஉக்கா ழாரஞ் சொரிந்த முத்தமொடு
பொன்சுடு நெருப்பி னிலமுக் கென்ன
அம்மென் குரும்பைக் காய்படுபு பிறவுந்
தருமணன் முற்றத் தரிஞிமி றார்ப்ப
மென்பூஞ் செம்மலொடு நன்கலஞ் சீப்ப . . . .[685]

இரவுத்தலைப் பெயரு மேம வைகறை . . . .[654 - 686]

பொருளுரை:

அந்தணர் வேதம் பாடினர். யாழோர் மருதம் பாடினர். காழோர் யானைகளுக்கு கவளம் ஊட்டினர். தேர்க் குதிரைகளுக்குப் புல்லுணவு போட்டனர். பண்ணியம் விற்போர் கடையை மெழுகினர். கள்ளை விலை கூறி விற்றனர். காதலர் கட்டியணைத்தபடி தூங்கிக் கொண்டிருந்தனர். கதவுகள் திறக்கும் ஓசை கேட்டது. கள்ளுண்டவர்கள தழங்கு குரலில் பேசினர். சூதர் அரசனுக்கு வாழ்த்துப் பாடினர். மாகதர் அரசனின் பழம்புகழை எடுத்துப் பேசினர். வேதாளிகர் காலம் கணித்துச் சொன்னார்கள். அரண்மனை முரசு முழங்கிற்று. அதன் எதிரொலியாக யானை முழங்கிற்று. சேவல் கூவிற்று ஆண், பெண் குருகுகள் யானை போல் கரைந்தன. அன்னங்கள் ஆசைகொண்டு கரைந்தன. அணிமயில் அகவிற்று. பிடியோடு உறவு கொள்ளும் பெருங்களிறு முழங்கிற்று. கூட்டில் வளர்க்கப்பட்ட ஆண், பெண் புலிகள் குழுமின. இல்லத்தரசியர் புலவி நிகழ்ந்தது. வண்டுகளின் ஆரவாரம் கேட்டது. முற்றத்தில் பழம்பூக் களைந்து புதுப்பூ வைக்கப்பட்டது. இந்த விடியல் ‘ஏம வைகறை’ ஆயிற்று. உள்விளக்கம் குளத்துப் பூவில் தேன் உண்ணும் தும்பி பாடுவது போல் வேதம் ஓதும் அந்தணர் மூக்கொலியோடு பாடினர். மருதப்பண் ஊடலோடு தொடர்புடையது. யாழ் மீட்டுவதற்கு முன் அதன் நரம்பின் சீரை இனிதாக்கிக் கொண்டு பண்ணிசைப்பர். யானைக்குச் சோற்றுக் கவளத்தை வேண்டா என்று அதற்கு கைத்துப்போகும் அளவுக்கு ஊட்டுவர். குதிரைக்கும் அவ்வாறே புல்லைத் தெவிட்டும் அளவுக்குப் போடுவர். பண்ணியம் என்பது பலசரக்கு என்று முன்பே கூறப்பட்டது. நயந்த காதல் என்பது விரும்ப விரும்ப விருப்பம் கூடிக்கொண்டேயிருக்கும் காதல். கதவு திறக்கும் பெண்கள் மின்னல் போல் ஒளிரும் அணிகலன்களுடன் மெதுவாக வந்தனர். கள்ளுண்டவர் என்று மேலே கூறியதற்குப் பதிலாக பழஞ்சோற்று நீராரம் உண்டவர்கள் என்றும் கூறலாம். புலியின் ஒலியைக் குழுமுதல் என்பது மரபு. வானம் நீங்கிய விசும்பு என்பது மழைமேகம் இல்லாத ஆகாயம். விடியலில் வந்த கணவனோடு ஊடும் மகளிர் நறவு அருந்தி மகிழ்ந்திருந்தனர் போலும். மணல் கொண்டுவந்து பரப்பப்பட்ட முற்றத்தில் முத்தாரத்தின் முத்துக்கள் சிதறிக்கிடந்தன. இது விடியலில் வாசல் பெருக்கும் போது உதிர்ந்தவை என்க. நெருப்பில் நீலமணியை நனைப்பதுபோல் முற்றத்தை அடுத்த குளத்தில் நீலமலர்கள் பூத்துக் கிடந்தன. அல்லது மார்கழி மாதத்தில் முற்றத்தில் பூ வைப்பதுபோல் மணல்முற்றத்தில் பூ வைத்து விருந்தினரை வரவேற்றனர். செம்மல் = பழம்பூக்கள்

மதுரையின் சிறப்பு (687-699)
மைபடு பெருந்தோள் மழவ ரோட்டி
இடைப்புலத் தொழிந்த ஏந்துகோட் டியானை
பகைப்புலங் கவர்ந்த பாய்பரிப் புரவி
வேல்கோ லாக ஆள்செல நூறிக் . . . .[690]

காய்சின முன்பிற் கடுங்கட் கூளியர்
ஊர்சுடு விளக்கிற் றந்த ஆயமும்
நாடுடை நல்லெயில் அணங்குடைத் தோட்டி
நாடொறும் விளங்கக் கைதொழூஉப் பழிச்சி
நாடர வந்த விழுக்கல மனைத்தும் . . . .[695]

கங்கையம் பேரியாறு கடற்படர்ந் தாங்கு
அளந்துகடை யறியா வளங்கெழு தாரமொடு
புத்தே ளுலகம் கவினிக் காண்வர
மிக்குப்புகழ் எய்திய பெரும்பெயர் மதுரைச் . . . .[687 - 699]

பொருளுரை:

கடையெழு வள்ளல்களில் ஒருவன் தோட்டிமலை நள்ளி. இவன் தன் தோட்டிமலைக் கோட்டையை நெடுஞ்செழியன் அழிக்காமல் இருப்பதற்காக ஒவ்வொரு நாளும் விழுமிய வளங்களைக் கொண்டுவந்து தந்தான். கங்கை ஆறு கடலில் கலப்பது போல இந்த தார வளங்கள் துரையில் வந்து குவிந்தன. இந்தத் தாரச்செல்வங்கள் கங்கையாறு காவிரியில் கலப்பது போல் மதுரையில் வந்து குவிந்தன. கற்பனை உலகமாகிய வானுலகத்தைப் ‘புத்தேள் உலகம்’ என்றும் வழங்கினர். (ஆள் = ஆள்பவர். ஏ = ஏராப்பு = உயர்வு. ஏ = ஏள் = உயர் = உயர்வு உயர்ந்த இடம், ஒப்பு நோக்குக ஆ - சேய்மைச்சுட்டு (‘ஆயிடை’ - தொல்காப்பியம்) ஆனிலை உலகம். ஆ = ஆன் (‘ன்’ போலி) \ ஆ = அங்கு - அங்கு நிலைகொண்டுள்ள உலகம் ஆ = ஆன்மா ஆன்மா நிலைகொண்டுள்ள இடம்) ஆன்மா என்றால் என்ன? உனக்கு ஓர் உயிர் எனக்கு ஓர் உயிர். அவனுக்கு ஓர் உயிர். அதற்கு ஓர் உயிர் எல்லாரிடமும் எல்லாவற்றிலும் இணைந்திருக்கும் ஓர் உயிர். எல்லாவற்றிலும் இணைந்திருக்கும் இந்த ஓர் உயிர்தான் ஆன்மா.

இரவில் மன்னன் துயில் கொள்ளும் நிலை (700-714)
சினைதலை மணந்த சுரும்புபடு செந்தீ . . . .[700]

ஒண்பூம் பிண்டி அவிழ்ந்த காவிற் சுடர்பொழிந்
தேறிய விளங்குகதிர் ஞாயிற்று இலங்குகதி
ரிளவெயிற் றோன்றி யன்ன
தமனியம் வளைஇய தாவில் விளங்கிழை
நிலம்விளக் குறுப்ப மேதகப் பொலிந்து . . . .[705]

மயிலோ ரன்ன சாயல் மாவின்
தளிரே ரன்ன மேனித் தளிர்ப்புறத்து
ஈர்க்கி னரும்பிய திதலையர் கூரெயிற்
றொண்குழை புணரிய வண்டாழ் காதிற்
கடவுட் கயத்தமன்ற சுடரிதழ்த் தாமரைத் . . . .[710]

தாதுபடு பெரும்போது புரையும் வாண்முகத்
தாய்தொடி மகளிர் நறுந்தோள் புணர்ந்து
கோதையிற் பொலிந்த சேக்கைத் துஞ்சித்
திருந்துதுயில் எடுப்ப இனிதி னெழுந்து . . . .[700 - 714]

பொருளுரை:

நெடுஞ்செழியன் மகளிரைத் தழுவிக்கொண்டு அவர்களது கூந்தல் மெத்தையில் துயின்றான். அவனை எழுப்பினர். இனிமையாக எழுந்தான். புத்துணர்வு பெற்று எழுந்தான். (திருந்துயில் = புத்துணர்வு) வண்டுகள் மொய்த்துக் கொண்டிருக்கையில் செந்தீ போன்று அசோக மலர் மலரும் காட்டில் இளவெயில் பட்டு எழுவது போல் எழுந்தான். அவன் தழுவிய மகளிர் பொன்னை வளைத்து எந்தக் குறைபாடும் இல்லாமல் செய்யப்பட்ட அணிகலன்களோடு விளங்கினர். நிலத்துக்கே விளக்கு வைத்தாற்போல மேன்மையுடன் விளங்கினர். அவர்களின் தோற்றம் மயிலைப் போன்றது. மேனி மாந்தளிர் போன்றது. தளிரில் தெரியும் ஈர்க்கு நரம்புகள்போல் திதலை என்னும் வரிக்கோடுகள் மேனியை அழகுபடுத்தின. பற்கள் கூர்மையாகத் திகழ்ந்தன. ஒளிரும் குழைகளால் காதுகள் வளைந்து தாழ்ந்திருந்தன. அவர்கள் கோயில் குளத்தில் மலர்ந்துகொண்டிருக்கும் தாமரை போன்ற முகம் கொண்டவர்கள். தோளில் வளையல் அணிந்திருந்தனர்.

காலையில் எழுந்து, அரசர்க்கு உரிய கடன் கழித்தல் (715-724)
திண்கா ழார நீவிக் கதிர்விடு . . . .[715]

மொண்காழ் ஆரங் கவைஇய மார்பின்
வரிக்கடைப் பிரச மூசுவன மொய்ப்ப
எருத்தந் தாழ்ந்த விரவுப்பூந் தெரியற்
பொலஞ்செயப் பொலிந்த நலம்பெறு விளக்கம்
வலிகெழு தடக்கைத் தொடியொடு சுடர்வரச் . . . .[720]

சோறமை வுற்ற நீருடைக் கலிங்கம்
உடையணி பொலியக் குறைவின்று கவைஇ
வல்லோன் தைஇய வரிப்புனை பாவை
முருகியன் றன்ன உருவினை யாகி . . . .[715 - 724]

பொருளுரை:

திண்காழ் ஆரம் என்பது திண்மையான வயிரம் பாய்ந்த சந்தனக் கட்டை. ஒண்காழ் ஆரம் என்பது நீரில் ஒளி வயிரம் பாய்ந்த முத்து. செழியன் மார்பில் சந்தனம் பூசியிருந்தான். முத்துமாலை அணிந்திருந்தான். தேனுக்காக வண்டுகள் மொய்க்கும் பலவகைப் பூக்களாலான மாலை அணிந்திருந்தான். ‘வலிமிகு தடக்கை’ என்பது புயம். புயத்தில் தொடி அணிந்திருந்தான். அது பொன்னால் செய்யப்பட்டது. அந்தப் புய-வளையலுக்கு விளக்கின் உருவம் முகப்புத் தோற்றமாகச் செய்யப்பட்டிருந்தது. அந்த விளக்கு-முகத்தில் பதிக்கப்பட்ட கல் சுடரொளி வீசியது. ‘கலிங்கம்’ என்பது தைக்கப்பட்ட ஆடை. அவன் அணிந்திருந்த கலிங்கம் சோற்றுக் கஞ்சி போடப்பட்டு நீரைப்போல் அலையலையாக மடிப்பு செய்யப்பபட்டிருந்தது. இவற்றை அணிந்திருக்கும் அவன் முருகன்போல் காணப்பட்டான். வல்லவன் செய்த முருகன் சிலை ஒப்பனை செய்யப்பட்டது போல் காணப்பட்டான்.

வீரர்கள் மன்னனை வாழ்த்துதல் (725-727)
வருபுனற் கற்சிறை கடுப்ப விடையறுத்து . . . .[725]
ஒன்னா ரோட்டிய செருப்புகல் மறவர்
வாள்வளம் புணர்ந்தநின் தாள்வலம் வாழ்த்த . . . .[725 - 727]

பொருளுரை:

மறவர் என்போர் படைவீரர். செழியனின் படைவீரர்களுக்குப் போர் என்றால் கொள்ளை ஆசை. பகைவர் தாக்கும்போது அவர்கள் ஆற்றில் வரும் வெள்ளத்தைக் கல்லடுக்கிக் கட்டப்பட்ட கலிங்கு அணை தடுத்து நிறுத்துவது போலத் தடுத்துத் திரும்பி ஓடும்படி செய்தவர்கள். ‘வாள்வலம்’ என்பது வாளால் போர்புரியும் திறமை. ‘தாள்வலம்’ என்பது ஊக்கத்துடன் செயலாற்றும் திறமை. இரண்டும் கொண்ட இத்தகைய மறவர் செழியனின் வாள்வலத்தையும் தாள்வலத்தையும் வாழ்த்தினர்.

சிறந்த வீரர் முதலியோரைக் கொணர மன்னன் பணித்தல் (728-747)
வில்லைக் கவைஇக் கணைதாங்கு மார்பின்
மாதாங் கெறுழ்த்தோள் மறவர்த் தம்மின்
கல்லிடித் தியற்றிய இட்டுவாய்க் கிடங்கின் . . . .[730]

நல்லெயி லுழந்த செல்வர்த் தம்மின்
கொல்லேற்றுப் பைந்தோல் சீவாது போர்த்த
மாக்கண் முரசம் ஓவில கறங்க
எரிநிமிர்ந் தன்ன தானை நாப்பண்
பெருநல் யானை போர்க்களத் தொழிய . . . .[735]

விழுமிய வீழ்ந்த குரிசிலர்த் தம்மின்
புரையோர்க்குத் தொடுத்த பொலம்பூந் தும்பை
நீர்யார் என்னாது முறைகருதுபு சூட்டிக்
காழ்மண் டெஃகமொடு கணையலைக் கலங்கிப்
பிரிபிணை யரிந்த நிறஞ்சிதை கவயத்து . . . .[740]

வானத் தன்ன வளநகர் பொற்ப
நோன்குறட் டன்ன ஊன்சாய் மார்பின்
உயர்ந்த உதவி ஊக்கலர்த் தம்மின்
நிவந்த யானைக் கணநிரை கவர்ந்த
புலர்ந்த சாந்தின் விரவுப்பூந் தெரியற் . . . .[745]

பெருற்செய் ஆடவர்த் தம்மின் பிறரும்
யாவரும் வருக ஏனோருந் தம்மென . . . .[728 - 747]

பொருளுரை:

அம்பு ஏந்திய மார்பினர்- கோட்டை வெற்றியில் புண் பட்ட செல்வர் தன் யானை வீழ்ந்த பின்னரும் தாக்கி வென்ற குரிசிலர் பேருதவி புரிந்த ஊக்கத்தார் யானை கவர்ந்துவந்த பெருஞ்செய் ஆடவர் மற்றும் பிறர் ஆகியோருக்கெல்லாம் அவைக்கு வந்ததும் முதல் பணியாக விருது வழங்கிச் சிறப்பு செய்தான். யாவரும் வருக. அழைக்கப்படாத ஏனோரும் வருக. யான் அழைக்காவிட்டாலும் தாமே வருக. - என்று வரவேற்றுச் சிறப்புச் செய்தான். மறவர்- பகைவரின் வில்லைக் கவர்ந்து, அவர்கள் முன்பு எய்த அம்புகளை மார்பிலே தாங்கி ‘மா’ என்னும் வெற்றித் திருமகளைத் தோளிலே சுமந்துகொண்டிருப்பவர்கள். எயில் உழந்த செல்வர் ‘இட்டுவாய்’ என்பது கிட்டம் ஆகும்படி சுட்ட செங்கல். அகழியானது, மேட்டு நிலத்தில் கல்லை உடைத்தும், பள்ள நிலங்களில் கிட்டமாக்கிய செங்கலை இட்டும் அமைக்கப் பட்டிருந்தது. அகழியை அடுத்து மதில். அகழியைத் தாண்டி மதிலில் ஏறும்போது துன்புற்ற வீரர் செல்வர். போர்முரசு - ‘கொல் ஏறு’ என்றது சிங்கத்தை. சிங்கத்தின் தோலை உரித்துச் சீவிப் பதப்படுத்தாமல் அப்படியே போர்த்திச் செய்யப்பட்டது. விழுமிய வீழ்ந்த குரிசிலர் - போர்முரசு முழங்கும்போது, பகைவரின் படைக்கு நடுவில் சென்று போரிடுகையில் தான் ஏறிவந்த யானை போரில் சாய்ந்தபோதும் அஞ்சாமல் போராடி விழுமிய வெற்றியைத் தேடித் தந்த அரச பரம்பரையைச் சேர்ந்த குரிசிலர். பொலம்பூந் தும்பை - பிறரது நாட்டை வெல்லச் செல்வோர் தும்பைப் பூ மாலையைத் தலையில் சூடிக்கொண்டு செல்வர். வெற்றிக்குப் பின் அரசன் அவர்களுக்குப் பொன்னால் செய்த தும்பைப்பூவை அணிவிப்பான். முறை கருதுபு சூட்டி - பொற்பூ அணிவிக்கும்போது விருது பெறுவோர் யார் என்று பார்க்காமல் போர்ச்சாதனையைத் தரவரிசை செய்து விருது வழங்குவான். உயர்ந்த உதவி ஊக்கலர் - இந்த உயர்ந்த பணியைச் செய்க என்று பிறருக்கு ஊக்கம் தந்துகொண்டு இருக்காமல், தாமே அதனை உதவியாகக் கருதிச் செய்து முடிப்பவர். நிறம் சிதை கவயம் - (ய=ச போலி) கவசத்தைத் துளைத்து நெஞ்சைச் சிதைத்த காயம். கணையலை - அலைபோல் வந்துகொண்டே இருக்கும் அம்பு அலை. காழ்மண்டு எஃகம் - ஆணி போடப்பட்ட கேடயம். பிரிபிணை அரிந்த நிறம் - பிரிந்து பிணைந்திருக்கும் எலும்புகள் அரிந்து காயம் பட்ட மார்பு. வளநகர் - வானம்போல் பரந்துகிடக்கும் அரண்மனை. இதனைப் பொலியச் செய்தவர் மார்பில் போர்த்தழும்பு பட்ட மறவர். ஊன்சாய் மார்பு - மார்புக் கூடு வலிமை மிக்க குறடு போல் கோக்கப்பட்டது. இதில் காயம் பட்டு ஊன்தசை தொங்கும் மார்பு. பெருஞ்செய் ஆடவர் - செய் என்றால் வயல். பெருஞ்செய் என்றால் போர்க்களம். போர்க்களத்து ஆடவர் படைவீரர்கள். இவர்கள் ஓங்கி உயர்ந்த யானைக் கணத்தைப் போர்க்களத்திலிருந்து கவர்ந்து வந்தவர்கள். சந்தனம் பூசிய மார்பில் பூமாலை அணிந்தவர்கள்.

மன்னனது பெருங் கொடை (748-752)
வரையா வாயிற் செறாஅ திருந்து
பாணர் வருக பாட்டியர் வருக
யாணர்ப் புலவரொடு வயிரியர் வருகென . . . .[750]

இருங்கிளை புரக்கும் இரவலர்க் கெல்லாம்
கொடுஞ்சி நெடுந்தேர் களிற்றொடும் வீசிக்

பொருளுரை:

நெடுஞ்செழியன் அரண்மனையானது உள்ளே நுழையத் தடை செய்யப்படாத வாயிலைக் கொண்டது. எத்தனைப் பேர் வந்தாலும் யார் வந்தாலும் சினம் என்பதே இல்லாமல் இருந்துகொண்டு செழியன் கொடை வழங்கினான். பண்ணிசைத்துப் பாடும் பாணர் வருக பண்ணிசைத்துப் பாடும் பாட்டியர் வருக புதுப்புது பாடல் பாடும் புலவர் வருக ஊது கருவியால் இசை பாடும் வயிரியர் வருக எனக் கூவி அழைத்து வழங்கினான். அவர்தம் சுற்றத்தாரையெல்லாம் பேணும் அளவுக்கு வழங்கினான். வழங்கிய பொருள்களைக் கொண்டுசெல்லத் தேரும் யானையும் வழங்கினான். வழங்கும் பொருள்களின் மதிப்பை எண்ணிப் பார்க்காமல் வீசுவதுபோல் வாங்குவோரை மதித்து வழங்கினான்.

மன்னனை வாழ்த்துதல் (753-782)
களந் தோறும் கள் ளரிப்ப
மரந் தோறு மை வீழ்ப்ப
நிண வூன்சுட் டுருக் கமைய . . . .[755]

நெய் கனிந்து வறை யார்ப்பக்
குரூஉக் குய்ப்புகை மழை மங்குலிற்
பரந்து தோன்றா விய னகராற்

பொருளுரை:

பாராட்டு, விருது, பரிசு - இவையெல்லாம் அரண்மனையில் வழங்கப்பட்டன. பரிசு பசியாற்றுமா? இதோ! மதுரை நகரத்துக்குள் ஆங்காங்கே உணவு விருந்து. களம் கண்ட இடங்களிலெல்லாம் கள் விருந்து. மரம் கண்ட இடங்களிலெல்லாம் மை என்னும் வெள்ளாட்டுக் கடாக்கறி சமைத்த விருந்து. பாறை கண்ட இடங்களிலெல்லாம் நெய் வழிய வழியச் சுட்டுத் தரும் நிணவூன் விருந்து. கட்டிய வீடு இருக்கும் இடங்களிலெல்லாம் மழை மேகம் போலப் புகை எழும்பச் சமைத்துத் தரும் உணவு விருந்து. இப்படித்தான் மதுரை நகரம் விளங்கியது.

பல் சாலை முது குடுமியின்
நல் வேள்வித் துறை போகிய . . . .[760]

தொல் லாணை நல் லாசிரியர்
புணர்கூட் டுண்ட புகழ்சால் சிறப்பின்
நிலந்தரு திருவி னெடியோன் போல
வியப்புஞ் சால்புஞ் செம்மை சான்றோர்
பலர்வாய்ப் புகரறு சிறப்பிற் றோன்றி . . . .[765]

பொருளுரை:

இவர்களை ஒன்றுதிரட்டித் தமிழாய்ந்து, தமிழ் வளர நல்வேள்வி செய்தவன் நிலந்தரு திருவின் நெடியோன். தமிழ் வளர்க்கும் நல்வேள்விக்கு இவன் நிலக்கொடை வழங்கினான். இந்த நிலக்கொடையால் இவன் ‘நிலந்தரு திருவின் நெடியோன்’ என்று சிறப்பிக்கப்பட்டான். இந்தத் தமிழ்க்கொடை வியக்கத் தக்க பெருமை கொண்டது. சான்றாண்மை மிக்கது. செம்மையானது. பலர் வாயாலும் புகழப்படுவது. புகர் என்னும் குற்றம் கரும்புள்ளிக் குற்றம் இல்லாத்து. நிலந்தரு திருவின் நெடியோன் போல நீ (நெடுஞ்செழியன்) நல்வேள்வி செய்து சிறப்புடன் திகழ வேண்டும் இது மாங்குடி மருதனாரின் வாழ்த்து

அரிய தந்து குடி யகற்றிப்
பெரிய கற் றிசை விளக்கி
முந்நீர் நாப்பண் ஞாயிறு போலவும்
பன்மீன் நடுவண் திங்கள் போலவும்
பூத்த சுற்றமொடு பொலிந்தினிது விளங்கிப் . . . .[770]

பொருளுரை:

இதுவும் மாங்குடி மருதனாரின் வாழ்த்து தருபவை அரிய பொருள்களாக இருக்க வேண்டும் குடிமக்களின் வளத்தை விரிவு படுத்துவதாக இருக்க வேண்டும் அரிய பெரிய செய்திகளைக் கற்றுக்கொள்ள வேண்டும் புகழ் ஒளி உன்மீது வீச வேண்டும் கடலில் தோன்றும் ஞாயிறு போல் இளவெயில் வீசவேண்டும் பல மீன்களிடையே விளங்கும் திங்கள் போல் தண்ணொளி தரவேண்டும் நீ திங்கள் போலவும் உன் சுற்றம் விண்மீன்கள் போலவும் திகழ வேண்டும்.

பொய்யா நல்லிசை நிறுத்த புனைதார்ப்
பெரும்பெயர் மாறன் தலைவ னாகக்
கடந்தடு வாய்வாள் இளம்பல் கோசர்
இயனெறி மரபினின் வாய்மொழி கேட்பப்

பொருளுரை:

நெடுஞ்செழியனின் படைத்தலைவன் மாறன். இவனை மாங்குடி மருதனார் ‘பெரும்பெயர்’ பெற்றவன் என்று குறிப்பிடுகிறார். பொதுவாக மார்பில் மாலையுடன் தோற்றமளிக்கும் இவன் நெடுஞ்செழியனுக்கு, முன்பே இருந்த புகழை நிலைநாட்டியவன். இந்த மாறன் நெடுஞ்செழியனின் படைத்தலைவன். இவன் தலைமையில் கோசர் படை ஒடுக்கப்பட்டது. ஒடுக்கப்பட்ட கோசர் நெடுஞ்செழியன் சொன்னபடியெல்லாம் நடந்துகொண்டனர். ‘இளம்பல் கோசர்’ என்று பெயர் பெற்றிருந்த இவர்கள் நெடுஞ்செழியனின் வாய்மொழிக்கிணங்க நடந்துகொண்டதால் ‘வாய்மொழிக் கோசர்’ என்றும் சிறப்பிக்கப்படலாயினர்.

பொலம்பூண் ஐவர் உட்படப் புகழ்ந்த . . . .[775]

மறமிகு சிறப்பிற் குறுநில மன்ன
ரவரும் பிறகும் துவன்றிப்
பொற்புவிளங்கு புகழவை நிற்புகழ்ந் தேத்த

பொருளுரை:

ஐவரும், குறுநில மன்னரும் கூடியிருந்து பாண்டியன் நெடுஞ்செழியனைப் புகழ்ந்து வாழ்த்தினர். பொலம்பூண் ஐவர் - விளக்கம் செழியன், கூடற்கோமான், தென்னவன், வேம்பின் தாரோன், வழுதி, குமரிச் சேர்ப்பன், வைகையந் துறைவன், மாறன், பொதிய வெற்பன், மீனவன், கைதவன், பஞ்சவன், கௌரியன் - என்பன பாண்டியனைக் குறிக்கும் என்று சூடாமணி நிகண்டு குறிப்பிடுகிறது. இவற்றில் பஞ்சவன் என்பது நெடுஞ்செழியனைப் புகழ்ந்த பொலம்பூண் ஐவரோடு தொடர்புடையது. ஐவர் என்னும் சொல் சங்கப் பாடல்களில் பஞ்ச பாண்டவரைக் குறிப்பதாகவே பெரிதும் பயன்படுத்தப் பட்டுள்ளது. இதில் ஒரு விந்தை என்னவென்றால் பஞ்சவரைத் துன்புறுத்திய கௌரியர் பெயரும் பாண்டியனைக் குறிப்பதாகவே அமைந்திருப்பதுதான். பாண்டியனோடும், முருகனோடும், திருமாலோடும் தொடர்பு படுத்திக் காட்டப்பட்டுள்ள ‘ஐவர்’ என்னும் சொல் பஞ்ச பாண்டவரைக் குறிக்கவில்லை. ‘பொலம்பூண் ஐவர்’ என்று மதுரைக்காஞ்சியில் வரும் தொடரிலுள்ள ‘பொலம்பூண்’ என்னும் அடைமொழியைத் தொகுத்துப் பார்க்கும்போது தெரியவரும் செய்திகளையும் எண்ணிப்பார்க்க வேண்டியுள்ளது. எழினி, சென்னி, திரையன், நன்னன், எவ்வி, வளவன், முருகன், திருமால் - ஆகியோர் ‘பொலம்பூண்’ என்னும் அடைமொழியுடன் சங்கப் பாடல்களில் குறிப்பிடப்படுகின்றனர். மேலும் பொலம்பூண் மன்னர் பலர் என்று குறிப்பிடும் பாடலும் உள்ளது. இவற்றில் கடவுளர் பெயரையும், சோழரைக் குறிக்கும் இரண்டு பெயர்களில் ஒன்றையும் ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், 1. தகடூர் அதியமான் மகன் எழினி, 2. பாழி அரசன் நன்னன், 3. காஞ்சி அரசன் திரையன், 4, நாகை அரசன் எவ்வி, 5, சோழர்களில் ஒருவன் -ஆகியோர் பாண்டியனைப் புகழ்ந்த ஐவர் என்று தெரியவரும்.

இலங்கிழை மகளிர் பொலங்கலத் தேந்திய
மணங்கமழ் தேறல் மடுப்ப நாளும் . . . .[780]

மகிழ்ந்தினி துறைமதி பெரும்
வரைந்துநீ பெற்ற நல்லூ ழியையே. . . .[753 - 782]

பொருளுரை:

மகளிர் பொற்கிண்ணத்தில் தரும் தேறலை உண்டுகொண்டு நீ உன் வாழ்நாள் முழுவதும் மகிழ்வுடன் வாழவேண்டும் மணமகளிருடன் வாழ்க வென்ற புகழையும் வழங்கிய புகழையும் சொல்லிச் சொல்லி வாழ்த்திய புலவர் இங்கு மனைவி மக்களுடன் மகிழ்ந்து வாழ்க என்று வாழ்த்துகிறார். தேறல் என்பது தெம்பு தரும் கள். மயக்கம் தரும் கள் வேறு. மகளிர் தேறல் ஊட்ட மகிழ்ந்து இனிது அருந்துக. மணம் கமழ் தேறல் அருந்துக. பொன் கிண்ணத்தில் ஊட்ட அருந்துக. அணி விளங்கும் அழகியர் ஊட்ட அருந்துக. உன் வாழ்நாள் வரையறுக்கப்பட்டது. அந்த வாழ்நாள் முழுவதும் மகிழ்வோடு இனிது வாழ்க.

மதுரைக்காஞ்சி முற்றிற்று
தனிப் பாடல்
பைங் கண் இளம் பகட்டின் மேலானை, பால் மதி போல்
திங்கள் நெடுங் குடையின் கீழானை, - அங்கு இரந்து
நாம் வேண்ட, நல் நெஞ்சே! நாடுதி போய், நானிலத்தோர்
தாம் வேண்டும் கூடல் தமிழ் . . . .[1]

பொருளுரை:

உலகம் கூடல் நகரில் வளரும் தமிழை வேண்டும் வேண்டும் என்று விரும்புகிறது. நெஞ்சே! அங்கே போய் அங்கிருக்கும் பாண்டியனை இரந்து உனக்கு வேண்டியதைப் பெற்றுக்கொள்ள நீ விரும்பு. பசுமை தவழும் கண்ணினை உடைய இளம் பகட்டின் மேல் இருப்பவன் மதுரையிலுள்ள சொக்கன். நெடுஞ்செழியன் பகட்டின் மேலான். சொக்கன் தலையில் திங்கள். பாண்டியன் திங்கள் குலம். அவன் குடை திங்கள் போல் குளுமை தருவது. நெஞ்சே! அங்கிருந்து அவனை வேண்டலாம் செல்க.

சொல் என்னும் பூம் போது தோற்றி, பொருள் என்னும்
நல் இருந் தீம் தாது நாறுதலால், - மல்லிகையின்
வண்டு ஆர் கமழ் தாமம் அன்றேமலையாத
தண் தாரான் கூடல் தமிழ்? . . . .[2]

பொருளுரை:

மல்லிகையில் பூம்போது தோன்றும். தாதும் தேனும் மணக்கும். பாண்டியன் நெடுஞ்செழியன் மார்பில் மாலையாகும். கூடல் நகரில் தமிழ்ச்சொல் பாவாகப் பூக்கும். அந்தப் பாப்பூவில் கருத்துப்பொருள் என்னும் தாதுத்தேன் மணக்கும். அப் பூமாலையாகிய சங்கப் பாடல்களின் தமிழ் பாண்டி நாட்டுக்கும் உலகுக்கும் மாலைபோல் அமையும்.