பட்டினப்பாலை

பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

நெடுநல்வாடை

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

மதுரைக்காஞ்சி

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

மலைபடுகடாம்

சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.

திருமுருகாற்றுப்படை

பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்

பொருநராற்றுப்படை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

சிறுபாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

பெரும்பாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

முல்லைப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

குறிஞ்சிப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

பட்டினப்பாலை


விழா இன்றிக் கிடந்த பொது மன்றம்

பாடல் வரிகள்:- 252 - 260

அரு விலை நறும் பூத் தூஉய்த் தெருவின்,
முதுவாய்க் கோடியர் முழவொடு புணர்ந்த
திரி புரி நரம்பின் தீந்தொடை ஓர்க்கும்
பெரு விழாக் கழிந்த பேஎம்முதிர் மன்றத்துச் . . . .[255]

சிறு பூ நெருஞ்சியோடு அறுகை பம்பி,
அழல்வாய் ஓரி அஞ்சு வரக் கதிப்பவும்,
அழு குரல் கூகையோடு ஆண்டலை விளப்பவும்,
கணங்கொள் கூளியொடு கதுப்பு இகுத்து அசைஇப்
பிணம் தின் யாக்கைப் பேய் மகள் துவன்றவும் . . . .[252-260]

பொருளுரை:

அரிய விலையுடைய நறுமணமான மலர்களைத் தூவிய தெருவில் அறிவு வாய்ந்த கூத்தர்களின் முழவோடு இணைந்த முறுக்கப்பட்ட நரம்பை இனிமையாகக் கட்டிய யாழின் இசையைக் கேட்கும் பெரிய விழாக்கள் இல்லாது ஆகிய அச்சம் முதிர்ந்த மன்றத்தில், சிறிய மலர்களையுடைய நெருஞ்சிச் செடிகளுடன் அறுகம்புல் பரவியுள்ளது. கொடிய வாயையுடைய நரிகள் அச்சம் தோன்றும்படி ஊளையிடவும், குரலையுடைய கூகையுடன் ஆண்டலை என்ற ஆந்தையுடன் கூப்பிடவும், கூட்டமாக உள்ள ஆண் பேய்களுடன் கூந்தலை தொங்கவிட்டு ஆடும் பிணத்தை உண்ணும் யாக்கையை உடைய பெண் பேய்கள் நெருங்கவும்,

சொற்பொருள்:

அரு விலை நறும் பூ தூஉய் - அரிய விலையுடைய நறுமணமான மலர்களைத் தூவி, தெருவின் - தெருவில், முதுவாய் கோடியர் - அறிவு வாய்ந்த கூத்தர்கள், முழவொடு புணர்ந்த - முழவோடு இணைந்த, திரிபுரி நரம்பின் தீந்தொடை - முறுக்கப்பட்ட நரம்பை இனிமையாக கட்டிய யாழின் இசை, ஓர்க்கும் - கேட்கும், பெரு விழா - பெரிய விழா, கழிந்த - இல்லாது ஆகிய, பேஎம்முதிர் மன்றத்து - அச்சம் முதிர்ந்த மன்றத்தில், சிறு பூ நெருஞ்சியோடு - சிறிய மலர்களையுடைய நெருஞ்சிச் செடிகளுடன், அறுகை பம்பி - அறுகம்புல் பரவியுள்ளது, அழல்வாய் ஓரி - கொடிய வாயையுடைய நரிகள், அஞ்சுவர கதிர்ப்பவும் - அச்சம் தோன்றும்படி ஊளையிடவும், அழு குரல் கூகையோடு - அழுகின்ற குரலையுடைய கூகையுடன், ஆண்டலை விளிப்பவும் - ஆண்டலை என்ற ஆந்தை கூப்பிடவும், கணம் கொள் கூளியொடு - கூட்டமாக உள்ள ஆண் பேய்களுடன், கதுப்பு இகுத்து அசைஇ - கூந்தலை தொங்கவிட்டு ஆடி, பிணம் தின் யாக்கை பேய் மகள் - பிணத்தை உண்ணும் யாக்கையை உடைய பெண் பேய்கள், துவன்றவும் - நெருங்கவும்

குறிப்பு:

பதிற்றுப்பத்து 25 - நீ உடன்றோர் மன் எயில் தோட்டி வையா கடுங்கால் ஒற்றலின் சுடர் சிறந்து உருத்துப் பசும் பிசிர் ஒள் அழல் ஆடிய மருங்கின் ஆண்டலை வழங்கும் *கான் உணங்கு கடு நெறி* முனை அகன் பெரும் பாழ் ஆக, அழல்வாய் ஓரி (257) - பொ. வே. சோமசுந்தரனார் உரை - கூவிளியுடைய (அழுகின்ற) நரிகள், வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரி உரை - கொடிய வாய்களையுடைய நரிகள். ஆண்டலை (258) - பொ. வே. சோமசுந்தரனார் உரை - கோட்டான், ஆந்தை என மருவி வழங்குவதுமது, நச்சினார்க்கினியர் - ஆண்டலைப்புள், அசைஇ (259) - பொ. வே. சோமசுந்தரனார் உரை - ஆடி, வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரி உரை - இருந்து.