நெடுநல்வாடை

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

மதுரைக்காஞ்சி

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

மலைபடுகடாம்

சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.

திருமுருகாற்றுப்படை

பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்

பொருநராற்றுப்படை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

சிறுபாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

பெரும்பாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

முல்லைப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

குறிஞ்சிப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

பட்டினப்பாலை

பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

நெடுநல்வாடை


அரசனின் நிலை

பாடல் வரிகள்:- 168 - 188

..................................... மின் அவிர்
ஓடையொடு பொலிந்த வினை நவில் யானை
நீள் திரள் தடக்கை நில மிசைப் புரள, . . . .[170]

களிறு களம் படுத்த பெருஞ்செய் ஆடவர்
ஒளிறு வாள் விழுப்புண் காணிய, புறம் போந்து,
வடந்தைத் தண் வளி எறிதொறும் நுடங்கித்
தெற்கு ஏர்பு இறைஞ்சிய தலைய நன் பல
பாண்டில் விளக்கில் பரூஉச்சுடர் அழல, . . . .[175]

வேம்பு தலை யாத்த நோன் காழ் எஃகமொடு
முன்னோன் முறை முறை காட்டப் பின்னர்

பொருளுரை:

ஒளியுடைய முக ஆபரணங்களுடன் பொலிந்த, போர்த்தொழிலைக் கற்ற யானைகளின் நீண்ட திரண்ட பெரிய தும்பிக்கைகள் நிலத்தின் மேல் விழும்படி ஆண் யானைகளைக் கொன்று, பெரிய மறச்செயலை செய்த மறவர்களின் ஒளியுடைய வாளினால் ஏற்பட்ட புண்ணைக் காண வெளியே வந்தான் மன்னன். குளிர்ந்த வாடைக் காற்று வீசும்பொழுதெல்லாம் அசைந்து தெற்கில் உயர்ந்து சாய்ந்து பருத்த சுடருடன் எரியும் நல்ல பல வட்ட விளக்குகள் எரிந்தன. வேப்ப இலைகளை மேலே கட்டிய வலிமையான காம்பையுடைய வேலொடு மன்னனுக்கு முன் நடக்கும் படைத் தலைவன், முறையாக மன்னனுக்கு பாசறையில் உள்ளவற்றைக் காட்ட, அதன் பின்,

குறிப்பு:

பாண்டில் விளக்கில் (175) - நச்சினார்க்கினியர் உரை - பல் கால் விளக்கில். புறநானூறு 19 - யானைத் தூம் புஉடைத் தடக்கை வாயொடு துமிந்து நாஞ்சில் ஒப்ப நில மிசைப் புரள.

சொற்பொருள்:

மின் அவிர் ஒடையொடு - ஒளியுடைய முக ஆபரணங்களுடன், பொலிந்த - பொலிவு பெற்ற, வினை நவில் யானை - போர்த்தொழிலைக் கற்ற யானை, நீள் திரள் தடக்கை - நீண்ட திரண்ட பெரிய தும்பிக்கை, நில மிசைப் புரள - நிலத்தின் மேல் விழ, களிறு களம் படுத்த - ஆண் யானைகளைக் கொன்ற, பெருஞ்செயல் ஆடவர் - பெரிய மறச்செயலைச் செய்த மறவர்கள், ஒளிறு வாள் - ஒளியுடைய வாள், விழுப் புண் காணிய - காயத்தால் ஏற்பட்ட புண்ணைக் காண, புறத்தே போந்து - வெளியே வந்து, வடந்தைத் தண் வளி - குளிர்ந்த வாடைக் காற்று, எறிதொறும் நுடங்கி - வீசும்பொழுதெல்லாம், தெற்கு ஏர்பு - தெற்கில் உயர்ந்து, இறைஞ்சிய - குனிந்த, தலைய - மேல் பகுதியுடன், நன் பல - நல்ல பல, பாண்டில் விளக்கில் - வட்ட விளக்குகளில், பரூஉச்சுடர் அழல - பருத்த சுடர் எரிய (பரூஉ - இன்னிசை அளபெடை), வேம்பு தலை யாத்த - வேப்ப இலைகளை மேலே கட்டிய, நோன் காழ் - வலிமையான காம்பு, எஃகமொடு - வேலொடு, முன்னோன் - மன்னனுக்கு முன் நடக்கும் படைத் தலைவன், முறை முறை காட்ட - முறையாகக் காட்ட, பின்னர் - அதன் பின்

மணி புறத்து இட்ட மாத்தாள் பிடியொடு
பருமம் களையாப் பாய் பரிக் கலி மா
இருஞ்சேற்றுத் தெருவின் எறி துளி விதிர்ப்ப, . . . .[180]

புடை வீழ் அம் துகில் இடவயின் தழீஇ
வாள் தோள் கோத்த வன் கண் காளை
சுவல் மிசை அமைத்த கையன், முகன் அமர்ந்து,
நூல் கால் யாத்த மாலை வெண் குடை
தவ்வென்று அசைஇ தா துளி மறைப்ப, . . . .[185]

நள்ளென் யாமத்தும் பள்ளி கொள்ளான்,
சிலரொடு திரிதரும் வேந்தன்,
பலரொடு முரணிய பாசறைத் தொழிலே, . . . .[177 - 188]

பொருளுரை:

மணிகளைத் தம் மேலே கொண்ட பெரிய கால்களையுடைய பெண் யானைகளோடு இருந்த, பக்கரை களையப்படாத பாயும் செருக்கான குதிரைகள், கரிய சேற்றினையுடைய தெருவில், தங்கள் மேல் விழும் நீர்த்துளிகளை உடம்பை சிலிர்த்துச் சிதற்றின. தோளிலிருந்து வழுக்கி விழுந்த அழகிய ஆடையை இடதுபுறமாகத் தழுவி, வாளைத் தோளில் தொங்கவிட்ட வலிமையான இளைஞனின் தோள் மேல் கையை வைத்திருந்தான் மன்னன். தன்னுடைய மறவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுமாறு முகம் பொருந்தி இருந்தான் அவன். நூலால் தொடுத்த முத்துச் சரங்களையுடைய மன்னனின் குடை ஒலியுடன் அசைந்து மழைத் துளிகளை அவன் மேல் விழாதவாறு மறைத்தது. மிகுந்த இருட்டான நடு இரவிலும் அவன் தூங்கவில்லை. சில மறவர்களுடன் திரிகின்றான், பலரோடு மாறுபட்டுப் போர்த்தொழில் செய்யும் பாண்டிய மன்னன்.

சொற்பொருள்:

மணிப் புறத்து இட்ட - மணிகளை இட்ட, மாத்தாட் பிடியொடு - பெரிய கால்களையுடைய பெண் யானைகளோடு, பருமம் களையா - பக்கரை களையப்படாத, பாய் பரிக் கலிமா - பாயும் செருக்கான குதிரைகள், இருஞ்சேற்று தெருவின் - கரிய சேற்றினையுடைய தெருவில், எறி துளி விதிர்ப்ப - மேல் விழும் நீர்த்துளிகளை உடம்பை சிலிர்த்துச் சிதற, புடை வீழ் அம் துகில் - தோளிலிருந்து விழுந்த அழகிய ஆடை, இடவயின் தழீஇ - இடதுபுறமாகத் தழுவி (தழீஇ - சொல்லிசை அளபெடை), வாள் தோள் கோத்த - வாளைத் தோளில் கோத்த, வன்கண் காளை - வலிமையான இளைஞன், சுவல் மிசை - தோள் மேல், அமைத்த கையன் - கையை வைத்தவன், முகன் அமர்ந்து - முகம் பொருந்தி (முகன் - முகம் என்பதன் போலி), நூல் கால் யாத்த மாலை - நூலால் கட்டிய மாலை, வெண்குடை - வெள்ளைக் குடை, முத்துக்குடை, தவ்வென்று அசைஇ - ஒலியுடன் அசைந்து (அசைஇ - சொல்லிசை அளபெடை), தா துளி மறைப்ப - மழைத் துளிகளை மறைக்க, நள்ளென் யாமத்தும் - மிகுந்த இருட்டான நடு இரவிலும், பள்ளி கொள்ளான் - அவன் தூங்கவில்லை, சிலரொடு - சில மறவர்களுடன், திரிதரும் வேந்தன் - திரியும் மன்னன், பலரோடு முரணிய - பலரோடு மாறுபட்ட (தலையாலங்கானத்துப் போரில் பாண்டியன் சேர சோழ மன்னர்களையும் ஐந்து வேளிர்களையும் தோற்கடித்தான்), பாசறைத் தொழிலே - போர்த்தொழில்