நெடுநல்வாடை

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

மதுரைக்காஞ்சி

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

மலைபடுகடாம்

சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.

திருமுருகாற்றுப்படை

பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்

பொருநராற்றுப்படை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

சிறுபாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

பெரும்பாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

முல்லைப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

குறிஞ்சிப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

பட்டினப்பாலை

பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

நெடுநல்வாடை


தேறாத் தலைவி

பாடல் வரிகள்:- 156 - 166

................... ஒல்லாள், மிகக் கலுழ்ந்து,
நுண் சேறு வழித்த நோன் நிலைத் திரள் கால்
ஊறா வறு முலை கொளீஇய கால் திருத்திப்
புதுவது இயன்ற மெழுகு செய் படமிசைத்
திண் நிலை மருப்பின் ஆடு தலையாக, . . . .[160]

விண் ஊர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலத்து
முரண் மிகு சிறப்பின் செல்வனொடு நிலைஇய
உரோகிணி நினைவனள் நோக்கி, நெடிது உயிரா,
மா இதழ் ஏந்திய மலிந்து வீழ் அரிப்பனி
செவ்விரல் கடைக்கண் சேர்த்திச் சில தெறியாப் . . . .[165]

புலம்பொடு வதியும்.................. . . . .[156 - 166]

பொருளுரை:

அவள் ஆறுதல் அடையவில்லை. மிகவும் அழுதாள். அவள் அமர்ந்திருந்த கட்டிலில் நுண்ணிய சாதிலிங்கம் தடவப்பட்டு அதன் வலிமையான திரண்ட கால்களில் குடத்தைப் போன்ற பகுதிகள் பொருத்தப்பட்டிருந்தன. புதிதாக இயற்றிய, மெழுகு தேய்த்த மேல் பகுதியில் வலிமையான கொம்புடன் மேட ராசி (ஆடு) முதலாக விண்ணில் ஊர்ந்து திரியும் ஓவியம் இருந்தது. கதிரவனிடமிருந்து மாறுபாடு மிகுந்த சிறப்புடைய நிலவோடு நிலையாக நின்ற உரோகிணியை நினைத்து, உரோகிணியைப் போல் பிரிவின்றித் தான் இல்லையே என்று வருந்தினாள். பெருமூச்சு விட்டாள். கருமையான இதழ்கள் கொண்ட அவளுடைய கண்களிலிருந்து மிகுந்த மென்மையான கண்ணீர்த் துளிகள் விழுந்தன. தன்னுடைய சிவந்த விரல்களைக் கடைக் கண்ணிடத்தில் சேர்த்து கண்ணீர்த் துளிகளைத் தெறித்தாள். தனிமையில் வசிக்கும்,

குறிப்பு:

ஊறா வறுமுலை (158) - நச்சினார்க்கினியர் உரை - குடத்திற்கு வெளிப்படை, முலைபோறலின் முலை என்றார், பொ. வே. சோமசுந்தரனார் உரை - பால் ஊறாத என்பது குடத்தைக் குறிக்கின்றது, குடத்திற்கு வெளிப்படை, குடம் போறலின் முலை என்றார். உயிரா - உயிர்த்து என்பது பொருள். செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது. தெறியா - தெறித்து என்பது பொருள். செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.

சொற்பொருள்:

ஒல்லாள் - அவள் ஆறுதல் அடையவில்லை, மிகக் கலுழ்ந்து - மிகவும் அழுது, நுண் சேறு வழித்த - நுண்ணிய சாதிலிங்கத்தைத் தடவி, நோன் நிலை திரள் கால் - வலிமையான திரண்ட கால்கள், ஊறா வறுமுலை - குடத்தைப் போன்ற (பொ. வே. சோமசுந்தரனார் உரை - பால் ஊறாத என்பது குடத்தைக் குறிக்கின்றது, குடத்திற்கு வெளிப்படை, குடம் போறலின் முலை என்றார்), கொளீஇய கால் திருத்தி - கால்களுடன் பொருத்தி (கொளீஇய - சொல்லிசை அளபெடை), புதுவது இயன்ற - புதிதாக இயற்றிய, மெழுகு செய் - மெழுகு தேய்த்த, படமிசை - மேலே, திண் நிலை மருப்பின் - வலிமையான கொம்புடன், ஆடு - ஆடு, தலையாக - முதலாக, விண் ஊர்பு - விண்ணில் ஊரும், திரி தரும் - திரியும், வீங்கு செலல் - மேலே செல்லுதல், மண்டிலத்து - கதிரவனின், முரண் மிகு - மாறுபாடு மிகுந்த, சிறப்பின் - சிறப்புடைய, செல்வனொடு - நிலவோடு, நிலைஇய - நிலையாக நின்ற (நிலைஇய - சொல்லிசை அளபெடை), உரோகிணி நினைவனள் - உரோகிணியை நினைத்து, நோக்கி - நோக்கி, நெடிது உயிரா - பெருமூச்சு விட்டு (உயிரா - உயிர்த்து), மா இதழ் - கருமையான இதழ்கள், ஏந்திய - உயர்ந்த, மலிந்து வீழ் அரி பனி - மிகுந்த மென்மையான கண்ணீர்த் துளிகள் (ஐதாகிய கண்ணீர்த் துளி - பொ. வே. சோமசுந்தரனார்), செவ்விரல் கடைக்கண் சேர்த்தி - சிவந்த விரல்களைக் கடைக் கண்ணிடத்தில் சேர்த்து, சில தெறியா - சில துளிகள் தெறித்து (தெறியா - தெறித்து), புலம்பொடு வதியும் - துன்பத்துடன் வசிக்கும், தனிமையில் வசிக்கும்