நெடுநல்வாடை
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
மதுரைக்காஞ்சி
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
மலைபடுகடாம்
சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.
திருமுருகாற்றுப்படை
பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்
பொருநராற்றுப்படை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
சிறுபாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
பெரும்பாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
முல்லைப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
குறிஞ்சிப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
பட்டினப்பாலை
பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
நெடுநல்வாடை

தலைவியின் நிலை
பாடல் வரிகள்:- 136 - 147
பின் அமை நெடு வீழ் தாழத் துணை துறந்து
நல் நுதல் உலறிய சில் மெல் ஓதி,
நெடு நீர் வார் குழை களைந்தென குறுங்கண்
வாயுறை அழுத்திய வறிது வீழ் காதின், . . . .[140]
பொலந்தொடி தின்ற மயிர் வார் முன் கை
வலம்புரி வளையொடு கடிகை நூல் யாத்து,
வாளைப் பகுவாய் கடுப்ப வணக்குறுத்துச்
செவ்விரல் கொளீஇய செங்கேழ் விளக்கத்துப்
பூந்துகில் மரீஇய ஏந்து கோட்டு அல்குல் . . . .[145]
அம்மாசு ஊர்ந்த அவிர் நூல் கலிங்கமொடு
புனையா ஓவியம் கடுப்ப............ . . . .[136 - 147]
பின்னமை நெடுவீழ் தாழத் துணைதுறந்து
நன்னுத லுலறிய சின்மெல் லோதி
நெடுநீர் வார்குழை களைந்தெனக் குறுங்கண்
வாயுறை யழுத்திய வறிதுவீழ் காதிற் . . . .[140]
பொலந்தொடி தின்ற மயிர்வார் முன்கை
வலம்புரி வளையொடு கடிகைநூல் யாத்து
வாளைப் பகுவாய் கடுப்ப வணக்குறுத்துச்
செவ்விரற் கொளீஇய செங்கேழ் விளக்கத்துப்
பூந்துகின் மரீஇய வேந்துகோட் டல்கு . . . .[145]
லம்மா சூர்ந்த வவிர்நூற் கலிங்கமொடு
புனையா வோவியங் கடுப்பப் புனைவி
பொருளுரை:
முத்து மாலையைத் தாங்கிய பெரிய முலைகளையுடைய மார்பின் பின்னால் நீண்ட கூந்தல் தொங்கியது. கணவனிடமிருந்து பிரிந்ததால் அவளுடைய அழகிய நெற்றி ஒளியை இழந்தது. நெற்றியில் உலர்ந்த மென்மையான கூந்தல் படர்ந்திருந்தது. மிகுதியான ஒளியையுடைய நீண்ட காதணிகளை நீக்கி தாளுறை என்ற காதணிகளை அணிந்திருந்தாள், வடுவுடைய சிறிது தொங்கும் காதுகளில். பொன் வளையல்கள் தழும்பு உண்டாக்கிய மயிரையுடைய முன் கையில் வலம்புரிச் சங்கினால் செய்த வளையல்களுடன் காப்பு நூலைக் கட்டியிருந்தாள். வாளை மீனின் பகுத்த வாயைப் போலத் தோன்றும் வளைந்த சிவப்பு நிறமுடைய மோதிரத்தைச் செவ்விரலில் அணிந்திருந்தாள். மென்மையான ஆடையை முன்பு இடுப்பில் அணிந்த அவள் இப்பொழுது மாசு உடைய ஒளியுடைய நூல் ஆடையுடன் புனையாத ஓவியத்தைப் போன்று இருந்தாள்.
குறிப்பு:
பின் அமை நெடு வீழ் தாழ (137) - நச்சினார்க்கினியர் உரை - குத்துதல் அமைந்த நெடிய தாலி நாண் வீழ்ந்து கிடத்தல், பின்னுதல் அமைந்த நெடிய மயிர் தொங்க என்பாரும் உளர்.
சொற்பொருள்:
ஆரம் தாங்கிய அலர் முலை ஆகத்து - முத்து மாலையைத் தாங்கிய பெரிய முலைகளையுடைய மார்பில், பின் அமை - பின்னால், நெடு - நெடிய, வீழ் - வீழ்ந்த, தாழ - தொங்க, துணை துறந்து - கணவனிடமிருந்து பிரிந்து, நன் நுதல் - அழகிய நெற்றி, உலறிய - உலர்ந்த, ஒளி இழந்த, சில் மெல் ஓதி - சில மென்மையான கூந்தல், நெடு நீர் வார் குழை - மிகுதியான ஒளியுடைய நீண்ட காதணி, களைந்தென - நீக்கி விட, குறுங்கண் - சிறிய இடம், சிறிய ஓட்டை, வாயுறை - தாளுறை என்ற காதணி, அழுத்திய - அழுத்திய, வறிது வீழ் காதின் - சிறிது தொங்கும் காதுகளில், பொலந்தொடி - பொன் வளையல்கள், தின்ற - தழும்பு உண்டாக்கிய, மயிர் வார் முன் கை - மயிரையுடைய முன் கை, வலம்புரி வளையொடு - வலம்புரிச் சங்கினால் செய்த வளையல்களுடன், கடிகை நூல் யாத்து - காப்பு நூலைக் கட்டி, வாளைப் பகுவாய் - வாளை மீனின் பகுத்த வாய், கடுப்ப - போல, வணக்குறுத்து - வளைத்து, செவ்விரல் - சிவந்த விரல், கொளீஇய - அணிந்து, செங்கேழ் விளக்கத்து - சிவப்பு நிறமுடைய மோதிரத்து, பூந்துகில் மரீஇய - மென்மையான ஆடையை அணிந்த, ஏந்து கோட்டு அல்குல் - உயர்ந்த வளைவினையுடைய இடுப்புக்குக் கீழ் இருக்கும் பகுதி, அம்மாசு ஊர்ந்த - மாசு உடைய, அவிர் நூல் - ஒளியுடைய நூல், கலிங்கமொடு - ஆடையுடன், புனையா ஓவியம் கடுப்ப - புனையாத ஓவியத்தைப் போன்று