நெடுநல்வாடை

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

மதுரைக்காஞ்சி

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

மலைபடுகடாம்

சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.

திருமுருகாற்றுப்படை

பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்

பொருநராற்றுப்படை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

சிறுபாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

பெரும்பாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

முல்லைப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

குறிஞ்சிப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

பட்டினப்பாலை

பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

நெடுநல்வாடை


கட்டிலின் ஒப்பனை

பாடல் வரிகள்:- 124 - 135

மடை மாண் நுண் இழை பொலிய தொடை மாண்டு
முத்துடைச் சாலேகம் நாற்றி குத்துறுத்து, . . . .[125]

புலிப் பொறிக் கொண்ட பூங்கேழ்த் தட்டத்துத்
தகடு கண் புதையக் கொளீஇத் துகள் தீர்ந்து
ஊட்டுறு பல் மயிர் விரைஇ, வய மான்
வேட்டம் பொறித்து, வியன் கண் கானத்து
முல்லைப் பல் போது உறழப் பூ நிரைத்து, . . . .[130]

மெல்லிதின் விரிந்த சேக்கை மேம்படத்
துணை புணர் அன்னத் தூ நிறத் தூவி
இணை அணை மேம்படப் பாய் அணை இட்டு,
காடி கொண்ட கழுவுறு கலிங்கத்துத்
தோடு அமை தூ மடி விரிந்த சேக்கை . . . .[124 - 135]

பொருளுரை:

மூட்டுவாய்ச் சிறப்பாகப் பொருந்திய நுண்ணிய நூல் பொலியத் தொடுத்த சிறந்த முத்துக்களையுடைய பலகணிகள் போன்ற தொடர்மாலைகளைக் கட்டிலின் மேல் பகுதியைச் சுற்றித் தொங்கவிட்டு, புலியின் பொறிகளைப் பொறித்த அழகிய நிறத்தையுடைய தட்டம் போன்ற தகடுகளைக் கட்டிலின் கூரையில் இடம் மறையும்படி பொருத்தி, குற்றமற்ற, பல நிறங்களும் ஊட்டப்பட்ட மயிரைக் கலந்து உள்ளே வைக்கப்பட்ட, சிங்கத்தை வேட்டையாடும் காட்சியையும், அகன்ற இடத்தையுடைய காட்டில் மலரும் முல்லையுடன் அதைப் போன்ற பல மலர்களையும் வரைந்த போர்வையின் மேல், துணையுடன் இணைந்த அன்னத்தின் தூய மயிருடைய அணையை மேன்மையுண்டாக விரித்து, அதன் மேல் தலையணைகளை இட்டு, கஞ்சியைக் கொண்ட துவைத்த துணியில், மலர் இதழ்களுடன் விரித்த தூய படுக்கை.

குறிப்பு:

வய மான் வேட்டம் பொறித்து (128-129) - நச்சினார்க்கினியர் உரை - சிங்கம் முதலியவற்றை வேட்டையாடுகின்ற தொழில்களைப் பொறித்த தகடுகளை வைத்து.

சொற்பொருள்:

மடை - மூட்டுவாய், மாண் - மாண்பு, நுண் இழை பொலிய - நுண்ணிய நூல் பொலிய, தொடை - தொடுத்தல், மாண்டு - சிறந்து, முத்துடை - முத்துக்களையுடைய, சாலேகம் நாற்றி - பலகணிகள் போன்ற தொடர்மாலைகளைத் தொங்கவிட்டு, குத்துறுத்து - குத்தி, புலிப்பொறி கொண்ட - புலியின் பொறிகளைக் கொண்ட, பூங்கேழ்த் தட்டத்து - அழகிய நிறத்தையுடைய தட்டத்து, தகடு - தகடு, கண் புதைய - இடம் மறைய, கொளீஇ - கோர்த்து (கொளீஇ - சொல்லிசை அளபெடை), துகள் தீர்ந்து - குற்றமற்ற, ஊட்டுறு பன் மயிர் விரைஇ - பல நிறங்களும் ஊட்டப்பட்ட மயிரைக் கலந்து (விரைஇ - சொல்லிசை அளபெடை), வயமான் வேட்டம் பொறித்து - சிங்கம் வேட்டையாடுவதைப் பொறித்து, வியன் கண் கானத்து - அகன்ற இடத்தையுடைய காட்டில், முல்லைப் பல் போது உறழ - முல்லையுடன் பல மலர்களைக் கலந்து, பூ நிரைத்து - மலர்களை நிரம்பப் பொறித்து, மெல்லிதின் விரிந்த சேக்கை - மெல்லிதாக விரித்த போர்வை, மேம்பட - மேலே, மேன்மையுண்டாக, துணை புணர் அன்னத் தூ நிறத் தூவி - துணையுடன் இணைந்த அன்னத்தின் தூய மயிர், இணை அணை - இணைந்த அணை, மேம்பட பாய் - மேன்மையுண்டாக விரித்து, அணையிட்டு - தலையணைகளை இட்டு, காடி கொண்ட - கஞ்சியைக் கொண்ட, கழுவுறு கலிங்கத்து - துவைத்த துணியில், தோடு அமை - மலர் இதழ்களுடன், தூ மடி - தூய மடி, விரித்த சேக்கை - விரித்த படுக்கை