நெடுநல்வாடை

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

மதுரைக்காஞ்சி

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

மலைபடுகடாம்

சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.

திருமுருகாற்றுப்படை

பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்

பொருநராற்றுப்படை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

சிறுபாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

பெரும்பாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

முல்லைப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

குறிஞ்சிப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

பட்டினப்பாலை

பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

நெடுநல்வாடை


கருவறை

பாடல் வரிகள்:- 108 - 114

வரை கண்டன்ன தோன்றல, வரை சேர்பு
வில் கிடந்தன்ன கொடிய பல் வயின்,
வெள்ளி அன்ன விளங்கும் சுதை உரீஇ, . . . .[110]

மணி கண்டன்ன மாத்திரள் திண் காழ்
செம்பு இயன்றன்ன செய்வுறு நெடுஞ்சுவர்,
உருவப் பல் பூ ஒருகொடி வளைஇ,
கருவொடு பெயரிய, காண்பு இன் நல் இல் . . . .[108 - 114]

பொருளுரை:

மலையைக் கண்டது போன்ற உயர்ந்த தோற்றம். மலையில் உள்ள வானவில்லைப் போன்று பல இடங்களில் கொடிகள் இருந்தன. வெள்ளியைப் போன்ற சாந்தைத் தடவியிருந்தனர். நீலமணியைக் கண்டாற்போல் கருமையும் திரட்சியுமுடைய தூண்கள் அங்கு இருந்தன. செம்பினால் இயற்றியதைப் போல் செய்யப்பட உயர்ந்த சுவர்கள் இருந்தன. வடிவான பல மலர்களையுடைய ஒப்பற்ற வளைந்த கொடிகளை வரைந்திருந்தனர். கருவோடு பெயர்பெற்ற கருவறை இருந்தது, காண்பதற்கு இனிமையான அந்த நல்ல இல்லத்தில்.

குறிப்பு:

கருவொடு பெயரிய நல் இல் (114) - பொ. வே. சோமசுந்தரனார் உரை - கருவொடு பெயரிய நல் இல் என்றது கருப்பக்கிருகம் என்றவாறு. செம்புச் சுவர்: புறநானூறு 201 - செம்பு புனைந்து இயற்றிய சேண் நெடும் புரிசை, அகநானூறு 375, புறநானூறு 37 - செம்பு உறழ் புரிசை, மதுரைக்காஞ்சி 485 - செம்பு இயன்றன்ன செஞ்சுவர், நெடுநல்வாடை112 - செம்பு இயன்றன்ன செய்வுறு நெடுஞ் சுவர்.

சொற்பொருள்:

வரை கண்டன்ன தோன்றல - மலையைக் கண்டதுப் போன்ற தோற்றம், வரை சேர்பு வில் கிடந்தன்ன - மலையில் உள்ள வானவில்லைப் போன்று, கொடிய - கொடிகள் இருந்தன, பல் வயின் - பல இடங்களில், வெள்ளியன்ன சுதை உரீஇ - வெள்ளியைப் போன்ற சாந்தைத் தடவி (உரீஇ - சொல்லிசை அளபெடை), மணி கண்டு அன்ன - நீலமணியைக் கண்டாற்போல், மாத்திரள் திண் காழ் - கருமையும் திரட்சியுமுடைய தூண்கள், செம்பு இயன்றன்ன - செம்பால் இயற்றியதைப் போல், செய்வுறு நெடும் சுவர் - செய்யப்பட உயர்ந்த சுவர், உருவப் பல் பூ - வடிவான பல மலர்கள், ஒரு கொடி வளைஇ - ஒப்பற்ற கொடியை வளைத்து (வளைஇ - சொல்லிசை அளபெடை), கருவொடு பெயரிய - கருவறை என்று பெயர்பெற்ற, கருப்பக்கிருகம், காண்பு இன் நல் இல் - காண்பதற்கு இனிமையாக உள்ள நல்ல இல்லம்